சென்னையில் ஜூன் 26 வரை தீவிர தூய்மைப்பணி – மாநகராட்சி ஆணையர் அறிவிப்பு!
தமிழகத்தின் தலைநகர் சென்னையில் திடக்கழிவுகளை அகற்றும் தீவிர தூய்மைப்பணி ஒரு வார காலத்திற்கு ஜூன் 26 வரை நடைபெறவுள்ளது என மாநகராட்சி ஆணையர் ககன்தீப் சிங் பேடி தெரிவித்துள்ளார்.
தூய்மைப்பணி தொடக்கம்:
தமிழகத்தின் தலைநகர் சென்னையை தூய்மைபடுத்தும் பணிகள் தொடங்கியுள்ளது. இந்த பணிகளுக்காக ஏராளமான பணியாளர்கள் நியமிக்கப்பட்டுள்ளனர். மேலும் மாநகராட்சியின் சார்பில் தீவிர தூய்மைப் பணிகளைக் கண்காணிக்க அனுபவம் வாய்ந்த பொறியாளர்கள் கண்காணிப்பு அலுவலர்களாக நியமிக்கப்பட்டுள்ளனர். மாநகரத்தின் அனைத்து பகுதிகளிலும் தேங்கியுள்ள திடக்கழிவுகளை முழுவதுமாக அகற்றி சென்னை மாவட்டத்தை தூய்மைபடுத்தும் பணியில் மாநகராட்சி இறங்கியுள்ளது.
FDல் அதிக பலன்களை தரும் அஞ்சலக சேமிப்பு திட்டம் – முழு விவரங்கள் இதோ!
சென்னை மாநகராட்சியில் நாள்தோறும் சராசரியாக 5,000 மெட்ரிக் டன் குப்பை சேகரிக்கப்பட்டு குறிப்பிட்ட அளவு குப்பை மக்கும் மற்றும் மக்காத குப்பைகளாக தரம் பிரிக்கப்பட்டு, இயற்கை உரமாகவும் மற்றும் உயிரி எரிவாயுவாகவும் பயன்படுத்தப்பட்டு வருகிறது. மேலும், உலர் கழிவுகள் தரம் பிரிக்கப்பட்டு மறு உபயோகத்திற்கும், மறுசுழற்சிக்கும் பயன்படுத்தப்பட்டு வருகிறது. மேலும் 3,260 மெட்ரிக் டன் குப்பைகள் மற்றும் 10,085 மெட்ரிக் டன் கட்டிட கழிவுகள் என, மொத்தம் 13,345 மெட்ரிக் டன் கழிவுகள் அகற்றப்பட்டு அவ்விடங்கள் தூய்மையாக பராமரிக்கப்பட்டுள்ளன என மாநகராட்சி ஆணையர் கூறியுள்ளார்.
TN Job “FB Group” Join Now
அதனை தொடர்ந்து தற்போது பெருநகர சென்னை மாநகராட்சிக்கு உட்பட்ட 15 மண்டலங்களில் உள்ள 614 இடங்கள் கண்டறியப்பட்டு, 21.06.2021 முதல் 26.06.2021 வரை ஒரு வார காலத்திற்கு தீவிர தூய்மைப்பணி நடைபெறவுள்ளது. இந்த தூய்மை பணியில் 1,000 மெட்ரிக் டன் குப்பைகள் மற்றும் 4,500 மெட்ரிக் டன் கட்டிட கழிவுகள் அகற்ற இலக்கு நிர்ணயிக்கப்பட்டுள்ளது. மாதந்தோறும் ஒருவார காலத்திற்கு தீவிர தூய்மைப்பணி மேற்கொள்ள நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது. ஏற்கனவே கடந்த மாதம் 10 நாட்கள் திடக்கழிவுகள் அகற்றும் பணி நடைபெற்றது என சென்னை மாநகராட்சி ஆணையர் ககன்தீப்சிங் பேடி குறிப்பிட்டுள்ளார்.