தமிழகத்தில் 1 முதல் 8ம் வகுப்பு மாணவர்களுக்கு முக்கிய அறிவிப்பு – பள்ளிக்கல்வித்துறை உத்தரவு!
தமிழகத்தில் 1 முதல் 8ம் வகுப்பு மாணவர்களுக்கு இலவசமாக வழங்கப்பட்டு வரும் சீருடைகளை சில அரசு நிதி உதவி பெறும் பள்ளிகளில் பயிலும் மாணவர்கள் முறையாக அணிந்து வருவதில்லை என்று தகவல் வெளியாகியுள்ளது.
பள்ளி மாணவர்கள்:
தமிழகத்தில் பள்ளி மாணவர்களின் நலன் கருதி பல்வேறு சலுகைகள் வழங்கப்பட்டு வருகிறது. அதாவது அரசு மற்றும் அரசு உதவி பெறும் பள்ளிகளில் பயிலும் மாணவர்களுக்கு இலவச புத்தகம், நோட், பேக், செருப்பு, சீருடை உள்ளிட்ட பொருட்கள் அனைத்தும் இலவசமாக வழங்கப்பட்டு வருகிறது. அந்த வகையில் அனைத்து அரசு மற்றும் அரசு உதவிபெறும் பள்ளிகளில் சத்துணவு திட்டத்தின் கீழ் பயிலும் 1 முதல் 8ம் வகுப்பு மாணவ, மாணவிகளுக்கு 4 இணை இலவச பள்ளி சீருடைகள் வழங்கப்பட்டு வருகிறது.
இந்த சீருடைகளை பெரும்பாலான பள்ளிகளில் மாணவர்கள் முறையாக அணிந்து வருவதில்லை. அந்த வகையில் காஞ்சிபுரம், செங்கல்பட்டு, சென்னை மற்றும் வேலூர் ஆகிய மாவட்டகளில் உள்ள அரசு உதவி பெறும் பள்ளிகளுக்கு வழங்கப்படும் விலையில்லா சீருடைகளை பெரும்பான்மையான மாணவர்கள் பள்ளிக்கு முறையாக அணிந்து வருவதில்லை என புகார் தெரிவிக்கப்பட்டுள்ளது. இது குறித்து தமிழக பள்ளிக்கல்வித்துறை ஆணையர் அவர்கள் அனைத்து மாவட்ட முதன்மை கல்வி அலுவலர்களுக்கும் சுற்றறிக்கை ஒன்று அனுப்பியுள்ளார்.
அந்த சுற்றறிக்கையில் அனைத்து அரசு உதவிபெறும் பள்ளிகளில் சத்துணவு திட்டத்தின் கீழ் பயன்பெறும் 1 முதல் 8ம் வகுப்பு வரை பயிலும் மாணவ, மாணவிகளுக்கு வழங்கப்படும் இலவச சீருடை தினந்தோறும் அணிந்து வர அறிவுறுத்துமாறு தெரிவித்துள்ளார். மேலும் இதற்கான உரிய நடவடிக்கையை அனைத்து மாவட்ட முதன்மை கல்வி அலுவலர்களும் உடனடியாக மேற்கொள்ள வேண்டும் என்றும் அந்த சுற்றறிக்கை மூலம் பள்ளிக்கல்வி ஆணையர் அவர்கள் தெரிவித்துள்ளார்.