தமிழகத்தில் PGTRB தேர்ச்சி பெற்றவர்களுக்கு பணி நியமனம்? அரசுக்கு கோரிக்கை!
கடந்த 2019ல் நடந்த முதுகலை பட்டதாரி ஆசிரியர் போட்டி தேர்வில் தேர்ச்சி பெற்றவர்களுக்கு தற்போது வரை பணி நியமனம் வழங்கப்படவில்லை. இதன் காரணமாக மதுரை, திருச்சி உள்ளிட்ட இடங்களில் உள்ள பட்டதாரிகள் கல்வித்துறை அமைச்சரை நேரில் சந்தித்து மனு வழங்கியுள்ளனர்.
பணி நியமனம்:
தமிழகத்தில் கடந்த 2019 ஆம் ஆண்டு ஆசிரியர் தேர்வு வாரியம் சார்பாக முதுகலை பட்டதாரி ஆசிரியர் போட்டி தேர்வு நடைபெற்றது. இதில் தேர்ச்சி பெற்ற பட்டதாரிகளுக்கு தற்போது வரை பணி நியமன ஆணை வழங்கப்படவில்லை. இதன் காரணமாக திருச்சி, மதுரை உள்ளிட்ட மாவட்டங்களில் உள்ள பட்டதாரிகள் அமைச்சர் அலுவலகத்தில் பள்ளி கல்வித்துறை அமைச்சர் அன்பில் மகேஷ் பொய்யாமொழி அவர்களை நேரில் சந்தித்து மனு வழங்கினர்.
நாடு முழுவதும் ஒரே நாளில் 37,566 பேருக்கு கொரோனா – 907 பேர் பலி!
அதில் கூறியதாவது, நாங்கள் 2019ல் நடைபெற்ற முதுகலை பட்டதாரி ஆசிரியர் போட்டித் தேர்வு சான்றிதழ் சரிபார்ப்பில் கலந்து கொண்டோம். ஆசிரியர் தேர்வு வாரியமானது தேர்வு எழுதுவதற்கு நிர்ணயிக்கப்பட்ட கல்வித் தகுதியினை 15.07.2019க்குள் பெற்றிருக்க வேண்டும் என அறிவித்தது. நாங்கள் பயின்ற பல்கலையில் முதுகலை தேர்வு முடிவுகள் 15.07.2019 க்கு முன்பாகவே வெளியிட்டுள்ளதால் கல்வி தகுதியினை அனைவரும் முன்னதாகவே பெற்றுள்ளோம்.
ஆசிரிய தேர்வு வாரிய உத்தரவின் படி 29.10.2019 – 01.11.2019 க்குள் அனைத்து சான்றிதழ்களையும் பதிவேற்றம் செய்ததுடன் 08.11.2019 மற்றும் 09.112019 அன்று நடைபெற்ற சான்றிதழ் சரிபார்ப்பில் கலந்து கொண்டு அனைத்து சான்றிதழ்களையும் சமர்ப்பித்துள்ளோம். ஆனால் தேர்வு வாரியமானது முதுகலை படிப்பு 16.07.2019க்கு பிறகு முடித்ததாக கூறி எங்களுக்கு பணி நியமன ஆணை வழங்கவில்லை. இதனால் பணி நியமனம் குறித்து ஆசிரியர் தேர்வு வாரியத்துக்கு பல முறை வலியுறுத்தி வந்துள்ளோம்.
மேலும் சென்னை உயர் நீதிமன்றத்தில் தொடுத்த வழக்கில் நாங்கள் அனைவரும் தகுதி உடையவர் என்று தீர்ப்பு வழங்கப்பட்டது. இத்தீர்ப்பின் அடிப்படையில் எங்களில் மூன்று நபர்களுக்கு மட்டும் 09.02,2020 மற்றும் 10.02.2020 அன்று நடைபெற்ற கலந்தாய்வில் கலந்து கொண்டு தங்களுக்கான பள்ளியையும் தேர்ந்தெடுத்தனர். மேலும் இத்தீர்ப்பை எதிர்த்து ஆசிரியர் தேர்வு வாரியம் கொடுத்த மேல்முறையீட்டு மனுவை சென்னை உயர்நீதிமன்றம் தள்ளுபடி செய்தது.
TN Job “FB Group” Join Now
இருப்பினும் ஆசிரியர் தேர்வு வாரியமானது எங்களுக்கு சுமார் 2 ஆண்டு காலமாக பணி நியமனம் செய்யாமல் காலம் தாழ்த்தி வருகிறது. தகுதியான மதிப்பெண் எடுத்து தேர்ச்சி பெற்றும் நாங்கள் வேலை இல்லாமல் வாழ்வாதாரத்தை இழந்து மன உளைச்சலில் இருந்து வருகிறோம். இதனை கருத்தில் கொண்டு கல்வித்துறை அமைச்சர் அவர்கள் எங்கள் கோரிக்கையை பரிசீலனை செய்து பணி நியமன ஆணை வழங்குமாறு கேட்டுக்கொள்கிறோம் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.