கள்ளக்குறிச்சி விவகாரம், தண்டோரா மூலம் எச்சரிக்கை – பொருட்களை மீண்டும் ஒப்படைத்த பொதுமக்கள்!
கள்ளக்குறிச்சி பள்ளி மாணவி மர்ம மரணம் விவகாரம் தொடர்பான கலவரத்தின் போது பள்ளிகளுக்குள் புகுந்து பொருட்களை எடுத்துச் சென்றவர்கள் அதனை பள்ளிக்கு அருகே வைத்துச் செல்ல வேண்டும் என தண்டோரா மூலம் எச்சரிக்கை விடப்பட்டது. தண்டோரா மூலம் எச்சரிக்கை விடுத்த நிலையில், பொதுமக்கள் இரவு நேரங்களில் பொருட்களை ஒப்படைத்தனர் என காவல்துறை சார்பில் தெரிவிக்கப்பட்டு உள்ளது.
தண்டோரா மூலம் எச்சரிக்கை:
கள்ளக்குறிச்சி மாவட்டம், சின்னசேலம் அருகே கனியாமூர் சக்தி மெட்ரிகுலேசன் பள்ளியில் 12ம் வகுப்பு படித்து வந்த மாணவி ஸ்ரீமதி கடந்த 13-ம் தேதி மர்மமான முறையில் தற்கொலை செய்து கொண்டார். இந்த இறப்பில் சந்தேகம் இருப்பதாக கூறி அவரது பெற்றோர்கள், உறவினர்கள் போராட்டத்தில் ஈடுபட்டு வந்தனர். இந்த போராட்டம் நடந்த 17-ம் தேதி அங்கு வன்முறை வெடித்தது. இந்த கலவரத்தை பயன்படுத்தி கொண்டு பள்ளிக்கு அருகில் இருந்த பல்வேறு கிராமங்களைச் சேர்ந்த பொதுமக்கள் பள்ளிக்குள் இருந்த மேஜை, நாற்காலிகள், வகுப்பறைகளில் இருந்த டேபிள், பென்ச், சமையல் பாத்திரங்கள், ஏசி இயந்திரங்கள், கணினிகள் என கையில் கிடைத்த பொருட்களை எல்லாம் தூக்கி சென்றனர்.
Exams Daily Mobile App Download
இதைத்தவிர, பள்ளி பின்புறம் உள்ள வளாகத்தில் கட்டப்பட்டிருந்த ஆடு, மாடு, கோழி உள்ளிட்டவற்றையும் தூக்கிச் சென்றனர். இதுகுறித்த வீடியோ காட்சிகள் சமூக வலைதளங்களில் வைரலாக பரவியது. இந்த சூழலில், பள்ளியில் இருந்து எடுத்துச் சென்ற பொருட்களை மீண்டும் பள்ளி வளாகத்திலேயே கொண்டு வந்து வைக்கும்படி, சின்னசேலம் வட்டாட்சியர் உத்தரவின் பேரில், கிராம உதவியாளர் கனியாமூர் கிராமத்தை சுற்றியுள்ள பகுதிகளில் புதன்கிழமை தண்டோரா மூலம் மக்களுக்கு தகவல் தெரிவித்துள்ளனர்.
கள்ளக்குறிச்சி பள்ளி வன்முறையால் பாதிக்கப்பட்ட ஆசிரியர்கள் – தீயில் கருகிய சான்றிதழ்கள்!
இதனால், அப்பகுதியை சுற்றியுள்ள கிராம மக்கள், பள்ளியில் இருந்து எடுத்து சென்ற பொருட்களை, கனியாமூர் கும்பக்கோட்டாய் மாரியம்மன் கோவில் வளாகத்தில் போட்டுவிட்டுச் சென்றனர். இதுகுறித்து தகவலின் பேரில், டேபிள், சேர்களை போட்டு விட்டுச் சென்ற கோயில் வளாகத்தில் போலீசார் தற்போது பாதுகாப்பு பணியில் ஈடுபட்டுள்ளனர். இது மட்டுமன்றி சின்னசேலம் அருகே உள்ள கிராமத்தைச் சேர்ந்த நபர் ஒருவர், சுமார் 16 நகை செட்டுகளை, சின்னசேலம் காவல் நிலையத்தில் ஒப்படைத்தார். மேலும் தற்போது பொருட்கள் வைக்கப்பட்டுள்ள பகுதியில், காவலர்கள் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டுள்ளனர் என்பது குறிப்பிடத்தக்கது.