தமிழக பட்ஜெட்டில் வெளியாக இருக்கும் குடும்ப தலைவிகளுக்கான உரிமைத்தொகை திட்டம் – முதல்வர் தீவிர ஆலோசனை!
தமிழக சட்டப்பேரவையில் தாக்கல் செய்யப்பட இருக்கும் 2023-2024ம் ஆண்டுக்கான பட்ஜெட்டில் குடும்ப தலைவிகளுக்கான உரிமைத்தொகை வழங்கும் திட்டம் இடம்பெறும் என முதல்வர் உறுதியளித்துள்ளார். இந்த நிலையில் இத்திட்டம் தொடர்பாக தமிழக முதல்வர் மற்ற அதிகாரிகளுடன் ஆலோசனை மேற்கொண்டு வருகிறார்.
குடும்ப தலைவி:
தமிழக சட்டப்பேரவையில் 2023-2024ம் ஆண்டுக்கான பட்ஜெட் வருகிற 20ம் தேதி அன்று நிதியமைச்சர் அவர்களால் தாக்கல் செய்யப்பட உள்ளது. இந்த பட்ஜெட்டில் திமுக தனது வாக்குறுதியில் அறிவித்த குடும்ப தலைவிகளுக்கான மாதம் ரூ.1000 உரிமைத்தொகை வழங்கப்படும் திட்டம் குறித்து அறிவிப்பு இடம்பெறும் என தமிழக முதல்வர் உறுதியளித்துள்ளார். மேலும் இத்திட்டத்தை செயல்படுத்துவதற்கான பணிகள் தீவிரமாக மேற்கொள்ளப்பட்டு வருகிறது.
அந்த வகையில், மகளிர் மேம்பாட்டு கழகத்தால், சொந்த வீடு இல்லாத குடும்ப தலைவிகள், அன்றாட கூலி வேலை செய்யும் குடும்ப தலைவிகள், கணவனால் கைவிடப்பட்டவர்கள் ஆகியோரின் பட்டியலை சேகரித்து வருகிறது. இதே போன்று வறுமை கோட்டிற்கு கீழ் உள்ளவர்கள், பி.எச்.எச், ஏ.ஏ.ஒய் என்ற அந்த்யோதயா அன்ன யோஜனா ரேஷன் அட்டை வைத்திருக்கும் குடும்ப தலைவிகளுக்கும் மாதந்தோறும் 1000 ரூபாய் உரிமைத்தொகை வழங்க திட்டமிடப்பட்டுள்ளது.
மேலும் தமிழக பட்ஜெட்டில் பெண்களுக்கான உரிமைத்தொகை அறிவிப்பது தொடர்பாக நேற்று முதல்வர் தலைமை செயலகத்தில் உயர் அதிகாரிகளுடன் ஆலோசனை மேற்கொண்டார். இது தொடர்பாக உயர் அதிகாரி ஒருவர் கூறியதாவது, தமிழக பட்ஜெட்டில் குடும்ப தலைவிகளுக்கான உரிமைத்தொகை அறிவிப்பதற்கான அனைத்து முன்னேற்பாடுகளும் மேற்கொள்ளப்பட்டு வருவதாக தெரிவித்தார். மேலும் தகுதியான குடும்ப தலைவிகளுக்கு உரிமைத்தொகை கிடைக்க பல்வேறு விதமான நடவடிக்கைகளை அரசு எடுத்து வருவதாகவும் கூறியுள்ளார்.