தமிழகம் முழுவதும் மீண்டும் முழு ஊரடங்கு அமல்? முதல்வர் நடத்தும் ஆலோசனை!
நாடு முழுதும் கொரோனா பரவல் உயர்ந்து வருவதை அடுத்து, கொரோனா தடுப்பு நடவடிக்கைகளை மாநில அரசுகள் முடுக்கி விட்டுள்ளன. ஒமைக்ரான் தொற்றின் திரிபான எக்ஸ்.இ வகை கொரோனா தொற்றும் இந்தியாவில் பரவி வருவதால், பொது மக்கள் அச்சம் அடைந்துள்ளனர். தமிழகத்தில், கொரோனா பரவல் அதிகரித்து வருவது தொடர்பாக, முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் ஆலோசனை நடத்த உள்ளதாக தகவல் வெளியாகி உள்ளது.
முதல்வர் நடத்தும் ஆலோசனை:
இந்தியாவில், கடந்த 2021 ஆம் ஆண்டு டிசம்பர் மாதம் புதிய வகை கொரோனா தொற்றான ஒமைக்ரான் தொற்று பரவியது. இந்த தொற்று தென் ஆப்பிரிக்க நாட்டில் கண்டறியப்பட்டது. இந்த புதிய வகை வைரஸ் பரவலின் வேகம் கொரோனா வைரஸ் பரவலின் வேகத்தை விட அதிகம் ஆகும். இதனால் தமிழகம், மத்திய பிரதேசம், உத்தர பிரதேசம், குஜராத், மகாராஷ்டிரா, ஆந்திரா, கர்நாடகா, டெல்லி உள்ளிட்ட பெரும்பாலான மாநிலங்களில், ஒமைக்ரான் கொரோனா பரவல் அதிகரித்தது. இதன் காரணமாக, இரவு நேர ஊரடங்கு, வார இறுதி நாட்களில் முழு ஊரடங்கு போன்ற நடவடிக்கைகளை மாநில அரசுகள் மேற்கொண்டன என்பது குறிப்பிடத்தக்கது. மேலும் இதை அடுத்து கடந்த ஜனவரி மாத இறுதி வாக்கில், கொரோனா மூன்றாவது அலையின் தாக்கம் குறைந்தது.
தமிழகத்தில் ஏப்ரல் 29ம் தேதி பள்ளி, கல்லூரிகளுக்கு விடுமுறை – மாவட்ட ஆட்சியர் அறிவிப்பு!
இதையடுத்து இரவு நேர ஊரடங்கு ரத்து செய்யப்பட்டு பல்வேறு தளர்வுகள் அளிக்கப்பட்டுள்ளது. மேலும் தமிழகம் உள்ளிட்ட மாநிலங்களில் பள்ளி, கல்லூரிகள் திறக்கப்பட்டு முழு முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளுடன் வகுப்புகள் நடத்தப்பட்டு வருகின்றன. இதற்கிடையே சுமார் இரண்டு ஆண்டுகளுக்கு பிறகு அண்டை நாடான சீனாவில், கடந்த சில நாட்களாக, கொரோனா பரவலின் வேகம் அதிகரித்து வருகிறது. இதனை தொடர்ந்து இந்தியாவில் மீண்டும் கொரோனா விஸ்வரூபமெடுக்க தொடங்கி உள்ளது. இந்நிலையில் தமிழகம், தலைநகர் டெல்லி உள்ளிட்ட ஒரு சில மாநிலங்களில் கடந்த ஒரு வாரமாக கொரோனா வைரஸ் தொற்றால் பாதிக்கப்படுவோரின் எண்ணிக்கை அதிகரித்து வருகிறது. இதனால் வரும் 27 ஆம் தேதி அனைத்து மாநில முதலமைச்சர்களுடன், பிரதமர் நரேந்திர மோடி கொரோனா பரவலைக் கட்டுப்படுத்த தடுப்பு நடவடிக்கைகளை தீவிரப்படுத்துவது, தடுப்பூசி போடும் பணிகளை துரிதப்படுத்துவது உள்ளிட்டவை குறித்து ஆலோசனை நடத்த உள்ளார்.
இந்நிலையில் செய்தியாளர்களைச் சந்தித்த தமிழக சுகாதாரத்துறை செயலாளர் டாக்டர் ராதாகிருஷ்ணன், தமிழகத்தில் மீண்டும் மாஸ்க் அணிதல் விதிமுறையை பொதுமக்கள் கட்டாயம் பின்பற்ற வேண்டும், மேலும் மாஸ்க் அணியாத நபர்களிடம் இருந்து, 500 ரூபாய் அபராதம் விதிக்கப்படும் என்றும் தெரிவித்து உள்ளார். இதற்கிடையே நாளுக்கு நாள் அதிகரித்து வரும் கொரோனா தொற்று குறித்து, சென்னை தலைமைச் செயலகத்தில், சுகாதாரத் துறை அமைச்சர் மா.சுப்பிரமணியன், சுகாதாரத் துறை செயலாளர் டாக்டர் ராதாகிருஷ்ணன் உள்ளிட்ட மூத்த அதிகாரிகளிடம், முதலமைச்சர் மு.க.ஸ்டாலின், விரைவில் ஆலோசனை நடத்த உள்ளதாக தகவல் வெளியாகி உள்ளது. அந்த ஆலோசனை கூட்டத்தில் கொரோனா முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளை தீவிரப்படுத்துவது குறித்து முடிவு எடுக்கப்படும் என தகவல்கள் தெரிவிக்கின்றன.