மறு உத்தரவு வரும் வரை முழு ஊரடங்கு அமல் – அரசின் அதிரடி உத்தரவு!
கொரோனா வைரஸ் உருவான சீனாவில் மீண்டும் புதிய வகை கொரோனா வேகமாக பரவ தொடங்கியுள்ளது. ஷாங்காய் உள்ளிட்ட நகரங்களில் கொரோனா பரவல் கோரத்தாண்டவமாடி வருவது மக்களை அச்சுறுத்தி வருகிறது. இதனால் அங்கு பள்ளி, கல்லூரிகள், தொழில் நிறுவனங்கள் அனைத்தும் மூடப்பட்டுள்ளன. பொதுமக்கள் வெளியில் நடமாடுவதற்கும் கடுமையான கட்டுப்பாடுகள் விதிக்கப்பட்டுள்ளது.
முழு ஊரடங்கு அமல்:
கொரோனா வைரஸ் கடந்த 2019ம் ஆண்டு சீனாவின் உகான் நகரில் முதன் முதலாக கண்டுபிடிக்கப்பட்டது. அதனை தொடர்ந்து உலக நாடுகள் அனைத்திலும் பரவிய இந்த வைரஸ் கடும் பாதிப்புகளை ஏற்படுத்தியது. கொரோனா வைரஸை கட்டுப்படுத்த உலக நாடுகள் தடுப்பூசிகளை தயாரித்து மக்கள் அனைவருக்கும் தடுப்பூசி செலுத்தும் நடவடிக்கைளில் இறங்கின. இருப்பினும் கொரோனா வைரஸ் பல்வேறு வகைகளில் உருமாற்றம் அடைந்து மக்களை அச்சுறுத்தி கொண்டே இருந்தது. கடந்த சில மாதங்களாக உலக நாடுகள் முழுவதிலும் கொரோனா தொற்றின் பாதிப்பு வெகு வேகமாக சரிந்து வருகிறது. இதனால் மக்கள் நிம்மதி பெருமூச்சு விட்டு வருகின்றனர். இந்நிலையில் கொரோனா தொற்றின் பிறப்பிடமாகக் கருதப்படும் சீனாவில் கடந்த சில மாதங்களாக, கொரோனா பரவல் அதிகரித்து வருகிறது.
TN Job “FB Group” Join Now
கடந்த 2 வருடங்களாக குறைந்திருந்த தொற்று தற்போது உயர தொடங்கி இருப்பது அந்த நாட்டு மக்களிடையே அச்சத்தை ஏற்படுத்தியுள்ளது. சீனாவில் ஜீரோ கோவிட் பாலிசி கடைபிடிக்கப்பட்டு வருவதால், நோய்ப் பரவலைக் கட்டுப்படுத்த நடவடிக்கைகள் தீவிரப்படுத்தப்பட்டு வருகிறது. கடந்த 24 மணி நேரத்தில் சீனாவில் சுமார் 25 ஆயிரம் பேருக்கு நோய் தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது. கொரோனா பாதிப்பு ஷாங்காய் நகரில் மட்டும் 75% பேருக்கு கண்டறியப்பட்டு உள்ளது. தொற்று பரவல் மீண்டும் அதிகரித்ததை அடுத்து, அந்நாட்டு அரசு பல்வேறு அதிரடி நடவடிக்கைகளை எடுத்து வருகிறது. மேலும் பெரும்பாலான குடியிருப்புப் பகுதிகள் கொரோனா தனிமைப்படுத்தும் இடங்களாக மாற்றப்பட்டு உள்ளன. இதை அடுத்து பள்ளிகள், கல்லூரிகள் கொரோனா சிகிச்சை மையங்களாக மாற்றப்பட்டு உள்ளன.
அமலில் உள்ள முழு ஊரடங்கு காரணமாக பொதுமக்கள் தங்கள் வாழ்வாதாரத்தை இழந்து தவிப்பதாக சமூக வலைதளங்களில் மக்கள் தொடர்ந்து புகார் தெரிவித்து வருகின்றனர். மேலும் ஒரு சிலர் ஊரடங்கு கட்டுப்பாடுகளுக்கு எதிராக போராட்டம் நடத்தி வருகின்றனர். இதனால் போலீசாருக்கும், பொது மக்களுக்கும் இடையே கடும் மோதல் ஏற்பட்டது. இதற்கிடையே கொரோனா பரவல் தலைதூக்கி உள்ளதால் தற்போதைக்கு ஊரடங்கில் எந்த தளர்வும் அளிக்கப்படாது என்று அதிகாரிகள் தெரிவித்தனர். இதுமட்டுமில்லாமல் கொரோனா இன்னும் தீவிரமடைந்தால் ஊரடங்கு கட்டுப்பாடுகள் கடுமையாக்கப்படும் என்று அறிவித்துள்ளனர். உலக நாடுகள் அனைத்தும் தற்போது தான் மெல்ல, மெல்ல கொரோனாவில் இருந்து விடுபட்டு பொருளாதாரத்தை மீட்டெடுத்து வரும் நிலையில், சீனாவில் மீண்டும் புதிதாக பரவ தொடங்கியுள்ள வைரஸ் உலக நாடுகள் இடையே அச்சத்தை ஏற்படுத்தியுள்ளது.