பிப்.9 வரை தமிழகத்தில் வறண்ட வானிலையே தொடரும் – வானிலை அறிக்கை!
கடந்த சில நாட்களாக தமிழகம் முழுவதும் பரவலாக மழை பெய்து வந்த நிலையில் வரும் பிப்ரவரி 9 ம் தேதி வரை மாநிலத்தில் வறண்ட வானிலையே நிலவும் என்று வானிலை ஆய்வு மையம் அறிக்கை வெளியிட்டுள்ளது.
வானிலை அறிக்கை:
ஜனவரி மாத தொடக்கம் முதல் தமிழகத்தில் வெப்பநிலை இயல்பு நிலையை விட மிகவும் குறைவாக காணப்பட்ட நிலையில் குளிர் மக்களை மிகவும் பாதித்து வந்தது. அடுத்து வந்த சில நாட்களில் வறண்ட வானிலை நிலவி வந்த போதும் கடந்த வாரம் முதல் தமிழகத்தின் பல மாவட்டங்களிலும் பரவலாக மழை பெய்து வந்தது.
இந்நிலையில் கடந்த 24 மணி நேரத்தில் தென்தமிழக மாவட்டங்களான திருநெல்வேலி, இராமநாதபுரம் ஆகிய மாவட்டங்களில் அதிக அளவு மழை பதிவாகியுள்ளது. மேலும், கிழக்கு திசை காற்றின் வேக மாறுபாடு காரணமாக பிப்ரவரி 5ஆம் தேதியான இன்று தென் தமிழக மாவட்டங்களில் ஒரு சில இடங்களில் மிதமான மழை பெய்யக்கூடும் என்றும், நாளை முதல் பிப்ரவரி 9ம் தேதி வரை தமிழகம், புதுச்சேரி மற்றும் காரைக்கால் போன்ற பகுதிகளில் வறண்ட வானிலை நிலவும் வாய்ப்பு இருப்பதாகவும் வானிலை அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
இதனை தொடர்ந்து தமிழக தலைநகரான சென்னை மற்றும் அதன் புறநகர் பகுதிகளில் அடுத்து வரும் 48 மணி நேரத்திற்கு வானம் மேகமூட்டத்துடன் காணப்படும் என்றும் மீனவர்களுக்கான தனிப்பட்ட வானிலை எச்சரிக்கை எதுவும் இல்லை என்றும் வானிலை அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.