தமிழக ரேஷன் கடை ஊழியர்களுக்கு ஹாப்பி நியூஸ் – அகவிலைப்படி உயர்வு குறித்து அரசு உத்தரவு!
தமிழக அரசு ஊழியர்களுக்கு உயர்த்துவது போல் நியாய விலைக் கடை ஊழியர்களுக்கும் அகவிலைப்படி கண்டிப்பாக உயர்த்தப்பட வேண்டும் என்ற கோரிக்கை சில நாட்களாக வலுப்பெற்று வருகிறது. இந்நிலையில் நியாய விலைக் கடை ஊழியர்களுக்கு மகிழ்ச்சி அளிக்கும் விதமாக முக்கிய அறிவிப்பை அரசு வெளியிட்டுள்ளது.
அகவிலைப்படி உயர்வு:
அரசு ஊழியர்களுக்கு 7வது ஊதியக் குழு பரிந்துரையின் அடிப்படையில் சம்பளம் வழங்கப்பட்டு வருகிறது. மேலும், இந்தக் குழு பரிந்துரையின் அடிப்படையிலும் ஊதிய உயர்வும், அகவிலைப்படி உயர்வும் அளிக்கப்பட்டு வருகிறது. இதற்கிடையே, தமிழகத்தில், ரேஷன் கடைகளில் பணியாற்றும் ஊழியர்கள், அரசு ஊழியர்களுக்கு வழங்கப்படுவது போல், தங்களுக்கும் அகவிலைப்படி உயர்வும், ஊதிய உயர்வும் அளிக்க வேண்டும் என, நீண்ட நாட்களாக கோரிக்கை விடுத்து வருகின்றனர். அந்த வகையில் தமிழ்நாடு முழுவதும், அகவிலைப்படி உயர்வு உள்ளிட்ட 7 அம்ச கோரிக்கைகளை வலியுறுத்தி ரேஷன் கடை பணியாளர்கள் ஜூன் 7ம் தேதி முதல் 3 நாட்களாக வேலை நிறுத்த போராட்டத்தில் ஈடுபட்டனர்.
இந்நிலையில், ரேஷன் கடை ஊழியர்களுக்கு அகவிலைப்படி உயர்வு குறித்து ஒரு வார காலத்திற்குள் நல்ல முடிவு எடுக்கப்படும் என தமிழ்நாடு அரசு உறுதி தெரிவித்துள்ளது. இதுதொடர்பாக தமிழக அரசு வெளியிட்டுள்ள அறிவிப்பில், தமிழ்நாட்டில் உள்ள ரேஷன் கடைகளில் பணியாற்றும் விற்பனையாளர்கள் மற்றும் கட்டுநர்களுக்கு அகவிலைப்படி உயர்வு குறித்து மேற்படி பணியாளர்களின் சங்கம் ஒன்று 3 நாள் வேலை நிறுத்தத்தில் ஈடுபட்டனர். அதனால் பொது மக்களுக்கு அத்தியாவசியப் பொருட்கள் வழங்குவதில் இடையூறு ஏற்படாத வகையில் மாற்று ஏற்பாடுகள் செய்யப்பட்டன.
மேலும் நியாயவிலை கடை பணியாளர்களின் அகவிலைப்படி உயர்வு குறித்து அரசு கனிவுடன் பரிசீலித்து வருகிறது. இன்னும் ஒரு வார காலத்திற்குள் இதன் மீது நல்லதொரு முடிவு எடுக்கப்படும் என அரசு உறுதி அளித்தது. இந்த உறுதியின் பேரில், ரேஷன் கடை ஊழியர்களுக்கு அகவிலைப்படி 14% அதிகரித்து 28% ஆக உயர்த்தி தமிழக அரசு உத்தரவு பிறப்பித்துள்ளது. மேலும் அகவிலைப்படி உயர்வு கோரி ரேஷன் கடை ஊழியர்கள் போராட்டம் நடத்திய நிலையில் அரசு இந்த நடவடிக்கையை எடுத்துள்ளது என தகவல்கள் கூறுகிறது.