தமிழகத்தில் ஆகஸ்ட் 8க்கு பின் முழு ஊரடங்கு நீட்டிப்பு? முதல்வர் நாளை ஆலோசனை!
தமிழகத்தில் கொரோனா இரண்டாம் அலை மீண்டும் அதிகரிப்பதால் ஊரடங்கை நீட்டிப்பது தொடர்பாக முதல்வர் முக ஸ்டாலின் அவர்கள் அதிகாரிகளுடன் சென்னை தலைமை செயலகத்தில் நாளை பிற்பகல் 12.30 மணிக்கு ஆலோசனை மேற்கொள்ளவுள்ளார்.
ஊரடங்கு நீட்டிப்பு:
தமிழகத்தில் கொரோனா இரண்டாம் அலை தீவிரமெடுத்து வருகிறது. இந்த நோய் பரவலை கட்டுப்படுத்த முதல்வர் முக ஸ்டாலின் கடந்த மே மாதம் 10ம் தேதி முழு ஊரடங்கை பிறப்பித்தார். மேலும் பல்வேறு கடும் கட்டுப்பாடுகள் விதிக்கப்பட்டது. ஆனாலும் நோய் பரவல் குறையவில்லை. அதனால் எவ்வித தளர்வுகளும் இல்லாத முழு பொது முடக்கம் அறிவிக்கப்பட்டது. அதனை தொடர்ந்து தடுப்பு நடவடிக்கையாக 18 வயதுக்கு மேற்பட்டோருக்கு கொரோனா தடுப்பூசிகள் செலுத்தப்பட்டு வருகிறது. இதன் விளைவாக கடந்த மாதத்தில் தொற்று பரவல் குறைந்து வந்தது.
ஆகஸ்ட் 8ம் தேதி முழு ஊரடங்கு, இன்று முதல் புதிய தளர்வுகள் அமல் – மாநில அரசு உத்தரவு!
அதனால் அரசு ஊரடங்கில் தளர்வுகளை அறிவித்து வருகிறது. கொரோனா தடுப்பு வழிமுறைகளை பின்பற்றி அரசு கடைகள், வணிக வளாகங்களை திறக்க அனுமதி அளித்தது. இந்த நிலையில் தற்போது கொரோனா பரவல் மேலும் அதிகரிக்க தொடங்கியுள்ளது. கடந்த 24 மணி நேரத்தில் தமிழகம் முழுவதும் 1,949 பேருக்கு தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது. இது நேற்றைய பாதிப்பை விட அதிகம். இதனால் மீண்டும் முழு ஊரடங்கு ஏற்படுமா என்ற அச்சம் மக்கள் மத்தியில் நிலவுகிறது.
TN Job “FB Group” Join Now
மேலும் தமிழகத்தில் தளர்வுகளுடன் கூடிய ஊரடங்கு ஆகஸ்ட் 9ம் தேதி வரை அமலில் உள்ளது. இந்த நிலையில் கடந்த 2 வாரங்களாக கொரோனா பாதிப்புகள் தொடர்ந்து ஏறுமுகத்தில் செல்வதால் ஊரடங்கை மேலும் நீட்டிப்பது தொடர்பாக தமிழக முதல்வர் முக ஸ்டாலின் சென்னை தலைமை செயலகத்தில் நாளை பிற்பகல் 12.30 மணி அளவில் அதிகாரிகளுடன் ஆலோசனை மேற்கொள்ள உள்ளார். கொரோனா பாதிப்புகள் தொடர்ந்து அதிகரிக்கும் சென்னை, கோவை போன்ற மாவட்டங்களில் கட்டுப்பாடுகளை கடுமையாக்குவது குறித்து ஆலோசனை மேற்கொள்ளப்படும் என்று தகவல் வெளியாகியுள்ளது.