தமிழகத்தில் நகைக்கடன் தள்ளுபடி குறித்த முக்கிய அறிவிப்பு – சூப்பர்செக் பணி தீவிரம்!
தமிழகத்தில் கூட்டுறவு சங்கங்களில் விவசாயத்திற்காக பெறப்பட்ட நகைக்கடன்கள் தள்ளுபடி செய்யப்படும் என்று தமிழக முதல்வர் அறிவித்துள்ளார். இதையடுத்து சேலம் மாவட்டத்தில் கூட்டுறவு வங்கிகளில் தள்ளுபடி பெற தகுதி உள்ளவர்களின் பட்டியல் தணிக்கை துறை அதிகாரிகளால் ஆய்வு மேற்கொள்ளப்பட்டு வருகிறது. மேலும் இது தொடர்பான தகவலை மண்டல கூட்டுறவு சங்க இணைப்பதிவாளர் தெரிவித்துள்ளார்.
நகைக்கடன் தள்ளுபடி:
தமிழகத்தில் கடந்த ஆண்டு செப்டம்பர் மாதத்தில் தமிழக முதலமைச்சர் சட்டப்பேரவையில் விதி 110ன் கீழ் நகைக்கடன் தள்ளுபடி குறித்த அறிவிப்பை அறிவித்தார். அதன்படி கூட்டுறவு வங்கிகளில் விவசாயத்திற்காக 5 சவரனுக்கு உட்பட்ட நகைக்கடன் பெற்றவர்களுக்கு மட்டும் கடன் தள்ளுபடி செய்யப்படும் என்று அறிவிக்கப்பட்டது. ஆனால் நகைக்கடன் தள்ளுபடியில் பல்வேறு முறைகேடுகள் நடைபெற்று வருவது ஆய்வில் கண்டறியப்பட்டது. அத்துடன் ஒரே குடும்பத்தை சேர்ந்தவர்கள் ஒன்றுக்கு மேற்பட்ட வங்கிகளில் கடன் பெற்றுள்ளனர்.
மத்திய அரசு ஊழியர்களுக்கு ஒரே தவணையில் 18 மாத DA நிலுவைத்தொகை? இந்த வாரம் அறிவிப்பு!
இந்த முறைகேடுக்கு வங்கி அதிகாரிகளும் உடந்தையாக இருப்பது கண்டறியப்பட்டது. அதனால் நகைக்கடனுக்கு விண்ணப்பித்தவர்களில் தகுதியான நபர்களை கண்டறிந்து தள்ளுபடி வழங்க வேண்டும் என்று அரசு உத்தரவு பிறப்பித்தது. அதன்படி நகைக்கடனுக்கு விண்ணப்பித்தவர்களில் 13 லட்ச பேருக்கு மட்டுமே கடன் தள்ளுபடி செய்யப்படும் என்று தெரிவிக்கப்பட்டது. அதன்படி பல்வேறு மாவட்டங்களில் நகைக்கடன் தள்ளுபடி வழங்கப்பட்டு வருகிறது. அந்த வகையில் சேலம் மாவட்டத்தில் தள்ளுபடி பெற தகுதியான நபர்களின் பட்டியல் மாவட்டத்தில் உள்ள அலுவலர்கள் மூலம் ஆய்வு செய்யப்பட்டுள்ளது.
இதையடுத்து வெளிமாவட்ட அலுவலர்கள் மூலமாகவும் 2ம் கட்ட ஆய்வு மேற்கொள்ளப்பட்டது. இதனை தொடர்ந்து தணிக்கை துறையின் ‘சூப்பர் செக்’ பணி தீவிரமாக நடைபெற்று கொண்டிருக்கிறது. மேலும் இது குறித்து சேலம் மண்டல கூட்டுறவு சங்க இணைப்பதிவாளர் கூறியதாவது, கடன் தள்ளுபடிக்கு தகுதி பெற்றவர்களின் பெயர் பட்டியலை தேனி, மதுரை, ராமநாதபுரம், கன்னியாகுமரி, வேலூர் மாவட்ட தணிக்கை துறை அதிகாரிகள் ஆய்வு மேற்கொண்டு வருகின்றனர். இந்த ஆய்வின் முடிவில் இறுதி பட்டியல் தயாரித்து அதனை தமிழக கூட்டுறவு சங்க பதிவாளருக்கு அனுப்பி வைக்கப்படும். அதன்பின் அரசின் உத்தரவுப்படி பயனாளிகளுக்கு கடன் நிலுவை இல்லை சான்றிதழ் வழங்கப்படும் என்று தெரிவித்துள்ளார்.