தமிழகத்தில் இன்று முதல் முழு ஊரடங்கு ரத்து – வழிபாட்டு தலங்கள் மீண்டும் திறப்பு! முழு விபரம் இதோ!
தமிழகத்தில் கொரோனா தொற்றின் தற்போதைய நிலைமையை மதிப்பாய்வு செய்த அரசாங்கம் இன்று (ஜன.28) முதல் இரவு மற்றும் வார இறுதி ஊரடங்கு உத்தரவை நீக்குவதாக அறிவித்துள்ளது. இதனுடன் பள்ளிகள் மற்றும் வழிபாட்டு தலங்கள் மீண்டும் திறக்கப்பட இருக்கிறது.
ஊரடங்கு நீக்கம்
நாடு முழுவதும் கடந்த மாதம் முதல் பரவிக்கொண்டிருக்க கூடிய கொரோனா 3ம் அலை மற்றும் ஒமிக்ரான் வைரஸ் தொற்றானது குறிப்பிடத்தக்க பாதிப்புகளை ஏற்படுத்தி இருக்கிறது. இம்முறை கொரோனா 3ம் அலைத்தடுப்பு நடவடிக்கையாக பல்வேறு மாநிலங்களில் இரவு மற்றும் வார இறுதி முழு முடக்கம் போன்ற கட்டுப்பாடுகள் விதிக்கப்பட்டிருந்தது. அதே போல தமிழகத்திலும் கடந்த 6ம் தேதி முதல் தினசரி இரவு 10 மணி முதல் காலை 5 மணி வரை ஊரடங்கு கட்டுப்பாடுகள் அமல்படுத்தப்பட்டது. இது தவிர வார இறுதி நாட்களில் முழு முடக்கம் செயல்படுத்தப்பட்டது.
இந்த கட்டுப்பாடுகள் நிமித்தம் தமிழகம் முழுவதும் தற்போது கொரோனா தினசரி பாதிப்புகள் வீழ்ச்சியடைய துவங்கி இருக்கிறது. அதுவும், கடந்த 5 நாட்களாக கொரோனா தினசரி பாதிப்புகளின் எண்ணிக்கை குறைந்த வண்ணம் இருக்கிறது. குறிப்பாக, கடந்த வாரம் வரையும் தினசரி 31 ஆயிரத்திற்கும் அதிகமாக பதிவு செய்யப்பட்டு வந்த புதிய பாதிப்புகளின் எண்ணிக்கை கடந்த 4 நாட்களில் 30 ஆயிரத்திற்கும் கீழே குறைந்திருக்கிறது.
மேலும், நேற்று (ஜன.27) ஒரு நாளில் 28,515 பேருக்கு கொரோனா பாதிப்பு ஏற்பட்டது. இதற்கிடையில் அடுத்து வரும் நாட்களில் கொரோனா பரவல் தொற்று மேலும் குறையும் என்று எதிர்பார்க்கப்பட்டுள்ளது. இந்நிலையில் ஜனவரி மாதத்தின் இறுதியான இந்த நாட்களில் தமிழகத்தில் கொரோனா 3ம் அலைப்பரவல் உச்சத்தை கடக்கும் என்று தகவல்கள் வெளியாகியுள்ளது. இதனை கருத்தில் கொண்ட தமிழக அரசு கொரோனா பரவலை முன்னிட்டு விதித்த ஊரடங்கு கட்டுப்பாடுகளை நீக்கி நேற்று (ஜன.27) அறிவிப்புகளை வெளியிட்டிருக்கிறது.
ஆதார் கார்டு வைத்திருப்போருக்கு முக்கிய அறிவிப்பு – இனி எளிமையாக முடிக்கலாம்!
அந்த வகையில் இரவு நேர ஊரடங்கு கட்டுப்பாடுகள் இன்று (ஜன.28) முதல் மொத்தமாக நீக்கப்பட்டுள்ளன. அதே போல வார இறுதி முழு முடக்கமும் தற்போது முடிவுக்கு வந்திருக்கிறது. இது தவிர பிப்ரவரி 1ம் தேதி முதல் 1 முதல் 12 வரையுள்ள வகுப்புகளுக்கு பள்ளிகளை திறக்க அனுமதி அளித்த அரசு, வழிபாட்டு தலங்களை திறக்கவும் முடிவு செய்துள்ளது. இந்த நடவடிக்கைகள் அனைத்தும் இன்று (ஜன.28) முதல் அமலுக்கு வருகிறது குறிப்பிடத்தக்கது.