ரேஷன் அட்டைதாரர்களுக்கு இனி LPG கேஸ் சிலிண்டர் இலவசம் – மாநில அரசு முக்கிய அறிவிப்பு!
நாடு முழுவதும் கேஸ் சிலிண்டர் விலை மிக கடுமையாக உயர்ந்துள்ளது பொதுமக்களுக்கு பெரும் சுமையாகவும், நெருக்கடியாகவும் உள்ளது. இந்நிலையில், கோவாவில் ரேஷன் கார்டுதாரர்களுக்கு இலவச கேஸ் சிலிண்டர் வழங்குவதற்கு பாஜக அரசு முடிவு செய்துள்ளது. இதுகுறித்த முடிவு விரைவில் கேபினட் கூட்டத்தில் எடுக்கப்பட இருக்கிறது. இதனால், ரேஷன் அட்டைதாரர்களுக்கு மூன்று கேஸ் சிலிண்டர் இலவசமாக கிடைக்கும். இது பொதுமக்களுக்கு நிவாரணம் அளிக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது.
ரேஷன் கார்டுக்கு இலவச சிலிண்டர்
உக்ரைன் – ரஷ்யா போர் காரணமாக சர்வதேச சந்தையில் கச்சா எண்ணெய் விலை கடுமையாக உயர்ந்ததால் பெட்ரோல், டீசல் விலை, வீட்டு உபயோக சமையல் எரிவாயு சிலிண்டர் விலையும் உயர்த்தப்பட்டு உள்ளது. இதனால் சாமானிய மக்கள் முதல் நடுத்தர மக்கள் கடும் அவதிக்கு உள்ளாகியுள்ளனர். கோவாவில் அண்மையில் சட்டமன்றத் தேர்தல் நடைபெற்று பாஜக மீண்டும் ஆட்சியைப் பிடித்துள்ளது. இதன்படி கோவா முதல்வராக பிரமோத் சாவந்த் பதவியேற்றுள்ளார். தேர்தலுக்கு முன்பாக பாஜக தேர்தல் அறிக்கையில் இலவச கேஸ் சிலிண்டர் வழங்கப்படும் மற்றும் ரேஷனில் குறைந்த விலைக்கு பொருட்கள் வழங்கப்படும் என வாக்குறுதி அளிக்கப்பட்டது.
இந்த வாக்குறுதிகளை நிறைவேற்றும் விதமாக ரேஷன் அட்டைதாரர்களுக்கு ஆண்டுக்கு மூன்று கேஸ் சிலிண்டர் இலவசமாக வழங்கப்படும் என அதிகாரப்பூர்வமாக அறிவித்தார். இதன்படி ஏப்ரல் முதல் எல்லா குடும்பங்களுக்கும் ஆண்டுக்கு 3 கேஸ் சிலிண்டர்கள் இலவசமாக வழங்கப்படும். இது பொதுமக்களுக்கு மகிழ்ச்சி அளிக்கும் செய்தியாக உள்ளது. மேலும் ரேஷன் அட்டைதாரர்களுக்கு இலவச கேஸ் சிலிண்டர் வழங்குவது குறித்த முன்மொழிதலை தயாரிக்கும்படி கோவா உணவுத்துறை அமைச்சர் ரேகா ஆர்யா தனது துறை அதிகாரிகளுக்கு உத்தரவிட்டுள்ளார். இந்த முன்மொழிதலுக்கு அடுத்த கேபினட் கூட்டத்தில் ஒப்புதல் கிடைக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது. இந்த அறிவிப்பால் அந்தியோதயா ரேஷன் கார்டு வைத்திருக்கும் அனைவரும் பயன் பெறுவார்கள்.
இதன் அடிப்படையில் சுமார் 1.84 லட்சம் குடும்பங்கள் பயனடையும் என மதிப்பிடப்பட்டுள்ளது. இதை தொடர்ந்து ரேஷன் கடைகளில் மலிவு விலைக்கு உணவுப் பொருட்களை விற்பனை செய்வதற்கான நடவடிக்கைகளும் தொடங்கி உள்ளன. குறிப்பாக சர்க்கரையை குறைந்த விலைக்கு விற்பனை செய்ய திட்டமிடப்பட்டுள்ளது. மேலும், அந்தியோதயா ரேஷன் கார்டுதாரர்களுக்கு சமையல் எண்ணெய் மானிய விலையில் விற்பனை செய்ய நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது. இதை தொடர்ந்து அடுத்த மூன்று ஆண்டுகளுக்கு பெட்ரோல், டீசல் மீது மாநில வரிகள் உயர்த்தப்படாது எனவும் பாஜக தேர்தல் அறிக்கையில் வாக்குறுதி அளித்தது. மேலும், பென்ஷன் தொகை 3000 ரூபாயாக உயர்த்தப்படும் என வாக்குறுதி அளித்து உள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.