இந்தியாவில் உள்ள வாகன ஓட்டிகளுக்கான முக்கிய அறிவுறுத்தல் – அமைச்சர் விளக்கம்!
இந்தியாவில் 8 பேர் வரை பயணிக்கக்கூடிய வாகனங்களில் குறைந்தது 6 ஏர்பேக்குகளை வாகன உற்பத்தியாளர்கள் வழங்க வேண்டும் என்பதை அரசாங்கம் கட்டாயமாக்குவதாக மத்திய அமைச்சர் நிதின் கட்கரி அறிவித்துள்ளார்.
ஏர்பேக்குகள் கட்டாயம்
சமீப காலங்களாக இந்தியாவில் வாகன விபத்துக்கள் தவிர்க்க முடியாத ஒரு விஷயமாக மாறிக் கொண்டிருக்கிறது. இந்த விபத்துகளை தவிர்ப்பதற்காக என்னென்ன நடவடிக்கைகள் எடுக்க வேண்டுமோ அது அத்தனையும் மேற்கொள்ளப்பட்டாலும் விபத்துகள் தொடர்ச்சியாக நடந்து கொண்டு தான் இருக்கிறது. இந்த சூழலில் வாகன பாதுகாப்பிற்காக அரசாங்கம் ஒரு முக்கிய முடிவு ஒன்றை எடுத்துள்ளது. அதாவது, 8 பேர் வரை பயணிக்கக்கூடிய வாகனங்களில் குறைந்தது 6 ஏர்பேக்குகளை வாகன உற்பத்தியாளர்கள் வழங்க வேண்டும் என்று அரசாங்கம் அறிவித்துள்ளது.
Exams Daily Mobile App Download
இது குறித்து இன்டெல் இந்தியாவின் பாதுகாப்பு முன்னோடிகள் மாநாட்டில் உரையாற்றிய சாலை போக்குவரத்து மற்றும் நெடுஞ்சாலைகள் துறை அமைச்சர் கட்காரி, நாட்டு மக்களின் மேம்பட்ட பாதுகாப்பிற்கான திட்டத்தை அறிவித்துள்ளார். இது தொடர்பான அமைச்சரின் கூற்றுப்படி, ‘நாடு முழுவதும் சுமார் 5 லட்சம் விபத்துகளில் கிட்டத்தட்ட 1.5 லட்சம் பேர் உயிரிழந்துள்ளனர். இதை தவிர்க்கும் விதமாக மோட்டார் வாகனங்களில் குறைந்தபட்சம் ஆறு ஏர்பேக்குகளை வழங்குவதை கட்டாயமாக்க முடிவு செய்துள்ளோம். மக்களின் உயிரைக் காப்பாற்ற விரும்புகிறோம்’ என்று குறிப்பிட்டுள்ளார்.
இதற்கு முன்னதாக மத்திய சாலைப் போக்குவரத்து மற்றும் நெடுஞ்சாலைகள் அமைச்சகம் (MoRTH) ஜனவரியில் ஒரு வரைவு அறிவிப்பை வெளியிட்டது. இது அக்டோபர் 1, 2022க்குப் பிறகு தயாரிக்கப்பட்ட M1 வகை வாகனங்களில் முன் வரிசையில் இருப்பவர்களுக்கு தலா ஒன்று என இரண்டு பக்க அல்லது பக்க உடற்பகுதி காற்று பைகள் பொருத்தப்பட வேண்டும் என்பதை கட்டாயமாக்கி இருக்கிறது. அதே போல வெளிப்புற இருக்கைகளை ஆக்கிரமித்துள்ள நபர்களுக்கு தலா ஒன்று என்ற அடிப்படையில் இரண்டு பக்க குழாய் காற்றுப் பைகள் பொறுத்தப்பட்டிருக்க வேண்டும் என அறிவுறுத்தி இருந்தது குறிப்பிடத்தக்கது.
இதற்கிடையில், பாரத் என்சிஏபி எனப்படும் புதிய கார் மதிப்பீட்டு திட்டத்தை இந்தியாவில் விரைவில் அறிமுகப்படுத்தப்போவதாக அமைச்சர் அறிவித்தார். இது, இந்தியாவில் உள்ள ஆட்டோமொபைல்களுக்கு விபத்து சோதனைகளின் போது அதன் செயல்திறன் அடிப்படையில் ‘ஸ்டார் ரேட்டிங்ஸ்’ வழங்கப்படும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது. அதாவது, இந்தியாவில் உள்ள அசல் உபகரண உற்பத்தியாளர்களிடையே (OEMs) பாதுகாப்பான வாகனங்களை தயாரிப்பதில் ஆரோக்கியமான போட்டியை ஊக்குவிக்கும் என்றும் வாடிக்கையாளர்கள் தங்கள் நட்சத்திர மதிப்பீடுகளின் அடிப்படையில் பாதுகாப்பான கார்களை தேர்வு செய்ய அனுமதிக்கும் வகையில் பாரத் என்சிஏபி செயல்படும் எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.