சென்னை செம்மொழித் தமிழாய்வு மத்திய நிறுவனத்தில் வேலை வாய்ப்பு – விண்ணப்பங்கள் வரவேற்பு!
சென்னை, பெரும்பாக்கத்தில் உள்ள செம்மொழித் தமிழாய்வு மத்திய நிறுவனத்தில் பகராண்மை அல்லது ஒப்பந்த அடிப்படையில் பதிவாளர், நிதி அலுவலர் பதவிகள் நிரப்பப்பட உள்ளது. மேலும் இந்த பணியிடங்களுக்கு தகுதியானவர்களிடம் இருந்து விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றன.
வேலைவாய்ப்பு:
உலகின் மூத்த மொழியாம், சொல் வளமும், இலக்கிய வளமும் கொண்ட தமிழ் மொழி 2004-ஆம் ஆண்டு, அக்டோபர் 12ஆம் நாள் ஒன்றிய அரசால் செம்மொழியாக அறிவிக்கப்பட்டது. பின்னர் 2008-ஆம் ஆண்டில் செம்மொழித் தமிழாய்வு மத்திய நிறுவனம் எனத் தன்னாட்சி பெற்ற நிறுவனமாக சென்னையில் அமையப்பெற்றது. செம்மொழித் தமிழாய்வு மத்திய நிறுவனம் 41 செவ்வியல் தமிழ் நூல்களின் ஆய்வுக்கு முதலிடம் வழங்கி வருகிறது. இந்நிறுவனம், தமிழ் மொழி ஆய்விலும், அதன் மேம்பாட்டிலும் தனிக்கவனம் செலுத்தி வருகிறது.
மத்திய அரசு ஊழியர்களின் டிஏ உயர்வு எப்போது? – 7வது சம்பள கமிஷன் அப்டேட்!
செம்மொழித் தமிழின் தொன்மையையும், தனித் தன்மையையும், அவற்றின் மரபுத்தொடர்ச்சியையும் ஆராய்ந்து பாதுகாப்பதை முக்கிய நோக்கமாக இந்நிறுவனம் கொண்டுள்ளது. இந்நிலையில் இந்த செம்மொழித் தமிழாய்வு மத்திய நிறுவனத்தில் பகராண்மை அல்லது ஒப்பந்த அடிப்படையில் பதிவாளர் , நிதி அலுவலர் பதவிகளுக்கு விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றன. அறிவிப்பின்படி, மொத்தம் 2 காலி பணியிடங்கள் உள்ளன. மேலும் தகுதியானவர்கள் தேர்ந்தெடுக்கப்பட்டு பதிவாளர் நிலை 12 அடிப்படையில் ஊதியம் வழங்கப்படும். நிதி அலுவலர் நிலை 11 அடிப்படையில் ஊதியம் வழங்கப்படும் என அறிவிக்கப்பட்டு உள்ளது.
மேலும் நிறைவு செய்யப்பட்ட விண்ணப்பங்கள் “இயக்குநர், செம்மொழித் தமிழாய்வு மத்திய நிறுவனம் , செம்மொழிச் சாலை , பெரும்பாக்கம்,சென்னை 600 100” என்ற முகவரிக்கு, இந்த வேலைவாய்ப்பு அறிவிப்பு விளம்பரம் வெளியிட்ட நாளிலிருந்து 30 நாளுக்குள் அனுப்புதல் வேண்டும். அதாவது ஆகஸ்ட் மாதம் 22ம் தேதிக்குள் இந்த பணியிடங்களுக்கு விண்ணப்பிக்க வேண்டும் என தெரிவிக்கப்பட்டு உள்ளது. காலம் கடந்து வரும் விண்ணப்பங்கள் ஏற்கப்பட மாட்டாது. மேலும் விவரங்களுக்கு அதிகாரப்பூர்வ இணையதளத்திற்கு சென்று தெரிந்து கொள்ளலாம்.