தமிழகத்தில் பிப்.19ம் தேதி அனைவருக்கும் சம்பளத்துடன் விடுமுறை – மீறினால் கடும் நடவடிக்கை!
தமிழகத்தில் பிப்ரவரி 19ம் தேதி நகர்புற உள்ளாட்சி தேர்தல் நடைபெறவுள்ளது. தேர்தலன்று வாக்களிக்க விடுப்பு எடுக்கும் தொழிலாளர்களுக்கு சம்பள பிடித்தம் கூடாது என்று அரசு உத்தரவிட்டுள்ளது.
உள்ளாட்சி தேர்தல்:
தமிழகத்தில் கடந்த 2021 அக்டோபர் மாதம் புதிதாக பிரிக்கப்பட்ட 9 மாவட்டங்களுக்கு 2 கட்டங்களாக உள்ளாட்சி தேர்தல் சிறப்பாக நடைபெற்று முடிந்தது. அதன் தொடர்ச்சியாக நகர்புறங்களுக்கு உள்ளாட்சி தேர்தலை ஜனவரி மாதத்திற்குள் நடத்தி முடிக்க உச்ச நீதிமன்றம் உத்தரவிட்டுள்ள நிலையில் தேர்தலை நடத்துவதற்கான பணிகளில் தேர்தல் ஆணையம் தீவிரம் காட்டியது. அதன்படி அனைத்து வார்டுகளிலும் வாக்காளர் பட்டியல் வெளியிடப்பட்டது. மேலும் கடந்த ஜனவரி 28ம் தேதி முதல் தேர்தலுக்கான வேட்புமனு தாக்கல் செய்யும் பணிகள் நடைபெற்றது.
அதனை தொடர்ந்து கடந்த வாரம் இறுதி வேட்பாளர் பட்டியலும் வெளியானது. பிப்ரவரி 19ம் தேதி அன்று தமிழகம் முழுவதும் நகர்ப்புற உள்ளாட்சி தேர்தல் நடைபெறும் என்று தேர்தல் ஆணையம் தெரிவித்துள்ளது. தேர்தல் தேதி அறிவித்ததை அடுத்து அனைத்து அரசியல் கட்சியினரும் தேர்தல் பிரச்சாரத்தில் தீவிரம் காட்டி வருகின்றனர். மேலும் ஆசிரியர்கள், அரசு ஊழியர்கள் தேர்தல் பணி அலுவலர்களாகவும் நியமிக்கப்பட்டுள்ளனர். பள்ளிகள் வாக்குப்பதிவு மையங்களாக செயல்படவுள்ளதால் பள்ளிகளுக்கு பிப்ரவரி 19 முதல் 22ம் தேதி வரை விடுமுறை அளிக்கப்படவுள்ளதாக தகவல்கள் வந்துள்ளது.
அதனை தொடர்ந்து தேர்தல் நடைபெறும் நாளன்று பொது விடுமுறையும் அறிவிக்கப்பட்டுள்ளது. தேர்தலன்று வாக்களிக்க விடுப்பு எடுக்கும் தொழிலாளர்களுக்கு சம்பள பிடித்தம் கூடாது என்று அரசு உத்தரவிட்டுள்ளது. வாக்குப்பதிவு நாளன்று வாக்குரிமை உள்ள அனைவருக்கும் விடுப்பு வழங்க வேண்டும் விடுப்பிற்கு சம்பள பிடித்தமோ, சம்பளக் குறைப்போ செய்ய கூடாது. அரசின் இந்த உத்தரவுகளை மீறும் நிறுவனங்கள் மற்றும் தொழிற்சாலைகள் மீது கடும் நடவடிக்கை எடுக்கப்படும் என்று தமிழக அரசு எச்சரித்துள்ளது.