தமிழகத்தில் தொடர்ந்து தள்ளிப்போகும் LKG, UKG வகுப்புகள் – பெற்றோர்கள் ஏமாற்றம்!
தமிழ்நாட்டில் அங்கன்வாடியில் நடப்பு கல்வியாண்டு எல்கேஜி, யுகேஜி வகுப்புகள் எப்போது தொடங்கும் என பெற்றோர்கள் எதிர்பார்ப்பில் இருந்தனர். அவர்களுக்கு ஏமாற்றம் அளிக்கும் வகையில், வகுப்புகள் தொடக்கம் தள்ளிப் போவதாக தகவல் வெளியாகி உள்ளது.
பெற்றோர்கள் ஏமாற்றம்:
தமிழ்நாட்டில் அரசுப் பள்ளிகளில் மாணவர் சேர்க்கையை அதிகரிக்கும் வகையில் கடந்த 2018 ஆம் ஆண்டு அதிமுக ஆட்சியில் எல்கேஜி மற்றும் யுகேஜி வகுப்புகள் தொடங்கப்பட்டன. சுமார் 2 ஆயிரத்து 381 பள்ளிகளில் தொடங்கப்பட்ட எல்கேஜி மற்றும் யுகேஜி வகுப்புகளுக்காக ஏராளமான தொடக்கப் பள்ளி ஆசிரியர்கள் பணிமாற்றம் செய்யப்பட்டு பணியமர்த்தப்பட்டனர். இதற்கு பெற்றோர் மத்தியிலும் நல்ல வரவேற்பு இருந்தது. இதனிடையே கொரோனா பரவல் காரணமாக கடந்த 2 ஆண்டுகளாக எல்கேஜி மற்றும் யுகேஜி வகுப்புகள் நடைபெறாமல் இருந்தன.
Exams Daily Mobile App Download
நடப்பு கல்வியாண்டில் கல்வித்துறை சார்பில் 2,381 அங்கன்வாடி மையங்களில் எல்கேஜி, யுகேஜி வகுப்புகளில் மாணவர் சேர்க்கை நடத்தப்படாது என்று தகவல்கள் வெளியாயின. இது குறித்து பள்ளிக்கல்வித்துறை அமைச்சர் அன்பில் மகேஷ் பொய்யாமொழி விளக்கம் அளித்தார். இது குறித்து அவர், அரசு பள்ளிகளில் எல்கேஜி, யுகேஜி வகுப்புகள் நிறுத்தப்படவில்லை என்றும், அரசு பள்ளியில் பள்ளிக் கல்வித்துறையின் கீழ் இருந்த எல்கேஜி மற்றும் யுகேஜி வகுப்புகள் சமூக நலத்துறையின் கீழ் இயங்கும் அங்கன்வாடிக்கு மாற்றம் செய்யப்பட்டுள்ளது என்றும் தெரிவித்தார். எனவே அருகில் உள்ள அங்கன்வாடி மையங்களில் குழந்தைகளை சேர்த்துக்கொள்ளலாம் என்று தெரிவித்திருந்தார்.
மேலும் எல்கேஜி மற்றும் யுகேஜி வகுப்புகளுக்காக பணியமர்த்தப்பட்ட ஆசிரியர்கள், மீண்டும் அவர்கள் ஏற்கனவே பணியாற்றிய ஆரம்ப நடுநிலைப் பள்ளிகளுக்கு மாற்றம் செய்யப்படுவதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. அதுமட்டுமின்றி மீண்டும் மழலையர் வகுப்புகளுக்கு தேவையான ஆசிரியர்களை சமூக நலத்துறை தரப்பில் பூர்த்தி செய்ய நடவடிக்கை மேற்கொண்டு வருவதாக தகவல் வெளியாகியுள்ளது. தற்போது எல்கேஜி யுகேஜி வகுப்புகள் தொடங்கப்படாமல் இருப்பதால் அரசுப் பள்ளிகளில் சேரலாம் என்றிருந்த மாணவர்கள் தற்போது மீண்டும் தனியார் பள்ளிகளை நோக்கி அதிக கட்டணங்களைச் செலுத்தி சேரக்கூடிய நிலைக்கு தள்ளப்பட்டுள்ளனர். இந்நிலையில் தற்போது எல்கேஜி மற்றும் யுகேஜி வகுப்புகள் தொடங்க வாய்ப்பில்லை, வரும் ஆகஸ்ட் மாதம் திறக்க வாய்ப்பு உள்ளதாக கல்வித்துறை வட்டாரங்கள் தகவல்கள் தெரிவிக்கின்றன.