தமிழகத்தில் 1 முதல் 12ம் வகுப்பு மாணவர்கள் கவனத்திற்கு – கல்வித்துறையின் முக்கிய அறிவிப்பு!
தமிழகத்தில் 1 முதல் 10ம் வகுப்பு மாணவர்களுக்கு ஜூன் 13-ந் தேதி பள்ளிகள் திறக்கப்பட உள்ளது. இந்நிலையில் 2022-23 ம் கல்வியாண்டில் மாணவர்களுக்கு வழங்குவதற்காக 5.19 கோடி பாடப்புத்தகங்கள் தயார் என்று பள்ளிக்கல்வித்துறை அறிவித்துள்ளது.
பள்ளிக்கல்வித்துறை அறிவிப்பு:
தமிழகத்தில், கொரோனா பரவல் காரணமாக 2021-22-ம் கல்வியாண்டுக்கான அனைத்து நடவடிக்கைகளும் சற்று தாமதமாக தொடங்கின. இதில் 1 முதல் 9ம் வகுப்பு வரையிலான மாணவர்களுக்கு ஆண்டு இறுதித் தேர்வு நிறைவு பெற்று, கோடை விடுமுறை விடப்பட்டு உள்ளது. இதையடுத்து வருகிற 28-ந் தேதி 12ம் வகுப்புக்கும், 31-ம் தேதி 11ம் வகுப்புக்கும், 30-ந் தேதி 10ம் வகுப்புக்கும் பொதுத்தேர்வு நிறைவு பெற உள்ளது. இந்த நிலையில், 2022-23-ம் கல்வியாண்டில் பள்ளிகள் திறப்பு, தேர்வு தேதிகள் என்பது தொடர்பான அட்டவணையையும், 2022-23-ம் கல்வியாண்டுக்கான ஆசிரியர் திறன் மேம்பாட்டுத்திட்ட அட்டவணையையும் பள்ளிக்கல்வித்துறை அமைச்சர் அன்பில் மகேஷ் பொய்யாமொழி நேற்று வெளியிட்டார்.
50 லட்ச ரூபாய் வரை கடன் வழங்கும் SBI வங்கி – விண்ணப்பிப்பது எப்படி? எளிய வழிமுறைகள் இதோ!
மேலும், மாணவர்கள், பொதுமக்களுக்கான இணையவழி சேவைகள், மின் பதிவேடுகள், ஆசிரியர்கள் இணையவழியில் பணிப்பலன்களை பெறுவதற்கான செயலியையும் தொடங்கி வைத்தார். இதையடுத்து, செய்தியாளர்களிடம் அமைச்சர் பேசிய போது, 1 முதல் 10ம் வகுப்பு மாணவர்களுக்கு ஜூன் 13-ந்தேதியும், 12ஆம் வகுப்பு மாணவர்களுக்கு ஜூன் 20-ந் தேதியும், 11ம் வகுப்பு மாணவர்களுக்கு ஜூன் 27-ந்தேதியும் பள்ளிகள் திறக்கப்படும். கொரோனாவுக்கு முந்தைய காலங்களில் எப்படி வகுப்புகள் நடந்ததோ, அதே போன்று வகுப்புகள் வரும் புதிய கல்வியாண்டில் நடத்தப்படும் என உறுதி அளித்தார்.
தமிழகத்தில் அரசு மற்றும் அரசு உதவி பெறும் பள்ளிகள், தனியார் பள்ளிகளில் படிக்கும் மாணவர்களுக்கு ஆண்டுதோறும் புத்தகங்கள் பாடநூல் கழகம் சார்பில் வழங்கப்படுகிறது. இந்நிலையில், 2022-23ம் கல்வியாண்டில் அனைத்து வகுப்புகளில் படிக்கும் மாணவர்களுக்கும் சுமார் 5.2 கோடி பாடப்புத்தகங்கள் தேவைப்படும் என்பதால் தேவையான புத்தகங்கள் அச்சிடும் படி பாடநூல் கழகம் சில வாரங்களுக்கு முன்பு உத்தரவு பிறப்பித்தது.
Exams Daily Mobile App Download
இந்த உத்தரவின் பேரில், 2022-23ம் கல்வியாண்டில் மாணவர்களுக்கு வழங்குவதற்காக 5.19 கோடி பாடப்புத்தகங்கள் தயார் செய்யப்பட்டு, அரசு மற்றும் அரசு உதவிபெறும் பள்ளிகளில் பயிலும் 1 முதல் 12ம் வகுப்பு வரையிலான மாணவர்களுக்கான 3.35 கோடி புத்தகங்கள் அனுப்பி வைக்கப்பட்டுள்ளது. மேலும் மெட்ரிகுலேஷன் பள்ளி மாணவர்களுக்காக 1.83 கோடி பாடப்புத்தகங்கள் விற்பனைக்கு அனுப்பி வைக்கப்பட்டன என பள்ளிக்கல்வித்துறை அறிவித்துள்ளது.