தமிழகத்தில் ஜூலை 28ம் தேதி செஸ் ஒலிம்பியாட் 2022 – 4 மாவட்டங்களுக்கு உள்ளூர் விடுமுறை அறிவிப்பு!
சர்வதேச அளவிலான செஸ் ஒலிம்பியாட் போட்டி தமிழகத்தின் மாமல்லபுரத்தில் ஜூலை 28ல் துவங்க உள்ள நிலையில் சென்னை உள்பட அன்றைய தினம் 4 மாவட்டங்களுக்கு உள்ளூர் விடுமுறை அளிக்கப்பட்டுள்ளது. மேலும் பிரதமர் நரேந்திர மோடிக்கு தமிழக அரசு சார்பில் திமுக எம்பிக்கள் டிஆர் பாலு, கனிமொழி, அமைச்சர் மெய்யநாதன், தமிழக தலைமை செயலாளர் இறையன்பு ஆகியோர் அழைப்பு விடுத்து உள்ளனர்.
உள்ளூர் விடுமுறை:
சர்வதேச அளவிலான 44வது செஸ் ஒலிம்பியாட் போட்டிகள் நடத்த முடிவு செய்யப்பட்டுள்ளது. இதுவரை 43 முறை செஸ் ஒலிம்பியாட் போட்டிகள் நடந்திருந்தாலும் கூட அதில் ஒன்று கூட இந்தியாவில் நடைபெறவில்லை. இந்தியாவில் முதல் முறையாக அதுவும் தமிழகத்தில் செஸ் ஒலிம்பியாட் போட்டி நடைபெற உள்ளது. மாமல்லபுரத்தில் செஸ் ஒலிம்பியாட் போட்டிகள் ஜூலை 28ம் தேதி துவங்கி ஆகஸ்ட் 10 வரை நடக்க இருக்கின்றன. இதற்கான தொடக்க விழா சென்னை நேரு உள் விளையாட்டரங்கில் நடைபெற உள்ளது.
ஆகஸ்ட் மாதத்தில் வங்கிகளுக்கு 9 நாட்கள் விடுமுறை – முழு பட்டியல் இதோ!
மொத்தம் 186 நாடுகளை சேர்ந்த 2 ஆயிரத்துக்கும் அதிகமான சர்வதேச செஸ் விளையாட்டு வீரர்கள், வீராங்கனைகள் கலந்துகொள்ள உள்ளனர். வீரர்கள் இன்று முதல் வருகை தர துவங்கி உள்ளனர். மேலும் பிரமாண்டமான இந்த செஸ் ஒலிம்பியாட் போட்டியின் துவக்க விழாவில் முதல்வர் ஸ்டாலின், பிரதமர் நரேந்திர மோடி பங்கேற்க உள்ளனர். மேலும் சென்னை நேரு உள் விளையாட்டரங்கில் நடைபெற்று வரும் முன்னேற்பாடு பணிகளை, இளைஞர் நலன் மற்றும் விளையாட்டுத் துறை அமைச்சர் மெய்யநாதன், பொதுப்பணித்துறை அமைச்சர் ஏ.வ.வேலு ஆகியோர் நேற்று ஆய்வு செய்தனர்.
பின்னர் அமைச்சர் ஏ.வ.வேலு செய்தியாளர்களைச் சந்தித்தார். அப்போது அவர் கூறியது, 44-வது செஸ் ஒலிம்பியாட் போட்டிகள் சென்னையில் நடைபெறுவதால், சென்னை மற்றும் அதனைச் சுற்றியுள்ள திருவள்ளூர், செங்கல்பட்டு மற்றும் காஞ்சிபுரம் ஆகிய 4 மாவட்டங்களுக்கு வரும் 28-ம் தேதி உள்ளூர் விடுமுறை அளிக்க தமிழக முதல்வர் உத்தரவிட்டுள்ளார். எனவே, இந்தப் பகுதிகளில் அன்றைய தினம் கட்டாயம் உள்ளூர் விடுமுறை விடப்படும் என்று அவர் கூறினார்.