மத்திய அரசின் புதிய ட்ரோன் விதிகள் 2021 வெளியீடு – உலக பொருளாதாரத்தில் முக்கிய பங்கு!
இதுவரை ஷாப்பிங், பீட்ஸா மற்றும் மருந்துகள் உள்ளிட்ட விநியோக சேவைகளுக்காக பயன்படுத்தப்பட்டு வரும் ட்ரோன்கள் மத்திய அரசின் புதிய ட்ரோன் விதிகள் மூலம் உலகளாவிய ட்ரோன் பொருளாதாரத்தில் மிகப்பெரும் பங்கை வகிக்கும் என எதிர்பார்க்கப்பட்டுள்ளது.
ட்ரோன் விதிகள்
இயற்கை பேரிடர், வெள்ளம் போன்ற கொடிய காலங்களில் மக்களை மீட்கும் பணிகளில் முக்கியமான அத்தியாவசிய தேவைகளை பூர்த்தி செய்யும் பணிகளில் ட்ரோன்கள் பயன்படுத்தப்பட்டு வருகிறது. இது மட்டுமல்லாது கொரோனா போன்ற பெருந்தொற்று காலத்திலும் மக்கள் வீடுகளில் இருந்தபடியே பொருட்களை பெற்றுக்கொள்ளக்கூடிய சேவைகளையும் இந்த ட்ரோன்கள் நிறைவேற்றி தந்தது. அந்த வகையில் ஆள் இல்லாத பறக்கும் வாகனமான ட்ரோன்கள் பொழுதுபோக்கு உள்ளிட்ட சில காரணங்களுக்காகவும் அரசின் தேவைகளுக்காகவும் கூட பயன்படுத்தப்பட்டு வருகிறது.
தமிழகத்தில் செப் 1ம் தேதி பள்ளிகள் திறப்பு – ஆசிரியர்களுக்கு கொரோனா தடுப்பூசி!
இது தவிர நாட்டின் முக்கிய தேவையான விவசாய பணியில் துல்லியமான தலையீடு முதல் புவியியல் எல்லைகளின் தூரங்களை வகுப்பது, மருந்துகளை வழங்குவது வரை அனைத்து செயல்பாடுகளிலும் ட்ரோன்கள் முக்கிய பங்காற்றி வருகிறது. மேலும் சுகாதார மற்றும் மருத்துவ விநியோகங்களில் ட்ரோன்களின் பயன்பாடு மில்லியன் கணக்கான உயிர்களைக் காப்பாற்ற உதவுகிறது எனவும் மருத்துவத் துறையில் ட்ரோன்கள், தடுப்பூசி விகிதங்களை மேம்படுத்தவும், உலகளவில் நடைபெறும் பல்வேறு நோய்த்தடுப்புத் திட்டங்களில் உதவவும் வாய்ப்புள்ளது என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
இந்நிலையில் இந்திய அரசாங்கத்தின் சிவில் விமான போக்குவரத்து அமைச்சகம், ட்ரோன்களுக்கான வரைவு கொள்கையில் புதிய விதிகளை அதிகாரப்பூர்வமாக அறிவித்துள்ளது. இந்த புதிய விதிகள் இந்தியாவில் தனியார் மற்றும் வணிக ட்ரோன்களுக்கான உரிமை, ட்ரோன் பயன்பாடு மற்றும் ஒப்புதல்கள், எடை வகைப்பாடுகள், ட்ரோன்களின் பதிவு, மண்டல கட்டுப்பாடுகள் மற்றும் வான்வெளி வரைபடங்கள், ரிமோட் பைலட் உரிமங்கள், பயிற்சி அமைப்பு மற்றும் மேட் இன் இந்தியா தொழில்நுட்பத்திற்கான உந்துதல் ஆகியவற்றை வரையறுக்கிறது.
அதே நேரத்தில் இவ்விதிகள் ட்ரோன் பயன்பாட்டை எளிதாக்க வேண்டும் எனும் கருத்தை முன்னிறுத்தியுள்ளது. குறிப்பாக வணிகம் மற்றும் சமூக பயன்பாட்டிற்காக ட்ரோன்கள் எளிதாக்கப்பட வேண்டும் எனவும் உலகளாவிய ட்ரோன் பொருளாதாரத்தில் இந்தியாவின் பங்கு மற்றும் முக்கியத்துவத்தை அதிகப்படுத்த வேண்டும் எனவும் கூறுகிறது. இந்நிலையில் ஆராய்ச்சி நிறுவனமான ரிசர்ச் & மார்க்கெட்ஸ் வெளியிட்ட எண்களின்படி, இந்திய UAV ட்ரோன் சந்தை 2026 ஆம் ஆண்டில் சுமார் 1.8 பில்லியனாக இருக்கும் என்றும் இதன் ஆண்டு வளர்ச்சி 14.61% ஆக இருக்கும் என எதிர்பார்ப்பதாக அறிவித்துள்ளது.
இதனிடையே இந்த மாத தொடக்கத்தில், பெங்களூருவில் பொருட்களை டெலிவரி செய்வதற்கான ட்ரோன் சோதனை ஓட்டம் சுமார் 15 கிமீ சுற்றளவில் மேற்கொள்ளப்பட்டது. இந்த சோதனை ஓட்டம் வெற்றிகரமாக முடிந்துள்ளதாக தற்போது அறிவிக்கப்பட்டுள்ளது. மேலும் சோதனைக்கு பயன்படுத்தப்பட்ட ட்ரோன்கள், மெட்காப்டர் X 4 மற்றும் மெட்காப்டர் X 8 ஆகும். இவை பெங்களூரை மையமாகக் கொண்ட இந்திய ட்ரோன் நிறுவனமான த்ரோட்டில் ஏரோஸ்பேஸ் சிஸ்டம்ஸால் (TAS) உருவாக்கப்பட்டது.
TN Job “FB Group” Join Now
இந்த ட்ரோன்கள் சோதனை ஓட்டத்தில் சராசரியாக 3.5 கிமீ தூரத்தை 7 நிமிடங்களுக்குள் கடந்துள்ளது. மெட்காப்டர் எக்ஸ் 4 ட்ரோன்கள் சுமார் 3.5 கிலோ எடை கொண்டது. இந்த வகை ட்ரோன்கள்களால் 1 கிலோ வரை எடையை சுமக்க முடியும். அதே நேரத்தில் மெட்காப்டர் X 8 ட்ரோன்கள் 5.5 கிலோ எடையுள்ளதாகவும், 2 கிலோ வரை எடையை சுமக்கும் வகையில் வடிவமைக்கப்பட்டுள்ளது. புதிய விதிகளின்படி, இந்த இரண்டு ட்ரோன்களும் சிறிய ஆளில்லா விமான அமைப்பு என வகைப்படுத்தப்படும் என்பது குறிப்பிடத்தக்கது.