தமிழகத்தில் 14 மாவட்டங்களில் கனமழை பெய்யும் – வானிலை ஆய்வு மையம் தகவல் !
தமிழகத்தில் இன்றும் நாளையும் நீலகிரி, கோவை, திருப்பூர் உள்ளிட்ட 14 மாவட்டங்களில் கனமழை பெய்ய வாய்ப்பு உள்ளதாக சென்னை வானிலை ஆய்வு மையம் தகவல் தெரிவித்துள்ளது. கோடை காலத்தில் வெப்பம் தணிந்து மழை பெய்வதால் மக்கள் மகிழ்ச்சி அடைந்துள்ளனர்.
கனமழை:
இந்தியாவில் பருவநிலை மாற்றம் அவ்வப்போது கால நிலைக்கு ஏற்ப மாறுபட்டு வருகிறது. அந்த வகையில் தற்போது கோடை காலம் நிலவி வருகிறது. வழக்கமாக ஆண்டுதோறும் மார்ச், ஏப்ரல், மே மாதங்களில் கோடை வெயிலின் தாக்கம் அதிகமாக இருக்கும். இந்த கோடை காலம் ஜூலை மற்றும் ஆகஸ்ட் மாதம் வரை நீடிக்கும். இந்த கோடை காலத்தில் வழக்கத்தை விட சூரிய வெயில் சுட்டெரிக்கும். அந்த வகையில் நடப்பு ஆண்டு வெப்பம் கொளுத்துகிறது. இதன் காரணமாக வெப்பச் சலனம் ஏற்பட்டு அவ்வப்போது மழை பெய்து வருகிறது. வங்கக்கடல் பகுதிகளில் நிலவிய காற்றழுத்த தாழ்வு பகுதி வலுப்பெற்று புயலாக மாறியது. இதனால் கனமழை பெய்தது.
Exams Daily Mobile App Download
மற்ற மாநிலங்களை தொடர்ந்து தமிழகத்தில் மேலடுக்கில் நிலவும் காற்றின் திசை மாறுபாடு காரணமாக நீலகிரி, கோவை, திருப்பூர், திண்டுக்கல், தேனி, கன்னியாகுமரி, தென்காசி, ஈரோடு, கிருஷ்ணகிரி, தர்மபுரி மற்றும் சேலம் மாவட்டங்களில் லேசான மழை பெய்தது. அதே போல இன்றும் நாளையும் நீலகிரி, கோவை, திருப்பூர், திண்டுக்கல், தேனி, குமரி, தென்காசி உள்ளிட்ட 14 மாவட்டங்களில் கனமழை பெய்ய வாய்ப்பு உள்ளதாக சென்னை வானிலை ஆய்வு மையம் தகவல் தெரிவித்துள்ளது. சென்னையை பொறுத்தவரை நகரின் சில இடங்களில் லேசான மழை பெய்யலாம் எனவும் கூறியுள்ளது.
குமரிக்கடல், மன்னார் வளைகுடா மற்றும் தென் தமிழக கடலோர பகுதிகளில் பலத்த காற்று மேற்கு திசையில் இருந்து மணிக்கு 40 முதல் 50 கிலோ மீட்டர் வேகத்தில் வீசக்கூடும். மேலும் இலட்சத்தீவு, கேரளா மற்றும் அதனை ஒட்டிய தென்கிழக்கு அரபிக்கடல் பகுதிகளில் சூறாவளி காற்று மணிக்கு 45 முதல் 55 கிலோ மீட்டர் வேகத்தில் வீசக்கூடும் என்று தகவல் தெரிவிக்கப்பட்டுள்ளது. அதனால் மீனவர்கள் இன்று கடலுக்குள் செல்ல வேண்டாம் என அறிவுறுத்தப்படுகிறார்கள்.