மதுரை மாவட்ட மக்கள் கவனத்திற்கு – கோவில்களில் பக்தர்கள் தரிசனம் ரத்து!
கொரோனா நோய்த்தொற்று பரவலை கருத்தில் கொண்டு இன்று மதுரை மாவட்டத்தில் உள்ள கோவில்களில் பக்தர்கள் தரிசனம் செய்ய அனுமதி கிடையாது என மாவட்ட ஆட்சியர் அனீஷ்சேகர் அவர்கள் அறிவிப்பு வெளியிட்டு உள்ளார்.
பக்தர்கள் தரிசனம்:
தமிழகத்தில் கொரோனா நோய்த்தொற்று 2வது அலையை கட்டுப்படுத்தும் நோக்கில் கடந்த மே 10ம் தேதி முதல் முழு ஊரடங்கு அமல்படுத்தப்பட்டது. இதில் 14 நாட்களுக்கு எவ்வித தளர்வுகளும் இன்றி தீவிர ஊரடங்கு கட்டுப்பாடுகள் விதிக்கப்பட்டது. கொரோனா தடுப்பூசி செலுத்தும் பணிகள் எவ்வித தொய்வும் இன்றி நடைபெற்றது. இதன் விளைவாக தற்போது தினசரி பாதிப்பு எண்ணிக்கை குறையத் தொடங்கி உள்ளது. எனவே படிப்படியாக தளர்வுகள் வழங்கப்பட்டு மெல்ல இயல்பு நிலை திரும்பி வருகிறது. தற்போது தளர்வுகளுடன் கூடிய ஊரடங்கு ஆகஸ்ட் 23ம் தேதி வரை அமலில் இருக்கும் என அறிவிக்கப்பட்டுள்ளது.
இதில் தொற்று பாதிப்பு அதிகமுள்ள மாவட்டங்களில் அந்தந்த மாவட்ட ஆட்சியர்கள் உரிய முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளை மேற்கொண்டு கட்டுப்பாடுகளை தீவிரப்படுத்துமாறு முதல்வர் முக ஸ்டாலின் அவர்கள் அறிவுறுத்தி உள்ளார். மேலும் வெள்ளி, சனி மற்றும் ஞாயிற்று கிழமைகளில் மத வழிபாட்டு தலங்களில் பக்தர்கள் தரிசனம் செய்ய அனுமதி கிடையாது என தெரிவிக்கப்பட்டது. தற்போது ஆடி மாதம் என்பதால் கோவில்களில் பக்தர்கள் கூட்டம் அதிகரிக்கும். இதனால் முக்கிய கோவில்களில் பக்தர்கள் தரிசனம் செய்ய அனுமதி இல்லை என அந்தந்த மாவட்ட ஆட்சியர்கள் சார்பில் உத்தரவு பிறப்பிக்கப்பட்டது.
இந்நிலையில் ஆடி புதன் கிழமையான இன்று மதுரை மாவட்டத்தில் உள்ள கோவில்களில் பக்தர்கள் தரிசனம் செய்ய அனுமதியில்லை என மாவட்ட ஆட்சியர் அனீஷ்சேகர் அவர்கள் அறிவிப்பு வெளியிட்டு உள்ளார். மேலும் வழக்கமான பூஜைகள் கோவில்களில் நடைபெறும் எனவும், கொரோனா தடுப்பு முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக இந்த கட்டுப்பாடுகள் விதிக்கப்பட்டு உள்ளதாக ஆட்சியர் அவர்கள் தெரிவித்துள்ளார்.