மாநிலம் முழுவதும் இரவு நேர ஊரடங்கு உத்தரவு ரத்து – புதிய வழிகாட்டுதல்கள் வெளியீடு!
சமீப காலமாக கொரோனா புதிய பாதிப்புகள் தொடர்ச்சியாக குறைந்து வருவதால், ராஜஸ்தான் மாநில அரசு இரவு ஊரடங்கு உத்தரவை நீக்கி சில கூடுதல் செயல்பாடுகளுக்கு அனுமதி கொடுத்துள்ளது. இது குறித்த விவரங்களை இப்பதிவில் காணலாம்.
ஊரடங்கு தளர்வு
மாநிலம் முழுவதும் கொரோனா 3ம் அலைத்தொற்று ஓய்ந்து வருவதை கவனத்தில் கொண்ட ராஜஸ்தான் அரசு ஊரடங்கில் இருந்து தளர்வுகளை அளித்து உத்தரவு பிறப்பித்துள்ளது. இது தொடர்பாக வெளியான அறிவிப்பில், ‘ராஜஸ்தான் மாநிலத்தில் கொரோனா புதிய பாதிப்புகளின் எண்ணிக்கை குறைந்து வருவதால், பிப்ரவரி 5 முதல் மாநிலம் முழுவதும் இரவு ஊரடங்கு உத்தரவை நீக்க அரசு முடிவு செய்துள்ளது. மேலும், மத வழிபாட்டுத் தலங்கள் இனி பக்தர்களுக்காக திறக்கப்படலாம்.
தமிழகத்தில் 10வது முடித்தவர்களுக்கு அரசு வேலைவாய்ப்பு – உதவித்தொகை: ரூ.9582/-
அதே போல திருமண விழாக்களில் அதிகபட்சமாக 250 பேர் மட்டுமே கலந்து கொள்ள அனுமதிக்கப்படுகிறார்கள்’ என்று குறிப்பிடப்பட்டுள்ளது. அந்த வகையில் ராஜஸ்தான் மாநிலத்தில் தினசரி இரவு 11 மணி முதல் காலை 5 மணி வரை அமலில் இருந்த ஊரடங்கு கட்டுப்பாடுகள் இனி தொடராது. இப்போது மாநில அரசின் உத்தரவுப்படி, அனைத்து வகையான பொது, சமூக, அரசியல், விளையாட்டு மற்றும் கல்வி, கலாச்சார, மத நிகழ்ச்சிகளிலும் அதிகபட்சமாக 250 பேர் வரை கலந்துகொள்ள அனுமதி கொடுக்கப்பட்டுள்ளது.
இருப்பினும் இவ்விடங்களில் சமூக விலகல், முகக்கவசங்களை அணிதல், கை சுத்திகரிப்பு போன்ற அனைத்து கொரோனா தடுப்பு வழிகாட்டுதல்களையும் பின்பற்ற வேண்டும் என்று வலியுறுத்தப்பட்டுள்ளது. இந்த தளர்வுகள் அனைத்தும் நாளை (பிப்.5) முதல் அமலுக்கு வர இருக்கிறது. இதற்கிடையில் அம்மாநிலத்தில் நேற்று (பிப்.3) ஒரு நாளில் 8,073 கொரோனா பாதிப்புகள் மற்றும் 22 இறப்புகள் பதிவாகி உள்ளது. இப்புதிய கொரோனா பாதிப்பு எண்ணிக்கையில் மாநில தலைநகர் ஜெய்ப்பூரில் அதிகபட்சமாக 1,862 பேருக்கு தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது கவனிக்கத்தக்கது.