இரண்டு நாட்களுக்கு தமிழகத்தின் 5 மாவட்டங்களில் கனமழை வெளுத்து வாங்கும் – வானிலை ஆய்வு மையம் அறிவிப்பு!
மேற்கு திசை காற்றின் வேக மாறுபாட்டின் காரணமாக தமிழகத்தில் இன்றும் நாளையும் 5 மாவட்டங்களில் கனமழைக்கு வாய்ப்புள்ளதாக சென்னை வானிலை ஆய்வு மையம் அறிவித்துள்ளது. மேலும், கடலோர பகுதியில் உள்ள மீனவர்கள் கடலுக்குள் மீன்பிடிக்க செல்ல வேண்டாம் என அறிவிக்கப்பட்டுள்ளது.
வானிலை ஆய்வு மையம் அறிவிப்பு:
மேற்குத்திசை காற்றின் வேக மாறுபாட்டின் காரணமாக தமிழகத்தின் ஒரு சில மாவட்டங்களில் மிக அதிக கன மழையும், ஒரு சில மாவட்டங்களில் லேசான மிதமான மழைப் பொழிவும் இருந்து வருகிறது. இந்நிலையில் இன்றும் நாளையும் தமிழ்நாடு, புதுவை, காரைக்கால் போன்ற பகுதிகளில் இடி, மின்னலுடன் கூடிய மிதமான மழை பெய்ய வாய்ப்புள்ளதாக சென்னை வானிலை ஆய்வு மையம் அறிவித்துள்ளது. இந்நிலையில் இன்றும் நாளையும் கோயம்புத்தூர், தேனி, திண்டுக்கல், நீலகிரி, தென்காசி ஆகிய பகுதிகளில் மிக அதிக கனமழைக்கு வாய்ப்புள்ளதாக சென்னை வானிலை ஆய்வு மையம் அறிவித்துள்ளது.
இதனையடுத்து வரும் ஜூலை 19, 20 ஆகிய இரண்டு நாட்களும் தமிழ்நாடு, புதுவை, காரைக்கால் போன்ற பகுதிகளில் இடி மின்னலுடன் கூடிய மிதமான மழை பெய்யும் எனவும் வானிலை மையம் அறிவித்துள்ளது. சென்னையை பொறுத்த வரைக்கும் அடுத்த 48 மணி நேரத்திற்கு வானம் மேக மூட்டத்துடன் காணப்படும் எனவும், நகரின் சில பகுதிகளில் மிதமான மற்றும் லேசான மழை பெய்ய வாய்ப்புள்ளதாகவும் அறிவிக்கப்பட்டுள்ளது.
மேலும், அதிகபட்ச வெப்பநிலையாக சென்னையில் 36 – 37 டிகிரி செல்சியஸ் அளவிலும், குறைந்தபட்ச வெப்பநிலையாக 27 – 28 டிகிரி செல்சியஸ் வரையிலும் வெப்பம் இருக்கும் என அறிவிக்கப்பட்டுள்ளது. இதனை அடுத்து மத்திய கிழக்கு மற்றும் அதனை ஒட்டிய தெற்கு அரபிக்கடல் பகுதிகளில் காற்று மணிக்கு 40 முதல் 50 கிலோ மீட்டர் வேகத்தில் வீசும் எனவும், இடையிடையே 60 கிலோமீட்டர் வரையிலும் வீசும் என்பதால் மீனவர்கள் கடலுக்குள் மீன்பிடிக்க செல்ல வேண்டாம் என எச்சரிக்கை விடுத்துள்ளது.