தமிழகத்தில் பள்ளிகளுக்கு விடுமுறை அறிவிப்பு – மாவட்ட நிர்வாகங்கள் உத்தரவு!
தமிழகத்தில் இன்று அதிகாலை தொடங்கிய கனமழை இதுவரை வெளுத்து வாங்கி வருவதால் மதுரை, நாமக்கல், விருதுநகர், தூத்துக்குடி உள்ளிட்ட 4 மாவட்டங்களுக்கு விடுமுறை அறிவித்து மாவட்ட நிர்வாகம் அறிவிப்பு வெளியிட்டுள்ளது.
பள்ளி, கல்லூரிகளுக்கு விடுமுறை:
தமிழகத்தில் தற்போது வடகிழக்கு பருவமழை பரவலாக பெய்து வருகிறது. இந்த வடகிழக்கு பருவமழையானது கடந்த மாதம் முதல் தமிழகம், ஆந்திரா உள்ளிட்ட பல்வேறு மாநிலங்களில் வெள்ளப்பெருக்கு ஏற்பட்டுள்ளது. இந்நிலையில் கடந்த வாரத்தில் இந்திய வானிலை ஆய்வு மையம் டிசம்பர் முதல் வாரத்தில் மழைப்பொழிவு படிப்படியாக குறையும் என்று அறிவித்திருந்தது. மேலும் ஒரு சில பகுதிகளில் மட்டும் லேசானது முதல் மிதமானது வரை மழை பெய்யும் என்றும் தெரிவித்திருந்தது.
அதனை தொடர்ந்து கடந்த சில தினங்களுக்கு முன்பு கன்னியாகுமரி கடல் மற்றும் இலங்கை கடற்பகுதியை சுற்றி காற்றழுத்த மேலடுக்கு சுழற்சி உருவாகும் நிலை உள்ளதால் தமிழகத்தில் கனமழைக்கு வாய்ப்பு உள்ளதாக தெரிவிக்கப்பட்டது. அதன்படி கன்னியாகுமரி மற்றும் இலங்கை கடற்பகுதியை சுற்றி நிலவும் காற்றழுத்த மேலடுக்கு சுழற்சி காரணமாக தமிழகத்தில் ஒரு சில மாவட்டங்களில் இன்று காலை முதல் வெளுத்து வாங்கி வருகிறது.
அதனால் மாணவர்களின் நலன் கருதி தமிழகத்தில் மதுரை, விருதுநகர் ஆகிய 2 மாவட்டங்களுக்கு பள்ளி மற்றும் கல்லூரிகளுக்கு விடுமுறை அறிவித்து அம்மாவட்ட நிர்வாகம் அறிவிப்பு வெளியிட்டுள்ளது. அதனை தொடர்ந்து நாமக்கல் மற்றும் தூத்துக்குடி ஆகிய 2 மாவட்டங்களில் பள்ளிகளுக்கு மட்டும் விடுமுறை அறிவித்து அம்மாவட்ட நிர்வாகம் அறிவிப்பு வெளியிட்டுள்ளது.