தமிழக அரசு அதிகாரிகளுக்கு முக்கிய அறிவிப்பு – முதல்வர் முக ஸ்டாலின் அறிவுறுத்தல்!
சென்னை தலைமைச் செயலகத்தில், முதலமைச்சர் தலைமையில் நடைபெற்ற ஆய்வுக் கூட்டத்தில் துறை அமைச்சர்கள், துறைத் தலைவர்கள் மற்றும் மாவட்ட ஆட்சித் தலைவர்கள் ஆகியோர் கலந்து கொண்டனர். அப்போது பேசிய முதல்வர் வரும் காலத்தில் பல்வேறு திட்டங்களை நிறைவேற்றிட வேண்டும் என்று கேட்டுக்கொண்டார். மேலும் அடுத்த ஆய்வுக் கூட்டத்தில், இந்த திட்டங்களின் செயல்பாட்டில் நல்ல முன்னேற்றம் ஏற்படும் என்ற நம்பிக்கை எனக்கு ஏற்பட்டிருக்கிறது எனவும் கூறினார்.
முக்கிய அறிவிப்பு:
தமிழக முதலமைச்சர் நேற்று டெல்டா பயணத்தை முடித்துவிட்டு சென்னை திரும்பினார். இந்நிலையில் இன்று சென்னை தலைமைச் செயலகத்தில், துறைச் செயலாளர்களுடனான முதல் நாள் ஆய்வுக் கூட்டம் நடைபெற்றது. இந்த கூட்டத்தின் இறுதியில், முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் கூறியது, இந்த ஆய்வின் மூலம் தமிழக அரசின் பல்வேறு சிறப்புத் திட்டங்கள் விரைவாக நிறைவேற்றப்பட்டு வருவது கண்கூடாக தெரிகிறது. இருப்பினும் குறிப்பிட்ட திட்டங்களின் செயல்பாட்டில் தாமதம் ஏற்பட்டுள்ளது, அதை சரிசெய்து அவற்றின் செயல்பாட்டினை விரைவுபடுத்த வேண்டியதன் அவசியத்தையும் இன்றைய ஆய்வின் மூலமாக அறிய முடிந்தது என்று கூறினார்.
தமிழக மக்களின் எதிர்பார்ப்பினை பூர்த்தி செய்யும் வகையில் உங்கள் பணி சிறப்பாக அமைய வேண்டும். குறிப்பாக நகர்ப்புர வேலைவாய்ப்புத் திட்டம், சாலை அமைத்தல், குடிநீர்த் திட்டம் போன்ற திட்டங்களை செயல்படுத்துவதில் அதிக அளவில் கவனம் செலுத்தி, குறிப்பிட்ட காலத்தில் அவற்றை நிறைவேற்றிட வேண்டும். மேலும் அனைத்துத் துறைகளும் திட்டங்களை நிறைவேற்றும்போது, நவீன தொழில்நுட்பத்தைப் பயன்படுத்தி அவற்றைச் செயல்படுத்த வேண்டும். அதேபோல், திட்டங்களை வகுப்பதிலும், திட்டங்களை நிறைவேற்றுவதிலும் அரசு சாராத துறை வல்லுநர்களின் கருத்துகளையும், ஆலோசனைகளைப் பெறலாம்.
இதையடுத்து மாநிலத்தின் வளர்ச்சி என்பது புதிய தொழில்நுட்பங்களை அதிக அளவிற்கு செயல்படுத்துவதில்தான் உள்ளது, ஆண்டாண்டு காலமாக செய்து வருவதையே தொடர்ந்து செய்து வந்தால் முன்னேற்றங்கள் ஏற்படாது என்பதை நாம் உணர்ந்திட வேண்டும். முதலாம் ஆண்டு முடிந்து, இரண்டாம் ஆண்டில் அடியெடுத்து வைத்திருக்கிறோம். முதலாம் ஆண்டில் அறிவிக்கப்பட்ட பல திட்டங்கள் நிறைவேற்றப்பட்டு இருந்தாலும், இன்னும் சில அறிவிப்புகளுக்கு அரசாணை வெளியிடப்பட்ட வேண்டியுள்ளது. அதை விரைவில் வெளியிட, மக்களுக்காக அனைவரும் அயராது உழைக்க வேண்டும் என்று முதல்வர் கூறியுள்ளார்.