தமிழகத்தில் 10ம் வகுப்பு தனித்தேர்வர்கள் கவனத்திற்கு – ஹால் டிக்கெட் வெளியீடு!
தமிழகத்தில் 10ம் வகுப்பு தனித்தேர்வுக்கான அனுமதி சீட்டு நாளை (20.04.2022) வெளியிடப்படும் என தேர்வுத்துறை அறிவித்துள்ளது. தேர்வெழுத உள்ளோர் இணையதளம் வாயிலாக அனுமதி சீட்டை பதிவிறக்கம் செய்து கொள்ளலாம் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.
தனித்தேர்வு:
தமிழகத்தில் கொரோனா மூன்றாம் அலைக்கு பின்பு அனைத்து வகுப்புகளுக்கும் பள்ளிகள் திறக்கப்பட்டு நேரடி வகுப்புகள் நடைபெற்று வருகிறது. தற்போதும் தொடர்ந்து நேரடி வகுப்புகள் நடைபெற்று வருகிறது. இதனையடுத்து 10,12ம் வகுப்பு மாணவர்களுக்கு பொதுத்தேர்வு நடத்த மாநில பள்ளிக்கல்வித்துறை திட்டமிட்டது. கடந்த கல்வியாண்டில் கொரோனா தாக்கம் காரணமாக 10,12ம் வகுப்பு மாணவர்களுக்கு பொதுத்தேர்வு ரத்து செய்யப்பட்டு மாணவர்களுக்கு அக மதிப்பீட்டு முறையில் மதிப்பெண்கள் வழங்கப்பட்டது. நடப்பு கல்வியாண்டில் நேரடி வகுப்புகள் நடைபெற்று வருவதால் கட்டாயம் பொதுத்தேர்வு நடத்தப்படும் என்று பள்ளிக்கல்வித்துறை தெரிவித்துள்ளது.
தமிழகத்தில் பள்ளிகளுக்கு ஒரு வாரத்திற்கு விடுமுறை – அதிரடி அறிவிப்பு!
அதன்படி கடந்த மார்ச் மாதம் தமிழக பள்ளிக்கல்வித்துறை 10,12ம் வகுப்பு மாணவர்களுக்கான பொதுத்தேர்வு கால அட்டவணை வெளியாகியது. 10, 11, 12ஆம் வகுப்பு மாணவர்களுக்கான செய்முறைத்தேர்வு மற்றும் எழுத்துத் தேர்வுக்கான அறிவிப்பு வெளியாகியது. 12ம் வகுப்புக்கு பொதுத்தேர்வு மே 5ம் தேதி முதல் தேர்வு தொடங்கவுள்ளது. மேலும் 10ம் வகுப்பு பொதுத் தேர்வு மே 6 ஆம் தேதி தொடங்கி மே 30ஆம் தேதி வரை தேர்வு நடைபெறும் என்றும் பள்ளிக்கல்வித்துறை தெரிவித்துள்ளது. அதனை தொடர்ந்து வரும் 25ம் தேதி செய்முறைத் தேர்வு தொடங்க உள்ளது.
இந்த நிலையில் 10ம் வகுப்பு பொதுத்தேர்வு எழுத உள்ள தனித்தேர்வர்களுக்கான அறிவிப்பும் வெளியானது. அதில் 10ம் வகுப்பு தனித்தேர்வர்கள் மார்ச் 9ம் தேதி முதல் ஆன்லைன் வாயிலாக விண்ணப்பிக்கலாம் என்று தெரிவிக்கப்பட்டது. அதன் தொடர்ச்சியாக தற்போது 10ம் வகுப்பு தனித் தேர்வுக்கான ஹால் டிக்கெட் நாளை வெளியிடப்படும் என தேர்வுத்துறை அறிவித்துள்ளது. www.dge.tn.gov.in இணையதளம் வாயிலாக நாளை பிற்பகல் 2 மணி முதல் தேர்வர்கள் ஹால் டிக்கெட்டை பதிவிறக்கம் செய்து கொள்ளலாம் என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது.