தமிழகத்தில் 1 முதல் 5ம் வகுப்பு மாணவர்களுக்கு 5 நாட்களுக்கான சிற்றுண்டி மெனு – பட்டியல் இதோ!
தமிழகத்தில் 1 ஆம் வகுப்பு முதல் 5 ஆம் வகுப்பு வரை பயிலும் மாணவர்களுக்கு காலை சிற்றுண்டி கொடுக்க ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது. மேலும், ஒவ்வொரு நாளும் என்னென்ன உணவுகள் வழங்கப்படும் என்பதற்கான பட்டியலும் வெளியாகியுள்ளது.
சிற்றுண்டி மெனு
தமிழகத்தில் மாநகராட்சி, நகராட்சி மற்றும் கிராமப்புறங்களில் என மொத்தமாக 1,545 பள்ளிகளில் 1 ஆம் வகுப்பு முதல் 5 ஆம் வகுப்பு வரை பயிலும் மாணவர்களுக்கு காலை சிற்றுண்டி திட்டம் விரைவில் அமல்படுத்தப்படவுள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது. இந்த திட்டத்திற்காகவே 33.56 கோடி ரூபாய் ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது. அதாவது, பசியில்லாமல் மாணவர்கள் படிப்பை தொடர வேண்டும் என்பதற்காகவும், ஊட்டச்சத்து குறைபாட்டினால் மாணவர்கள் பாதிக்கப்பட கூடாது என்பதற்காகவும், பள்ளிக்கு வரும் மாணவர்களின் எண்ணிக்கையை அதிகப்படுத்தவும் இத்தகைய திட்டம் அறிமுகம் செய்யப்பட்டுள்ளது.
சமையல் எரிவாயு விலை முதல் காசோலை கட்டணம் வரை – ஆகஸ்ட் 1 முதல் வரவிருக்கும் புதிய மாற்றங்கள்!
மேலும், இந்த திட்டத்தின் மூலமாக வேலைக்கு செல்லும் தாய்மார்களின் பணிச்சுமையையும் குறைக்க முடியும். தற்போது என்னென்ன உணவு வகைகள் காலை உணவாக கொடுக்கப்படும் என்பதை பார்க்கலாம்.
திங்கட்கிழமை – உப்புமா வகை அதாவது, ரவா உப்புமா மற்றும் காய்கறி சாம்பார் அல்லது சேமியா உப்புமா மற்றும் காய்கறி சாம்பார் அல்லது கோதுமை ரவா உப்புமா மற்றும் காய்கறி சாம்பார்
செவ்வாய்க்கிழமை – ஏதேனும் கிச்சடி வகை வழங்க ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது. அதாவது, ரவா கிச்சடி, சேமியா காய்கறி கிச்சடி, சோள காய்கறி கிச்சடி, கோதுமை ரவா காய்கறி கிச்சடி ஆகியவற்றில் ஏதாவது ஒரு கிச்சடி வகை வழங்கப்படும்.
Exams Daily Mobile App Download
புதன்கிழமை – பொங்கல் வகை வழங்க ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது. அதாவது, ரவா பொங்கல் மற்றும் காய்கறி சாம்பார் அல்லது வெண் பொங்கல் மற்றும் காய்கறி சாம்பார் கொடுக்கப்படும்.
வியாழக்கிழமை – சேமியா உப்புமா வகை உணவுகள் பரிமாறப்படும். அதாவது, சேமியா உப்புமா மற்றும் காய்கறி சாம்பார் அல்லது அரிசி உப்புமா மற்றும் காய்கறி சாம்பார் அல்லது ரவா உப்புமா மற்றும் காய்கறி சாம்பார் அல்லது கோதுமை ரவா உப்புமா மற்றும் காய்கறி சாம்பார் வழங்கப்படும்.
வெள்ளிக்கிழமை – ஏதாவது ஒரு கிச்சடி வகையுடன் செவ்வாய்க்கிழமை உணவு பட்டியலின் படி ரவா கேசரி அல்லது சேமியா கேசரி வழங்கப்படும் என அறிவிக்கப்பட்டுள்ளது.
மேலும், மாணவர்களுக்கு ஒரு நாளைக்கு 50 கிராம் அளவுள்ள அரிசி, ரவை, கோதுமை ரவை, சேமியா மற்றும் உள்ளூரில் விளையும் சிறு தானியங்கள் வழங்கப்படும் எனவும், 15 கிராம் அளவுள்ள சாம்பார் பருப்பு, சமைத்த பின் 150 – 200 கிராம் அளவுடன் கூடிய உள்ளூரில் கிடைக்கும் காய்கறிகள் வழங்கப்படும் எனவும், குறைந்தது வாரத்தில் இரண்டு நாட்களாவது அதிக சத்து மிகுந்த சிறுதானிய உணவுகளை வழங்கலாம் என அறிவிக்கப்பட்டுள்ளது.