தமிழகத்தில் வருகிற ஏப்.29ம் தேதி பள்ளி, கல்லூரிகளுக்கு விடுமுறை – மாவட்ட ஆட்சியர் அறிவிப்பு!
திருச்சிராப்பள்ளி மாவட்டம், ஸ்ரீரங்கம் வட்டம், ஸ்ரீரங்கம் அருள்மிகு அரங்கநாதசுவாமி திருக்கோயில் சித்திரைத் தேர்த்திருவிழாவினை முன்னிட்டு வருகின்ற 29.04.2022 வெள்ளிக்கிழமை அன்று உள்ளூர் விடுமுறையாக அறிவிக்கப்படுகிறது. இது குறித்து மாவட்ட ஆட்சியர் சு. சிவராசு அறிக்கை வெளியிட்டுள்ளார்.
உள்ளூர் விடுமுறை:
திருச்சி ஸ்ரீரங்கம் திருக்கோவிலில், மாதம் 12 பல்வேறு வைபவங்கள் மிக சிறப்பாக நடைபெறுவது வழக்கம். இந்த ஆலயத்தின் பிரதான திருவிழாவான வைகுண்ட ஏகாதசி மார்கழி மாதத்தில் நடைபெறும். அதன் பின்னர் தை தெப்பம், கருட சேவை, பங்குனி ரதோற்சவம் வெகு சிறப்பாக நடைபெறும். இந்நிலையில் ஸ்ரீரங்கம் அரங்கநாதர் சுவாமி கோவிலில் வருடம்தோறும் 10 நாட்கள் விருப்பன் திருநாள் எனப்படும் சித்திரை திருவிழா நடைபெறுவது வழக்கம். ஸ்ரீரங்கம் அரங்கநாதர் கோயிலில் சித்திரை தேர்த்திருவிழா கொடியேற்றத்துடன் நேற்று முன்தினம் தொடங்கியது. இதையொட்டி, நேற்று முன் தினம் அதிகாலை 2.30 மணிக்கு நம்பெருமாள் மூலஸ்தானத்தில் இருந்து புறப்பட்டு 3 மணியளவில் கொடிமர மண்டபத்தை வந்தடைந்தார். தொடர்ந்து காலை 4.30 மணி முதல் 5.15 மணிக்குள் கொடியேற்றம் நடைபெற்றது. அதன்பின்பு நம்பெருமாள் அங்கிருந்து புறப்பட்டு கண்ணாடி அறையை சென்றடைந்தார்.
TN Job “FB Group” Join Now
பின்னர் மாலை 6.30 மணிக்கு நம்பெருமாள் உபய நாச்சியார்களுடன் புறப்பட்டு சித்திரை வீதிகளில் உலா வந்து இரவு 8.30 மணிக்கு சந்தனு மண்டபம் சேர்ந்தார். பின்னர் அங்கிருந்து புறப்பட்டு இரவு 9 மணிக்கு யாகசாலையை சென்று அடைந்தார். அங்கு நம்பெருமாள் திருமஞ்சனம் கண்டருளினார். அங்கிருந்து நேற்று (ஏப்.22) அதிகாலை 2 மணிக்கு புறப்பட்டு கண்ணாடி அறையை சென்றடைந்தார். பின்னர், தினமும் காலை, மாலை வேளைகளில் நம்பெருமாள் பல்வேறு வாகனங்களில் எழுந்தருளி சித்திரை வீதிகளில் உலா வருவார். மேலும் ஏப்.27-ஆம் தேதி நம்பெருமாள் நெல்லளவு கண்டருளுகிறார். விழாவின் முக்கிய நிகழ்ச்சியான சித்திரை தேரோட்டம் ஏப்.29-ஆம் தேதி நடைபெறுகிறது. மேலும் 30ம் தேதி சப்தாவரணம், மே 1ம் தேதி ஆளும்பல்லக்குடன் விழா நிறைவடைகிறது.
நாளை முதல் ஜூன் 14 வரை பள்ளிகளுக்கு கோடை விடுமுறை – கல்வித்துறை அறிவிப்பு!
முக்கிய நிகழ்ச்சியான ஸ்ரீரங்கம் அரங்கநாதர் கோவில் சித்திரை தேரோட்டம் வரும் 29 ஆம் தேதி நடைபெற உள்ளது. இந்த தேர்த்திருவிழாவை முன்னிட்டு, 29.04.2022 வெள்ளிக்கிழமை அன்று திருச்சி மாவட்டத்திற்கு உள்ளூர் விடுமுறை அறிவிக்கப்படுகிறது. இந்த அறிவிப்பின்படி,திருச்சி மாவட்டத்திலுள்ள தமிழ்நாடு அரசின் கட்டுப்பாட்டில் உள்ள அனைத்து மாநில அரசு அலுவலகங்கள் மற்றும் கல்வி நிறுவனங்களுக்கும் இந்த விடுமுறை பொருந்தும். இருப்பினும் பள்ளி மற்றும் கல்லூரி தேர்வுகள் நடைபெறுவதில் இந்த விடுமுறை பொருந்தாது. இந்த விடுமுறை நாளில் மாவட்டத்தில் அரசு பாதுகாப்பு தொடர்பான அவசர அலுவல்களைக் கவனிக்கும் பொருட்டு மாவட்டத்தில் உள்ள அரசு அலுவலகங்கள், கருவூலம் மற்றும் சார்நிலைக் கருவூலங்கள் குறிப்பிட்ட பணியாளர்களோடு செயல்படும். இந்த விடுமுறைக்கு பதிலாக வருகிற மே 7 சனிக்கிழமை பணி நாளாக அறிவிக்கப்படுகிறது என திருச்சி மாவட்ட ஆட்சித்தலைவர் சு.சிவராசு தெரிவித்துள்ளார்