திருப்பதி தரிசனம் செல்ல திட்டமிடுவோருக்கு ஹாப்பி நியூஸ் – நாளை முதல் சிறப்பு டோக்கன்கள்!
திருப்பதி ஏழுமலையானை தரிசிக்க வரும் பக்தர்களுக்கு மகிழ்ச்சியான அறிவிப்பை தேவஸ்தானம் வெளியிட்டு உள்ளது. அதன் அடிப்படையில் மூத்த குடிமக்கள், மாற்றுத்திறனாளிகள் ஆகியோர் முன்னுரிமை அடிப்படையில் தரிசிக்க தேவையான டோக்கன்களை வழங்க உள்ளதாக தெரிவித்துள்ளது.
சிறப்பு தரிசன டோக்கன்கள்:
திருப்பதி ஏழுமலையான் கோயில் ஆழ்வார்களால் மங்களாசனம் செய்யப்பட்ட 108 வைணவத் திருத்தலங்களில் ஒன்றாகும். இத்தலம் ஆந்திர மாநிலம் சித்தூர் மாவட்டத்தின் திருப்பதி என்ற ஊரில் அமைந்துள்ளது. இந்த உலகப் புகழ்பெற்ற திருப்பதி ஏழுமலையான் கோயிலுக்கு தினசரியும் பல்லாயிரக்கணக்கான பக்தர்கள் சாமி தரிசனம் செய்ய வருகை தருகின்றனர். பிரம்மோற்சவ நாட்களில் லட்சக்கணக்கான பக்தர்கள் சாமி தரிசனம் செய்ய வருகை தருவார்கள் என்பது குறிப்பிடத்தக்கது. கடந்த 2020ஆம் ஆண்டு முதல் கொரோனா தொற்று பரவல் காரணமாக பல்வேறு கட்டுப்பாடுகள் விதிக்கப்பட்டன.
Exams Daily Mobile App Download
நாடு முழுவதும் கொரோனா பரவல் குறைந்து வருவதால் 2 ஆண்டுகளுக்கு பின்னர் ஏப்ரல் 1 ஆம் தேதி முதல் சுப்ரபாதம், அர்ச்சனை, தோமாலை, நிஜபாத தரிசனம் அஷ்டதள பாத பத்ம ஆராதனை, கல்யாண உற்சவம் ஊஞ்சல் சேவை உள்ளிட்ட ஆர்ஜித சேவையில் பக்தர்கள் அனுமதிக்கப்பட உள்ளனர். இந்நிலையில் மற்ற ஒரு மகிழ்ச்சியான அறிவிப்பை திருப்பதி தேவஸ்தானம் வெளியிட்டு உள்ளது. அந்த அறிவிப்பின் படி, மூத்த குடிமக்கள், மாற்றுத்திறனாளிகள் ஆகியோர் முன்னுரிமை அடிப்படையில் தரிசிக்க தேவையான டோக்கன்கள் நாளை காலை 9 மணிக்கு ஆன்லைனில் வெளியிடப்படும் என தேவஸ்தானம் தெரிவித்துள்ளது.
மேலும் ஒரு நாளைக்கு 1000 டோக்கன்கள் வீதம் ஆன்லைனில் டோக்கன்கள் வெளியிடப்படும், டோக்கனை பெற்ற பக்தர்கள் தினமும் காலை 10 மணிக்கு தரிசனத்திற்கு அனுமதிக்கப்படுவார்கள். இதை அடுத்து வெள்ளிக்கிழமைகளில் மட்டும் மாலை 3 மணி முதல் ஏழுமலையானை வழிபட அனுமதி அளிக்கப்படும் என அறிவிக்கப்பட்டுள்ளது. இதற்கிடையே ஜூலை மற்றும் ஆகஸ்ட் மாதங்களுக்கான கல்யாண உற்சவம், ஆர்ஜித பிரம்மோற்சவம், ஊஞ்சல் சேவை மற்றும் சஹஸ்ர தீபலங்கார சேவை (உற்சவல்) டிக்கெட்டுகள் தேவஸ்தான இணையதளத்தில் வெளியிடப்படுகிறது.