தமிழகத்தில் மீண்டும் முழு ஊரடங்கு அமல்? சுகாதாரத்துறை செயலர் ராதாகிருஷ்ணன் விளக்கம்!
தமிழகத்தில் தற்போது அதிகரித்து வரும் கொரோனா பேரலைத்தொற்றுக்கு மத்தியில் முழு ஊரடங்கு விதிக்கப்பட வாய்ப்புகள் இருப்பதாக வெளியாகி வரும் செய்திகளுக்கு சுகாதாரத்துறை செயலர் ராதாகிருஷ்ணன் விளக்கம் அளித்துள்ளார்.
முழு ஊரடங்கு
கடந்த ஒரு சில நாட்களாக இந்தியாவில் கொரோனா புதிய பாதிப்புகளின் எண்ணிக்கை கணிசமாக உயர்வடையத் துவங்கி இருக்கிறது. குறிப்பாக, ஒரு நாளைக்கு 2000க்கும் மேற்பட்டவர்கள் கொரோனாவுக்கு எதிராக பாசிட்டிவ் விகிதங்களை பதிவு செய்து வரும் நிலையில் இது மற்றொரு அலைக்கான ஆரம்பம் என்று கருதப்படுகிறது. இப்போது அதிகரித்து வரும் தொற்று நோயை கட்டுப்படுத்தும் விதமாக முகக்கவசங்களை அணிவது, சமூக இடைவெளியை பின்பற்றுவது உள்ளிட்ட அனைத்து நோய்த்தடுப்பு நடவடிக்கைகளையும் கையாள மக்கள் அறிவுறுத்தப்பட்டுள்ளனர்.
TN Job “FB Group” Join Now
இதற்கிடையில் தமிழகத்திலும் கூட கொரோனா புதிய பாதிப்புகள் கடந்த சில நாட்களாக 3 இலக்கங்களில் பதிவு செய்யப்பட்டு வருகிறது. குறிப்பாக, சென்னை ஐஐடியில் இதுவரை 100க்கும் மேற்பட்டோர் கொரோனாவால் பாதிக்கப்பட்டுள்ளனர். இதனால் மக்கள் எந்த சூழலையும் எதிர்கொள்ள தயாராக இருக்க வேண்டும் என முதல்வர் முக ஸ்டாலின் எச்சரித்துள்ளார். இந்த சூழலில், அதிகரித்து வரும் கொரோனா பரவல் பாதிப்புகளை கட்டுப்படுத்தும் விதமாக தமிழகத்தில் மீண்டும் முழு ஊரடங்கு கட்டுப்பாடுகள் அமல்படுத்தப்பட வாய்ப்புகள் இருப்பதாக தகவல்கள் வெளியான வண்ணம் இருக்கிறது.
இது தொடர்பாக செய்தியாளர்களை சந்தித்து பேசிய மருத்துவத்துறை செயலாளர் ராதாகிருஷ்ணன், ‘தமிழகத்தில் நோய்பரவலை கட்டுப்படுத்த அனைத்து நடவடிக்கைகளும் மேற்கொள்ளப்பட்டுள்ளது. மக்கள் அனைவரும் கட்டாயமாக முகக்கவசம் அணிந்து கொண்டு அரசு வெளியிட்ட கொரோனா தடுப்பு வழிமுறைகளை பின்பற்ற வேண்டும். தடுப்பூசி போட்டுக்கொள்ள முன்வர வேண்டும். தமிழகத்தில் கொரோனா பாதிப்பை கவனத்தில் கொண்டு மீண்டும் முழு ஊரடங்கு அமல்படுத்த வாய்ப்புகள் இல்லை. சென்னை ஐஐடியில் இதுவரை கொரோனாவால் பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை 111 ஆக உயர்ந்துள்ளது’ என கூறியுள்ளார்.