மீண்டும் புதிய கட்டுப்பாடுகள் விதிப்பு – காலரா பரவல் எதிரொலி!
காரைக்காலில் காலராவால் பாதிக்கப்பட்ட 2 பேர் உயிரிழந்த சம்பவம் பொதுமக்கள் மத்தியில் அச்சத்தை ஏற்படுத்தியுள்ளது. இதனையடுத்து அம்மாவட்டத்தில் கடும் கட்டுப்பாடுகள் விதிக்கப்பட்டு வருகிறது. மேலும் இந்த கட்டுப்பாடுகளை பின்பற்றாதவர்கள் மீது நடவடிக்கை எடுக்கப்படும் என்றும் எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.
கட்டுப்பாடுகள்:
நாடு முழுவதும் கொரோனா உயிர்கொல்லி வைரஸ் தாக்கத்தால் மக்கள் பாதிக்கப்பட்டு சிரமப்பட்டனர். இதனை கட்டுப்படுத்த மத்திய மாநில அரசுகள் பல்வேறு நோய் தடுப்பு பணிகளை மேற்கொண்டனர். அதாவது ஊரடங்கு மற்றும் கட்டுப்பாடுகள் விதிக்கப்பட்டது. மறுபுறம் தடுப்பூசிகள் செலுத்தும் பணி தீவிரமாக்கப்பட்டது. இதன் விளைவாக கொரோனா பாதிப்புகள் படிப்படியாக குறைய ஆரம்பித்தது. இதிலிருந்து மக்கள் மீண்டு வரும் நிலையில் தற்போது அடுத்த தாக்குதலாக காலரா நோய் பரவி வருகிறது. புதுச்சேரி காரைக்கால் மாவட்டத்தில் காலராவால் பாதிக்கப்பட்ட இரண்டு பேர் உயிரிழந்துள்ளனர்.
Exams Daily Mobile App Download
காலரா பாதிப்பு உள்ள இரண்டு பேரில் ஒருவருக்கு புற்றுநோய், மற்றொருவருக்கு உயர் ரத்த அழுத்தம் பாதிப்பு இருந்தது தெரிய வந்துள்ளது. அதனை தொடர்ந்து இதுவரை 1,584 பேர் பாதிக்கப்பட்டுள்ளனர் என்று புதுச்சேரி மாநில சுகாதாரத்துறை தெரிவித்துள்ளது. தற்போது மக்கள் வாந்தி மற்றும் வயிற்று போக்கால் அதிகம் பாதிக்கப்படுவதால் அம்மாவட்ட நிர்வாகம் புதிய கட்டுப்பாடுகளை விதித்து வருகிறது. அந்த வகையில் உணவகங்களில் கொதிக்க வைக்கப்பட்ட சுத்தமான குடிநீர் மட்டுமே வழங்க வேண்டும். அல்லது ஆர்.ஓ முறையில் சுத்திகரிக்கப்பட்ட தண்ணீரை வழங்க வேண்டும் என்று அறிவுறுத்தப்பட்டுள்ளது.
மேலும் உணவகங்களில் உள்ள தண்ணீர் தொட்டிகளை உடனடியாக சுத்தம் செய்ய வேண்டும். அதே போல பள்ளிகள், மருத்துவமனைகள் உள்ளிட்ட இடங்களிலும் கொதிக்க வைக்கப்பட்ட குடிநீரை மட்டுமே பயன்படுத்த வேண்டும் என்று காரைக்கால் மாவட்ட ஆட்சியர் உத்தரவிட்டுள்ளார். இந்த கட்டுப்பாடுகளை முறையாக பின்பற்ற வேண்டும் என்றும் பின்பற்றாவிடில் குற்றவியல் நடைமுறை சட்டம் பிரிவு 144 (2) கீழ் நடவடிக்கை எடுக்கப்படும் என்று எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.