வார இறுதி ஞாயிறு முழு ஊரடங்கு மீண்டும் அமல் – மாநில அரசு உத்தரவு!
கேரள மாநிலத்தில் கொரோனா தொற்றின் பரவல் மீண்டும் அதிகரித்து வருவதால் அங்கு வார இறுதி நாளான ஞாயிற்றுக்கிழமை ஊரடங்கு கட்டுப்பாடுகள் அமலுக்கு வருவதாக அரசு உத்தரவிட்டுள்ளது.
ஊரடங்கு உத்தரவு:
நாடு முழுவதும் அனைத்து மாநிலங்களிலும் கொரோனா தொற்றின் 2ம் அலை பாதிப்பு குறைந்து உள்ளது. ஆனால் கேரள மாநிலத்தில் மட்டும் தொடர்ந்து தொற்று பரவல் அதிகரித்து வருகிறது. கடந்த வாரம் ஓணம் பண்டிகையை ஒட்டி ஊரடங்கு கட்டுப்பாடுகளில் தளர்வுகள் அளிக்கப்பட்டு வந்தது. இதன் பின்னர் தொற்று பரவல் அதிகமாக பரவி வருகிறது. கடந்த 25ம் தேதி 31,445 பேர் மாநிலம் முழுவதும் தொற்று பாதிப்புக்கு உள்ளானார்கள்.
செப் 8ம் தேதி 6 முதல் 8ம் வகுப்புகளுக்கு பள்ளிகள் திறப்பு – அரசு அறிவிப்பு!
நேற்று மொத்தம் 30,007 பேருக்கு கொரோனா தொற்று பதிவு செய்யப்பட்டுள்ளது. இதனால் மாநிலத்தின் கொரோனா பாதிப்பு விகிதம் 25ம் தேதி 19.03% நேற்று 18.03% ஆகவும் உள்ளதாக அறிக்கை தெரிவிக்கப்ட்டுள்ளது. மோசமான கொரோனா வைரஸ் நிலைமையை கருத்தில் கொண்டு, மத்திய உள்துறை செயலாளர் அஜய் பல்லா நேற்று மாநிலத்தில் கொரோனா நிலைமையை ஆய்வு செய்தார். கொரோனா பரவலை கட்டுப்படுத்த தொற்று பாதித்தவருடன் தொடர்பில் இருந்தவர்களை கண்டறிதல், தடுப்பூசி போடுவதற்கான முயற்சிகளை தீவிரப்படுத்தவும் அவர் மாநில அரசை கேட்டுக் கொண்டுள்ளார்.
TN Job “FB Group” Join Now
மாநிலத்தில் நடந்த உயர்மட்ட ஆலோசனை கூட்டத்தில் நிதி ஆயோக்கின் சுகாதார உறுப்பினர் வி.கே.பால், மத்திய சுகாதார செயலாளர் ராஜேஷ் பூஷன், கேரள தலைமை செயலாளர் மற்றும் காவல்துறை இயக்குநர் ஆகியோர் கலந்து கொண்டனர். தொடர்ந்து கொரோனா தொற்று பாதிப்பு கேரள மாநிலத்தில் அதிகரித்து வருவதால் மீண்டும் மாநிலம் முழுவதும் ஞாயிற்றுக்கிழமை ஊரடங்கை அமல்படுத்த முடிவு செய்துள்ளது. முன்னதாக கடந்த இரண்டு வாரங்களாக ஞாயிற்றுக்கிழமை ஊரடங்கு நீக்கப்பட்டது குறிப்பிடத்தக்கது.