தமிழகத்தில் 1 முதல் 5ம் வகுப்பு மாணவர்களுக்கு இறுதி தேர்வு ரத்து? பள்ளிக்கல்வித்துறை விளக்கம்!
தமிழகத்தில் கொரோனா பரவல் குறைந்ததை தொடர்ந்து கடந்த பிப்ரவரி 1ம் தேதி முதல் அனைத்து பள்ளி மற்றும் கல்லூரிகள் திறக்கப்பட்டுள்ளன. அத்துடன் 10 முதல் 12ம் வகுப்பு மாணவர்களுக்கு பொதுத் தேர்வுக்கான தேதியும் பள்ளிக்கல்வித்துறை அண்மையில் வெளியிட்டது. இந்த நிலையில் 1 முதல் 5ம் வகுப்பு மாணவர்களுக்கு இறுதி தேர்வு ரத்து என்ற தகவல் வெளியாகியுள்ளது. இது குறித்து பள்ளிக்கல்வித்துறை விளக்கம் தெரிவித்துள்ளது.
இறுதி தேர்வு ரத்து
தமிழகத்தில் கொரோனா பரவலின் தாக்கம் குறைந்ததை தொடர்ந்து பல்வேறு தளர்வுகளை அரசு அறிவித்து வருகிறது. அதன்படி கடந்த பிப்ரவரி 1ம் தேதி முதல் அனைத்து பள்ளி மற்றும் கல்லூரிகள் திறக்கப்பட்டுள்ளன. தற்போது நேரடி வகுப்புகள் கொரோனா வழிகாட்டுதலை பின்பற்றி நடைபெற்று கொண்டிருக்கிறது. கடந்த ஆண்டு கொரோனா பரவல் காரணமாக அனைத்து மாணவர்களுக்கும் பொதுத்தேர்வு ரத்து செய்யப்பட்டது. இந்த ஆண்டு கொரோனா தொற்று பரவல் குறைந்ததை தொடர்ந்து பொதுத்தேர்வு கட்டாயமான முறையில் நடைபெறும் என்று பள்ளிக்கல்வித்துறை அறிவித்திருந்தது.
ரேஷன் அட்டைதாரர்கள் கவனத்திற்கு – ஆதார் எண்ணை இணைக்க கால அவகாசம் நீட்டிப்பு!
அதன்படி இந்த ஆண்டுக்கான பொது தேர்வுக்கான தேர்வு கால அட்டவணையை பள்ளிக்கல்வித்துறை அண்மையில் வெளியிட்டது. இதில் தெரிவித்துள்ளதாவது, 12ம் வகுப்பு மாணவர்களுக்கு மே 5ம் தேதி முதல் 28ம் தேதி வரை நடைபெறும் என்றும் 11ம் வகுப்பு மாணவர்களுக்கு மே 9ம் தேதி முதல் 31ம் தேதி வரை நடைபெறும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது. இதே போல் 10ம் வகுப்பு மாணவர்களுக்கு மே 6ம் தேதி முதல் 30ம் தேதி வரை நடைபெறும் என்று கூறப்பட்டுள்ளது. 10 முதல் 12ம் வகுப்பு மாணவர்களுக்கு ஏப்ரல் 5ம் தேதி முதல் மே 2ம் தேதி வரை செய்முறை தேர்வு நடைபெறும் என்றும் கூறப்பட்டுள்ளது.
அத்துடன் 6 முதல் 9ம் வகுப்பு மாணவர்களுக்கான பொதுத்தேர்வு மே 5ம் தேதி முதல் 13ம் தேதி நடைபெறும் என்று அறிவிக்கப்பட்டுள்ளது. ஆனால் 1 முதல் 5ம் வகுப்பு மாணவர்களுக்கு கடைசி வேலை நாள் மே 12ம் தேதி அன்று முடிவடையும் என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது. இவர்களுக்கு இறுதித்தேர்வு குறித்த அறிவிப்பு வெளியாகவில்லை. இந்த நிலையில் 1 முதல் 5ம் வகுப்பு மாணவர்களுக்கு பொதுத்தேர்வு நேற்றிரவு ரத்தானது என்ற செய்தி சமூக வலைதளங்களில் வெளியானது. இது குறித்த பள்ளிக்கல்வித்துறை தெரிவித்ததாவது, தமிழகத்தில் 1 முதல் 5ம் வகுப்பு மாணவர்களுக்கு பொதுத்தேர்வு நடைபெறாது என்று வெளியான செய்தி தவறானது என்றும் கட்டாயமான முறையில் பொதுத்தேர்வு நடைபெறும் என்றும் பள்ளிக்கல்வித்துறை தகவல் அறிவித்துள்ளது.