தமிழகத்தில் 4 – 9 வரையிலான வகுப்பு மாணவர்கள் கவனத்திற்கு – பள்ளிக்கல்வித்துறை முடிவு!
தமிழகத்தில் 4 முதல் 9ம் வகுப்பு வரையிலான மாணவர்களுக்கு ஆங்கில பயிற்சி அளிக்க பள்ளிக் கல்வித்துறை முடிவு செய்துள்ளது. இதற்காக ஆங்கில புலமை வாய்ந்த ஆசிரியர்களை தேர்வு செய்யும்படி உத்தரவிடப்பட்டுள்ளது.
ஆங்கில பயிற்சி:
தமிழகத்தில் அரசு பள்ளி மாணவர்களின் கல்வி நலனில் அக்கறை கொண்டு கடந்த வருடங்களில் கொரோனா பரவல் காரணமாக பள்ளிகள் மூடப்பட்டிருந்த போதும் கல்வி தொலைக்காட்சி வாயிலாக பாடங்கள் நடத்தப்பட்டு வந்தது. இதனால் அரசு பள்ளிகளில் பயிலும் ஏழை, எளிய மாணவர்களும் வீட்டிலிருந்தே கல்வி பயின்று வந்தனர். மேலும் கடந்த வருடம் ஆட்சிக்கு வந்த திமுக தலைமையிலான அரசு பல்வேறு சலுகைகளையும் வழங்கியது. இதன் மூலம் அரசு பள்ளிகளில் மாணவர் சேர்க்கை அதிகரித்துள்ளது. அதனை தொடர்ந்து தற்போது ஆங்கில பயிற்சி வழங்க முடிவு செய்யப்பட்டுள்ளது.
Exams Daily Mobile App Download
வழக்கமாக மெட்ரிகுலேஷன், சிபிஎஸ்இ போன்ற பள்ளிகளில் பயிலும் மாணவர்கள் எளிதாக ஆங்கிலத்தில் பேசும், எழுதும் திறனை பெற்றிருப்பர். ஏனெனில் இவர்கள் தமிழை தவிர்த்து அனைத்து பாடங்களையும் ஆங்கில மொழியில் பயில்வர். மற்றொரு கருத்து என்னவெனில் அரசு பள்ளி மாணவர்களுக்கு ஆங்கிலம் தெரியாது என்பது. ஆனால் தற்போது இத்தகைய கருத்தை முறியடித்து ஆங்கில மொழியிலும் அரசு பள்ளி மாணவர்கள் புலமை பெற்று வருகின்றனர். தாய்மொழி முக்கியம் என்றாலும் அதே சமயம் பன்னாட்டு மொழியான ஆங்கிலமும் அவசியமான ஒன்றாக உள்ளது. நம் மாநிலத்தை தாண்டி நாம் பிற மாநிலங்களுக்கு அல்லது நாட்டிற்கு செல்லும் போது ஆங்கிலம் அனைவரும் அறிந்த பொதுவான மொழியாக உள்ளது.
அதனால் பலருக்கும் நுனி நாக்கில் ஆங்கிலம் பேச வேண்டும் என்பது ஒரு குறிக்கோளாகவே இருந்து வருகிறது. இந்த நிலையில் இளம் வயதில் இருந்தே அரசு பள்ளி மாணவர்களுக்கு ஆங்கில மொழியை கற்பிக்க பள்ளிக் கல்வித்துறை முடிவு செய்துள்ளது. அதன்படி 4 முதல் 9ம் வகுப்பு வரையிலான மாணவர்களுக்கு ஆங்கில பயிற்சி அளிக்கப்படும் என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது. இதனையடுத்து மாணவர்களுக்கு பயிற்சியளிக்க சிறந்த ஆங்கில புலமை வாய்ந்த ஆசிரியர்களை தேர்ந்தெடுக்க மாவட்ட முதன்மை கல்வி அலுவலர் மற்றும் மாவட்ட கல்வி அலுவலர்களுக்கு உத்தரவிடப்பட்டுள்ளது.