காலை 8 மணி முதல் மாலை 5 மணி வரை முழு ஊரடங்கு தளர்வு – நகர நிர்வாகம் அனுமதி!
உத்திரபிரதேச மாநிலத்தில், கடந்த 10ம் தேதி முதல் விதிக்கப்பட்டுள்ள முழு ஊரடங்கு கட்டுப்பாடுகளை இன்று (ஏப்ரல்.25) காலை 8 மணி முதல் மாலை 5 மணி வரை சுமார் 9 மணி நேரத்திற்கு மட்டும் தளர்த்துவதாக கார்கோன் நகர் நிர்வாகம் அறிவித்துள்ளது.
ஊரடங்கு தளர்வு
உத்திரபிரதேச மாநிலத்தின் கார்கோன் நகரில் சமீபத்தில் நடந்த வன்முறையின் போது எஸ்பி சித்தார்த் சவுத்ரி மீது துப்பாக்கிச் சூடு நடத்தியதாக குற்றம் சாட்டப்பட்ட ஒருவரை போலீசார் கைது செய்துள்ளதாக அதிகாரி ஒருவர் தெரிவித்திருக்கிறார். இந்த சம்பவத்தையடுத்து, கார்கோன் நகரில் சட்டம் ஒழுங்கை நிலை நாட்டும் நடவடிக்கையாக கடந்த ஏப்ரல் 10ம் தேதி துவங்கி முழு ஊரடங்கு கட்டுப்பாடுகள் விதிக்கப்பட்டுள்ளது. இப்போது வன்முறை நடந்த பகுதியில் விதிக்கப்பட்ட ஊரடங்கு உத்தரவை உள்ளூர் நிர்வாகம், ஏப்ரல் 14 முதல் தினசரி இரண்டு மணி நேர இடைவெளியில் தளர்த்தி வருகிறது.
ExamsDaily Mobile App Download
அந்த வகையில் இக்கட்டுப்பாடுகள் இன்று (ஏப்ரல்.25) காலை 8 மணி முதல் மாலை 5 மணி வரை கூடுதலாக 9 மணி நேரத்திற்கு தளர்த்தப்பட்டிருக்கிறது. இது தொடர்பான உத்தரவின்படி, உள்ளூர் விவசாய சந்தை, பெட்ரோல் பம்புகள் மற்றும் பொது விநியோக அமைப்பு கடைகள் ஆகியவற்றில் ஊரடங்குச் சட்டம் தளர்த்தப்படாது என்றும் தளர்வு காலத்தில், பால், காய்கறிகள், மருந்துகள் விற்கும் கடைகள் மற்றும் முடிதிருத்தும் கடைகள் உள்ளிட்டவை மட்டுமே திறந்திருக்க அனுமதிக்கப்பட்டுள்ளன. குறிப்பாக, மத வழிபாட்டுத் தலங்களை மூடுமாறு கேட்டுக்கொள்ளப்பட்டுள்ளது.
இதற்கு முன்னதாக ஏப்ரல் 10 ஆம் தேதி ராம நவமி அன்று கார்கோனில் வகுப்புவாத மோதல்கள் வெடித்த நிலையில், பல கடைகள் மற்றும் வீடுகள் சேதமடைந்தன. இதனுடன் வாகனங்கள் எரிக்கப்பட்டு வன்முறை ஏற்பட்ட நிலையில் அப்பகுதியில் கடுமையான ஊரடங்கு கட்டுப்பாடுகள் விதிக்கப்பட்டது. இது குறித்து போலீஸ் நிமர் மண்டலத்தின் இன்ஸ்பெக்டர் ஜெனரல் (ஐஜி) திலக் சிங், ஏப்ரல் 10 அன்று நடந்த வன்முறையின் போது கர்கோனின் சஞ்சய் நகர் பகுதியில் எஸ்பி சித்தார்த் சவுத்ரி மீது துப்பாக்கிச் சூடு நடத்தப்பட்டது. இந்த வழக்கில் மொஹ்சின் அக்கா வசீம் என அடையாளம் காணப்பட்ட குற்றம் சாட்டப்பட்டவர் கைது செய்யப்பட்டுள்ளதாக குறிப்பிட்டுள்ளார்.