விரைவில் நிறுத்தப்படும் கொரோனா காலர் ட்யூன்கள் – மத்திய அரசு தகவல்!
இந்தியாவில் கொரோனா நோய் தடுப்பு முன்னெச்சரிக்கைகள் மற்றும் தடுப்பூசி நடைமுறைகள் பற்றிய விழிப்புணர்வை ஏற்படுத்த அறிமுகம் செய்யப்பட்ட காலர் ட்யூன் அறிவிப்புகளை நிறுத்துமாறு மத்திய தொலைத் தொடர்புத்துறை கேட்டுக்கொண்டுள்ளது.
காலர் ட்யூன்கள்
நாடு முழுவதும் கடந்த 2020ம் ஆண்டு முதல் நிலவி வரும் கொரோனா நோய்த்தொற்று சூழலுக்கு மத்தியில் மக்களிடையே பாதுகாப்பு குறித்த முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளை கையாளுவதற்காக மத்திய அரசால் கொரோனா காலர் ட்யூன்கள் அறிமுகம் செய்யப்பட்டது. இருமலுடன் துவங்கும் இந்த காலர் ட்யூன்கள் ஒவ்வொரு அழைப்பிற்கு முன்பாகவும் கொரோனா பாதுகாப்பு நெறிமுறைகள், முகக்கவசம் அணிவது, சமூக இடைவெளியை கடைபிடிப்பது, தடுப்பூசிகள் அவசியத்தை உணர்த்துவது என மக்களை அறிவுறுத்தி வந்தது. இது ஒரு புறம் இருக்க மறுபக்கத்தில் அவசரத்திற்கு கால் செய்ய முடியாமல் இந்த காலர் ட்யூன்கள்களால் பலரும் அவதிப்பட்டு வந்தனர்.
TNPSC குரூப் 4 VAO தேர்வுக்கு விண்ணப்பிக்க உள்ளோர் கவனத்திற்கு – தலைவர் முக்கிய அறிவிப்பு!
ஒரு கட்டத்தில் கொரோனாவை விட இந்த காலர் ட்யூன்கள் அதிக பயத்தை உருவாக்குவதாக மக்கள் கருதினார்கள். அதனால், இப்போது நாடு முழுவதும் கொரோனா 3ம் அலைபாதிப்புகள் ஓய்ந்திருக்கும் சூழலில் இந்த காலர் ட்யூன் சேவைகளை நிறுத்துவதாக மத்திய அரசு தெரிவித்துள்ளது. அந்த வகையில் அனைத்து டெலிகாம் ஆபரேட்டர்களும் கொரோனா தொற்றுக்கு பாதுகாப்பிற்கான முந்தைய அழைப்பு அறிவிப்புகள் மற்றும் காலர் ட்யூன்களை திரும்பப் பெறுமாறு மத்திய தொலைத்தொடர்புத்துறை கேட்டுக் கொண்டுள்ளது.
இதற்கு முன்னதாக கொரோனா முன்னெச்சரிக்கைகள் மற்றும் தடுப்பூசி நடைமுறைகள் தொடர்பான விழிப்புணர்வை ஏற்படுத்தும் முயற்சியில், நிறுவனங்கள் கடந்த ஆண்டு முதல் இந்த காலர் ட்யூன்களை இயக்கி வருகின்றன. இதை நிறுத்துவது தொடர்பாக மார்ச் 29ம் தேதி வெளியிடப்பட்ட சுற்றறிக்கையில், ‘ஆபரேட்டர்களுக்கு கொரோனா முன் அழைப்பு அறிவிப்புகள் மற்றும் அழைப்பாளர் ட்யூன்களை செயல்படுத்துவதற்காக வழங்கப்பட்ட வழிமுறைகளை திரும்பப் பெறுவதற்கு சுகாதாரம் மற்றும் குடும்ப நல அமைச்சகத்தின் ஒப்புதல் பெறப்பட்டுள்ளது. அதன்படி, தொலைத்தொடர்பு சேவை வழங்குநர்கள், கொரோனா முன் அழைப்பு அறிவிப்புகள் மற்றும் அழைப்பாளர் டியூன்கள் அனைத்தையும் திரும்ப பெறுமாறு கேட்டுக் கொள்ளப்பட்டுள்ளனர்’ என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.