ரேஷன் அரிசியை விற்பனை செய்வோர்க்கு பொருட்கள் விநியோகம் நிறுத்தம் – தமிழக அரசு!
தமிழகத்தில் ரேஷன் பொருட்களை வாங்கும் வாடிக்கையாளர்கள் அந்த பொருள்களை விற்பது தெரிந்தால் அவர்களுக்கு ரேஷன் பொருட்கள் வழங்குவது நிறுத்தப்படும் என உயர்நீதிமன்ற விசாரணையின் போது தமிழக அரசு விளக்கம் கொடுத்துள்ளது.
ரேஷன் பொருட்கள்
மக்களது அத்தியாவசிய தேவைகளை பூர்த்தி செய்யும் வகையில் அரிசி, எண்ணெய், பருப்பு போன்ற பொருட்களை மிகவும் குறைந்த விலையில் பெற்றுக்கொள்ளக்கூடிய வகையில் அரசு ரேஷன் பொருட்களை விநியோகம் செய்து வருகிறது. இந்த பொருட்கள் மக்களின் கைகளுக்கு செல்லும் முன்னரே அவற்றை கடத்துவது, மற்ற மாநிலங்களுக்கு ஏற்றுமதி செய்வது உள்ளிட்ட சில சட்டவிரோத செயல்கள் இன்றும் ஏற்பட்டு வருகிறது. இவற்றை தடுக்க தமிழக அரசும் பல்வேறு நடவடிக்கைகளை மேற்கொண்டு வருகிறது.
இந்நிலையில் ரேஷன் அரிசியை கடத்தியது தொடர்பான வழக்கில் கன்னியாகுமரி மாவட்டத்தை சேர்ந்த குமார் என்பவர் கைது செய்யப்பட்டுள்ளார். இதையடுத்து தனக்கு முன்ஜாமின் வழங்க வேண்டும் என சென்னை உயர்நீதிமன்ற மதுரை கிளையில் அவர் மனு தாக்கல் செய்திருந்தார். இந்த மனு மீதான விசாரணை நீதிபதி புகழேந்தி தலைமையில் நடைபெற்றது. அப்போது மனுதாரரிடம் இருந்து கைப்பற்றப்பட்ட அரிசி ரேஷன் பொருட்கள் தான் என கண்டறியப்பட்டதை அடுத்து, இது தொடர்பாக விளக்கம் கொடுக்க வேண்டும் என தமிழக அரசுக்கு உத்தரவிட்டிருந்தார்.
அந்த வகையில் விசாரணையின் போது தமிழக அரசு தாக்கல் செய்த அறிக்கையில், ‘ஒவ்வொரு ரேஷன் அட்டைதாரர்களுக்கும் ஆதார் இணைப்புடன் கூடிய கைரேகை பதிவின் மூலம் தான் ரேஷன் பொருட்கள் வழங்கப்படுகிறது. அதனால் ரேஷன் பொருட்களை விற்பனை செய்பவர்கள் கண்டுபிடிக்கப்பட்டால் அவர்களுக்கு இனி ரேஷன் பொருட்கள் வழங்குவது நிறுத்தப்படும். மேலும் போலியான ரேஷன் அட்டைகளும் பயன்பாட்டில் இருந்து ஒழிக்கப்பட்டு வருகிறது’ என தெரிவித்துள்ளது.