தமிழகத்தில் மீண்டும் அமலாகும் ஊரடங்கு? அடுத்த 2 வாரங்களுக்கு கவனம் தேவை! சுகாதாரத்துறை எச்சரிக்கை!
தமிழகத்தில் கொரோனா 3ம் அலைப்பரவல் தொற்று குறைந்து வந்ததையடுத்து ஊரடங்கில் இருந்து தளர்வுகள் அளிக்கப்பட்டு, பள்ளிகள் மீண்டுமாக திறக்கப்பட்டுள்ள நிலையில் அடுத்த இரண்டு வாரங்களுக்கு கவனமாக இருக்க வேண்டும் என எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.
ஊரடங்கு தளர்வு
கடந்த ஜனவரி மாத துவக்கத்தில் இருந்து பேரலையாக உருவெடுத்த கொரோனா 3ம் அலைப்பரவல் காரணமாக தமிழகம் முழுவதும் ஊரடங்கு தொடர்புடைய கட்டுப்பாடுகள் விதிக்கப்பட்டது. அந்த வகையில், ஜனவரி 6ம் தேதி முதல் இரவு நேர ஊரடங்கு மற்றும் ஜனவரி 9ம் தேதி முதல் வார இறுதி முழு முடக்கமும் அமல்படுத்தப்பட்டது. இதனுடன் திரையரங்குகள், வழிபாட்டு தலங்கள், பள்ளிகள் அனைத்தும் முழுமையாக மூடப்பட்டு நோய் தடுப்பு நடவடிக்கைகளும் தீவிரப்படுத்தப்பட்டு வந்தது. இந்நிலையில் தமிழகத்தில் கடந்த சில நாட்களாக கொரோனா தினசரி பாதிப்புகளின் எண்ணிகள் வீழ்ச்சியடைய துவங்கி இருக்கிறது.
TN Job “FB Group” Join Now
இதனை கருத்தில் கொண்டு இத்தகைய கட்டுப்பாடுகளில் இருந்து அரசு தளர்வுகளை அளித்து சமீபத்தில் உத்தரவிட்டது. அதன் ஒரு பகுதியாக பிப்ரவரி 1ம் தேதி முதல் பள்ளிகள், கல்லூரிகள் உட்பட அனைத்து கல்வி நிறுவனங்களும் மீண்டுமாக திறக்கப்பட்டுள்ளது. அந்த வகையில் சென்னையில் கொரோனா தொற்றுக்கு பின்பாக மீண்டும் திறக்கப்பட்டுள்ள அரசுப் பள்ளி ஒன்றை ஆய்வு செய்த தமிழக சுகாதாரத் துறை செயலாளர் டாக்டர் ராதாகிருஷ்ணன் மக்கள் அடுத்த இரண்டு வாரங்களுக்கு கவனமாக இருக்க வேண்டும் என எச்சரிக்கை விடுத்திருக்கிறார்.
இது குறித்து செய்தியாளர்களை சந்தித்து பேசிய அவர், ‘தமிழகத்தில் தற்போது 30% இருந்து 10 முதல் 12% வரை கொரோனா பரவல் விகிதம் குறைந்திருக்கிறது. இதனால் மாணவர்களின் எதிர்கால நலன் கருதி பள்ளிகள், கல்லூரிகள் அனைத்தும் மீண்டுமாக திறக்கப்பட்டுள்ளது. அந்த வகையில் பள்ளிக் கல்வித்துறை, உயர் கல்வித்துறை, பொது சுகாதாரத்துறையின் வழிகாட்டுதல்களின் கீழ் பள்ளி மற்றும் கல்லூரிகள் அனைத்தும் செயல்பட்டு வருகின்றன. இப்போது, மாணவர்கள் அல்லது அவர்களது குடும்பத்தை சேர்ந்தவர்களிடம் கொரோனா அறிகுறிகள் தென்பட்டால் அவர்கள் பள்ளிக்கு வருவதை தவிர்க்க வேண்டும்.
அதே போல நோய் கட்டுப்பாட்டு பகுதியில் இருந்து வரும் மாணவர்களுக்கும் தடை விதிக்கப்படுகிறது. தமிழகத்தில் 33.46 லட்சம் மாணவர்களுக்கு தடுப்பூசி செலுத்த நிர்ணயிக்கப்பட்ட இலக்கில், இதுவரை 77% பேருக்கு தடுப்பூசிகள் செலுத்தப்பட்டுள்ளது. இப்போது பள்ளிக்கு வரும் 5 வயதுக்கு கீழ் உள்ள குழந்தைகள் முகக்கவசம் அணியத் தேவையில்லை. முகக்கவசம் அணிவது சவாலாக இருந்தால் மட்டும் தனித்து இருக்கும் போது அதனை தளர்த்திக்கொள்ளலாம். மேலும் அடுத்த 2 வாரங்களுக்கு பொது மக்களும், மாணவர்களும் கவனமாக இருக்க வேண்டும். தமிழகம் கொரோனா தொற்றை மீண்டு வர அரசுக்கு ஒத்துழைப்பு நல்க வேண்டும்’ என்று குறிப்பிட்டுள்ளார்.