தமிழக அரசு ஊழியர்களுக்கு ஷாக் அறிவிப்பு – ஈட்டிய விடுப்பை பணமாக மாற்ற மீண்டும் தடை!
தமிழகத்தில் கொரோனா காரணமாக அரசு ஊழியர்களுக்கு ஈட்டிய விடுப்பை பணமாக மாற்றி பெறும் நடைமுறையை கடந்த 2020ம் ஆண்டு முதல் 2021ம் ஆண்டு வரை நிறுத்தி வைக்கப்பட்டது. இதனை தற்போது இந்த ஆண்டும் நிறுத்தி வைக்க உள்ளதாக தமிழக அரசு அரசாணையை வெளியிட்டுள்ளது.
அரசு ஊழியர்கள் கவனத்திற்கு
தமிழகத்தில் கொரோனா பெருந்தொற்று பரவல் காரணமாக அரசு பொருளாதார நெருக்கடி நிலை ஏற்பட்டது. மேலும் நெருக்கடி நிலையை சமாளிக்க பல்வேறு நடவடிக்கைகளை மேற்கொண்டது. இதில் குறிப்பாக அரசு ஊழியர்களுக்கு அகவிலைப்படி உயர்வு ஆண்டுக்கு இரு முறை வழங்கப்படும். இதனை கடந்த 2020ம் ஆண்டு நிறுத்தி வைத்தது. கடந்த ஆண்டும் அகவிலைப்படி வழங்கப்படவில்லை. தற்போது கொரோனா பரவல் குறையத் தொடங்கிய நிலையில் அரசு ஊழியர்களுக்கு படிப்படியாக பல்வேறு சலுகைகளை வழங்கி வருகிறது.
அதன் தொடர்ச்சியாக கடந்த ஜனவரி மாதம் முதல் மத்திய அரசு ஊழியர்களுக்கு இணையாக 31% அகவிலைப்படியை தமிழக அரசு ஊழியர்களும் பெற்று வருகின்றனர். இதனை தொடர்ந்து தமிழகத்தில் அரசு ஊழியர்கள், ஆசிரியர்களுக்கு ஆண்டுக்கு 15 நாட்கள் வரை விடுப்பு எடுத்துக் கொள்ள அனுமதி வழங்கப்பட்டுள்ளது. இந்த விடுமுறை எடுக்காதவர்களுக்கு ஆண்டின் முடிவில் 15 நாட்களுக்குரிய சம்பளம் எவ்வித பிடிப்பும் இன்றி வழங்கப்படும். இதனை 2 ஆண்டுகளுக்கு ஒரு முறை என 30 நாட்கள் அதாவது ஒரு மாத ஊதியமாகவும் அரசு ஊழியர்கள் மற்றும் ஆசிரியர்கள் விண்ணப்பித்து பெற்றுக் கொள்ளலாம்.
இந்த நிலையில் கடந்த 2020ம் ஆண்டு கொரோனா தடுப்பு பணிகளை மேற்கொண்டதால் அரசுக்கு பற்றாக்குறை ஏற்பட்டது. அதனால் அரசு ஊழியர்கள் மற்றும் ஆசிரியர்களுக்கு ஈட்டிய விடுப்பை பணமாக மாற்றி பெறுவதை தடை செய்தது. கடந்த 2021ம் ஆண்டும் இதற்கு தொடர்ந்து தடை நீடித்தது. இந்த ஆண்டு கொரோனா பரவல் கட்டுக்குள் உள்ளதால் இதற்கான தடை நீக்கப்படும் என்று எதிர்பார்க்கப்பட்டது. இந்த நிலையில் அரசு ஊழியர்கள் மற்றும் ஆசிரியர்களுக்கு ஈட்டிய விடுப்பை பணமாக மாற்றி பெறுவதற்கு இந்த ஆண்டும் தடை தொடரும் என்று தமிழக அரசு அரசாணை பிறப்பித்துள்ளது. இந்த தடை மறு அறிவிப்பு வரும் வரை அமலில் இருக்கும் என்றும் அறிவிக்கப்பட்டுள்ளது.