அரசு துறை வேலைவாய்ப்பு இட ஒதுக்கீடு – தொடரும் குளறுபடி.. வெளியான அறிக்கை!
இந்தியாவில் மத்திய அரசு துறை பணியிடங்களில் இதர பிற்படுத்தப்பட்ட பிரிவினருக்கு இட ஒதுக்கீடு முறை அமலில் உள்ளது. இந்த இட ஒதுக்கீடு முறையாக இல்லை என்று அகில இந்திய இதர பிற்படுத்தப்பட்ட ஊழியர்கள் நல சங்கம் தெரிவித்துள்ளது.
இட ஒதுக்கீடு:
இந்தியாவில் மத்திய மற்றும் மாநில அரசுகள் பழங்குடியினர், ஆதிதிராவிடர் மற்றும் பிற்படுத்தப்பட்ட சமூகத்தினருக்கு கல்வி மற்றும் வேலை வாய்ப்பில் குறிப்பிட்ட சதவீதம் இட ஒதுக்கீடு வழங்கி அவர்களின் முன்னேற்றத்திற்கு தொடர்ந்து உதவி வருகிறது. அந்த வகையில் கடந்த ஆண்டு மருத்துவ படிப்பில் பிற்படுத்தப்பட்ட மக்களுக்கு 27% இட ஒதுக்கீடு அளிக்க உச்சநீதிமன்றம் அனுமதி அளித்தது.
அதனை தொடர்ந்து பொருளாதாரத்தில் பின்தங்கியவர்களுக்கும் 10% இடஒதுக்கீடு அளிக்கப்பட்டுள்ளது. இந்த நிலையில் மத்திய அரசு பணிகளில் பதவி உயர்விலும் ஓபிசி பிரிவினருக்கு இட ஒதுக்கீடு அளிக்க வேண்டும் என்று கோரிக்கை எழுந்துள்ளது. இதற்கு மத்தியில் மத்திய அரசு துறைகளில் இதர பிற்படுத்தப்பட்ட பிரிவை சேர்ந்த ஊழியர்களுக்கு முறையாக இட ஒதுக்கீடு வழங்கப்படவில்லை என்று இதர பிற்படுத்தப்பட்ட ஊழியர் சங்கம் தெரிவித்துள்ளது.
இது குறித்து அச்சங்கம் வெளியிட்ட அறிக்கையில் ஓபிசி பிரிவினருக்கு 27% இடஒதுக்கீடு அமல்படுத்தி 30 வருடங்கள் ஆகி விட்டது. ஆனாலும் தற்போது வரை இந்த இட ஒதுக்கீடு முறை செயல்படுவதில் சிக்கல் நிலவுகிறது. மேலும் மத்திய அரசின் அமைச்சகங்களில் குரூப் A மற்றும் B பிரிவுகளில் இதர பிற்படுத்தப்பட்ட பிரிவினர் ஒருவர் கூட இல்லை என்று புள்ளி விவரங்கள் தகவல் தெரிவித்துள்ளது என்று குறிப்பிட்டுள்ளது.