தமிழகத்தில் 10 & 12ம் வகுப்பு மாணவர்களுக்கான தேர்வு முடிவுகள் – மதிப்பெண் குறித்த அறிவிப்பு!
வரும் ஜூன் 20ம் தேதியன்று 10 மற்றும் 12ம் வகுப்பு மாணவர்களுக்கான பொதுத்தேர்வு இறுதி முடிவுகள் வெளியாக இருக்கும் நிலையில், இந்த தேர்வு முடிவுகளை பெற்றுக்கொள்வதற்கான அறிவுரைகள் குறித்து அனைத்து பள்ளிகளின் தலைமை ஆசிரியர்களுக்கு சுற்றறிக்கை அனுப்பப்பட்டுள்ளது.
தேர்வு முடிவுகள்:
தமிழகத்தில் கடந்த 2021-22ம் கல்வியாண்டில் பொதுத்தேர்வு எழுதிய 10 மற்றும் 12ம் வகுப்பு மாணவர்களுக்கான தேர்வு முடிவுகள் இம்மாதம் 20ம் தேதியன்று வெளியாகும் என்று அறிவிக்கப்பட்டுள்ளது. இதற்கு முன்னதாக 10ம் வகுப்பு மாணவர்களுக்கான பொதுத்தேர்வு முடிவுகள் ஜுன் 17ம் தேதியன்றும், 12ம் வகுப்புகளுக்கான தேர்வு முடிவுகள் ஜூன் 23ம் தேதியன்றும் வெளியிட திட்டமிடப்பட்டிருந்தது. ஆனால் விடைத்தாள்களை திருத்தி மதிப்பெண்களை பதிவேற்றம் செய்வதில் ஏற்பட்ட கால தாமதத்தின் நிமித்தமாக இப்போது தேர்வுமுடிவுகள் அனைத்தும் ஜூன் 20 அன்று வெளியாக இருக்கிறது.
Exams Daily Mobile App Download
இந்த நிலையில் பள்ளி மாணவர்களுக்கான தேர்வு முடிவுகள் குறித்து பள்ளிக்கல்வி இயக்குனர் அனைத்து மாவட்ட முதன்மை கல்வி அலுவலர்களுக்கும் அனுப்பியுள்ள சுற்றறிக்கையில், ‘2021-22ம் கல்வியாண்டில் 12ம் வகுப்பு பயின்ற மாணவர்களின் பொதுத்தேர்வு முடிவுகள் வரும் ஜூன் 20ம் தேதியன்று காலை 9.30 மணிக்கும், இடைநிலை பொதுத்தேர்வு எழுதிய மாணவர்களுக்கு தேர்வு முடிவுகள் 12 மணிக்கும் வெளியிடுவதற்கு திட்டமிடப்பட்டுள்ளது. அந்த வகையில் பொதுத்தேர்வு முடிவுகள் வெளியாகும் தேதியன்று அனைத்து உயர்நிலை மற்றும் மேல்நிலைப்பள்ளி தலைமை ஆசிரியர்களும் www.dge.tn.gov.in என்ற இணையதள முகவரிக்கு சென்று தங்கள் பள்ளிகளுக்கு ஏற்கனவே வழங்கப்பட்டுள்ள பயனர் ஐடி மற்றும் கடவுச்சொல்லை பயன்படுத்தி உள்நுழையவும்.
பிறகு 12ம் வகுப்பு மாணவர்களது அட்டவணைப்படுத்தப்பட்ட மதிப்பெண் பட்டியலை காலை 9.45 மணிமுதல் 11.45 மணி வரையிலும், 10ம் வகுப்பு மாணவர்களது அட்டவணைப்படுத்தப்பட்ட மதிப்பெண் பட்டியலை மதியம் 12.15 மணிமுதல் 2.15 மணிவரையிலும் பதிவிறக்கம் செய்துகொள்ள வேண்டும். இதற்கு தேவையான அனைத்து முன்னேற்பாடுகளையும் தயார் நிலையில் வைத்திருக்கும் படி தலைமை ஆசிரியர்கள் கேட்டுக்கொள்ளப்படுகிறார்கள். இது தவிர மேற்கண்ட நேரங்களில் மாணவர்களின் மதிப்பெண் பட்டியலை பதிவிறக்கம் செய்யத்தவறிய தலைமை ஆசிரியர்கள் பிற்பகல் 3 மணி முதல் அதனை பதிவிறக்கம் செய்துகொள்ளலாம்’ என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.