திருப்பதி தரிசனம் செல்ல திட்டமிடுவோருக்கு ஹாப்பி நியூஸ் – மீண்டும் ‘டைம் ஸ்லாட்’ தரிசனம்!
திருப்பதியில் தற்போது பக்தர்கள் வருகை நாளுக்கு நாள் அதிகரித்து வருகிறது. பக்தர்களின் கூட்டம் அதிகமானதால் வரிசையில் ஏற்பட்ட தள்ளுமுள்ளு காரணமாக திருப்பதியில் அளிக்கப்பட்டு வந்த இலவச தரிசன டோக்கன்கள் ரத்து செய்யப்பட்டன. அதை மீண்டும் வழங்க தேவஸ்தானம் முடிவு செய்துள்ளது. திருப்பதியில் இலவச தரிசனம் மூலம் சாமியை தரிசிக்க வரும் பக்தர்களுக்கு 3 இடங்களில் ‘டைம் ஸ்லாட் டோக்கன்’ வழங்க ஏற்பாடு செய்யப்படும் என்று தேவஸ்தான அதிகாரி தெரிவித்துள்ளார்.
இனி ‘டைம் ஸ்லாட்’ தரிசனம்:
இந்தியா முழுவதும் கோவிட்-19 தொற்றின் அதீத தாக்கத்தால் முழு ஊரடங்கு அமல்படுத்தப்பட்டு அனைத்து துறைகளிலும் கட்டுப்பாடுகள் அதிகரிக்கப்பட்டன. இந்த கட்டுப்பாடுகள் மூலம் அனைத்து வழிபாட்டுதளங்களுக்குள் பக்தர்களுக்கு அனுமதி வழங்கப்படவில்லை. இதன் அடிப்படையில் திருப்பதி ஏழுமலையான் கோவிலில் கொரோனா கட்டுப்பாடு காரணமாக ஆன்லைன் மூலம் சிறப்பு தரிசன டிக்கெட்டுகள் வழங்கபட்டது. இருப்பினும் நோய்த் தாக்கம் குறைந்து உள்ளதால் சில வாரங்களுக்கு முன்பு திருப்பதியில் இலவச தரிசன டிக்கெட்டுகள் வழங்கப்பட்டது. இலவச தரிசனத்தின் மூலம் திருப்பதி ஏழுமலையானை சந்திக்க வரும் பக்தர்களின் எண்ணிக்கை நாளுக்கு நாள் கூடிவருகிறது.
தமிழகத்தில் அதிதீவிரமாக பரவும் கொரோனா – மாவட்ட ஆட்சியர்களுக்கு நல்வாழ்வுத்துறை செயலர் கடிதம்!
பள்ளிகளில் இறுதித்தேர்வு முடிந்து விடுமுறை விடப்பட்டுள்ளது. இதன் காரணமாக பக்தர்கள் குடும்பத்துடன் திருப்பதிக்கு படையெடுத்து வருகிறார்கள். ஏழுமலையான் கோவிலில் ரூ.300 கட்டணத்தில் ஆன்லைன் தரிசன டிக்கெட் மற்றும் இலவச தரிசனத்தில் தற்போது தினமும் 70 ஆயிரத்திற்கும் மேற்பட்ட பக்தர்கள் தரிசனம் செய்து வருகின்றனர். தினமும் பல்லாயிரக்கணக்கான பக்தர்கள் திருப்பதியில் தரிசனத்திற்கு குவிந்து வருகின்றனர். இதனால் சுமார் 8 மணி நேரம் வரை பக்தர்கள் காத்திருக்க வேண்டிய நிலைமை ஏற்பட்டுள்ளது. இதையடுத்து டோக்கன் முறை ரத்து செய்யப்பட்டு இலவச தரிசனத்தில் பக்தர்கள் நேரடியாக அனுமதிக்கப்பட்டு வருகின்றனர். திருப்பதியில் உள்ள சீனிவாசம் விடுதி, அலிபிரி பூதேவி காம்ப்ளக்ஸ், கோவிந்தராஜசாமி சத்திரம் ஆகிய இடங்களில் செயல்பட்டு வந்த இலவச தரிசன டோக்கன்கள் வழங்கும் கவுண்டர்கள் மூடப்பட்டன.
சீனிவாசம் விடுதி, அலிபிரி பூதேவி காம்ப்ளக்ஸ், கோவிந்தராஜசாமி சத்திரம் ஆகிய 3 இடங்களில் மூடப்பட்ட இலவச தரிசன டோக்கன் கவுண்டர்களை பார்வையிட்ட தேவஸ்தான முதன்மைச் செயல் அலுவலர் கே.எஸ்.ஜவகர்ரெட்டி முக்கிய அறிவிப்பு ஒன்றை வெளியிட்டார். அதில், திருப்பதி ஏழுமலையானை தரிசிக்க வரும் பக்தர்களுக்கு அனைத்து வசதிகளும் செய்து கொடுக்கப்படும். மேலும் அதே 3 இடங்களில் மீண்டும் ‘டைம் ஸ்லாட் டோக்கன்கள்’ வழங்கி, சாமி தரிசனத்துக்கு அனுப்பிவைக்க ஏற்பாடு செய்யப்பட உள்ளது என்று கூறினார். இந்த டைம் ஸ்லாட் டோக்கன்களில் இலவச தரிசனத்திற்கான நேரம், தேதி ஆகியவை குறிப்பிடப்பட்டு இருக்கும். எனவே கூட்ட நெரிசல் இல்லாமலும், அலைச்சல் படாமலும் நிம்மதியாக சாமியை தரிசனம் செய்ய ஏற்பாடுகள் செய்யப்படுகிறது. டிக்கெட் வழங்கப்படும் 3 கவுண்டர்களில் பக்தர்களுக்கு அன்னதானம், குடிநீர் உள்ளிட்டவற்றை வழங்கவும், நிழற்கூரைகள் அமைக்கவும் அதிகாரிகளுக்கு உத்தரவிடப்பட்டுள்ளது.