தமிழகத்தில் கூட்டுறவு வங்கிகளில் நகைக்கடன் தள்ளுபடி – வலுக்கும் போராட்டம்!
தமிழகத்தில் கூட்டுறவு வங்கிகளில் 5 சவரனுக்கு உட்பட்ட நகைக்கடன் பெற்றவர்களில் தகுதியான நபர்களுக்கு கடன் தள்ளுபடி வழங்கப்பட்டு வருகிறது. அதன் தொடர்ச்சியாக வில்லிசேரி தொடக்க வேளாண்மைக் கூட்டுறவு சங்கத்தில் நகைக்கடன் பெற்ற அனைவருக்கும் கடன் தள்ளுபடி செய்ய வேண்டும் என்று போராட்டம் நடத்தி வருகின்றனர்.
நகைக்கடன் தள்ளுபடி
தமிழக சட்டசபையில் கடந்த ஆண்டு செப்டம்பர் மாதத்தில் கூட்டுறவு வங்கிகளில் 5 சவரனுக்கு உட்பட்ட நகைக்கடன் பெற்றவர்களுக்கு கடன் தள்ளுபடி செய்யப்படும் என்று தமிழக முதல்வர் அறிவித்திருந்தார். ஆனால் இதில் தொடர்ந்து பல்வேறு முறைகேடுகள் நடைபெற்று வந்தது. இது தொடர்பாக பல்வேறு ஆய்வுகள் மேற்கொள்ளப்பட்டது. இந்த ஆய்வின் முடிவில் வங்கி அதிகாரி உட்பட சிலர் இதற்கு உடந்தையாக இருப்பது கண்டறியப்பட்டது. அதனால் தள்ளுபடி பெற தகுதியான நபர்களுக்கு சில நிபந்தனைகள் விதிக்கப்பட்டது.
Exams Daily Mobile App Download
இதில் அரசு ஊழியர்கள், ஒரே நபர் ஒன்றுக்கு மேற்பட்ட வங்கிகளில் கடன் பெறுவது உள்ளிட்டவர்களுக்கு கடன் தள்ளுபடி செய்யப்பட மாட்டாது என்று அரசு அறிவித்தது. அதன்படி நகைக்கடன் தள்ளுபடிக்கு விண்ணப்பித்த 48 லட்ச நபர்களின் விவரங்கள் பரிசீலனை செய்யப்பட்டதில் இந்த நிபந்தனைக்குட்பட்ட நபர்களுக்கு மட்டுமே கடன் தள்ளுபடி செய்யப்படும் என்று அறிவிக்கப்பட்டுள்ளது. இதில் 13 லட்சம் நபர்கள் மட்டுமே கடன் தள்ளுபடிக்கு தகுதியானவர்கள் என்று பட்டியல் வெளியிடப்பட்டது. அதன்படி தற்போது தகுதியான நபர்களுக்கு கடன் தள்ளுபடி செய்யப்பட்டு வருகிறது.
இந்த நிலையில் வில்லிசேரி தொடக்க வேளாண்மைக் கூட்டுறவு கடன் சங்கத்தில் 936 போ் நகைகளை அடமானம் வைத்து நகைக்கடன் பெற்றுள்ளனர். இதில் 343 போ் மட்டுமே நகைக்கடன் தள்ளுபடி பெற தகுதியானவர்கள் என்று பட்டியலில் குறிப்பிடப்பட்டுள்ளது. அதனால் தற்போது வில்லிசேரி கிராம மக்கள் அனைவருக்கும் கடன் தள்ளுபடி செய்யப்பட வேண்டும் என்று ஆட்சியரிடம் மனு அளித்தனர். இது குறித்து மாவட்ட ஆட்சியர் எந்த நடவடிக்கையும் எடுக்காததால் கிராம மக்கள் அனைவரும் கோவில்பட்டி கோட்டாட்சியர் அலுவலகத்தில் வியாழக்கிழமை அன்று போராட்டம் நடத்தினர். இதையடுத்து கோட்டாட்சியா் கிராம மக்களிடம் பேச்சு வார்த்தை நடத்தினார். மேலும் இது குறித்து ஆட்சியரிடம் தகவல் தெரிவித்து விரைவில் நடவடிக்கை எடுக்கப்படும் என்று தெரிவித்துள்ளார்.