தமிழக கூட்டுறவு வங்கிகளில் நகைக்கடன் தள்ளுபடி – அடுக்கடுக்கான புகார்கள்! பயனர்கள் ஷாக்!
தமிழகத்தில் தற்போது பல்வேறு இடங்களில் நகைக்கடன் தள்ளுபடி வழங்கப்பட்டு வருகிறது. இதனை பெற்ற பயனாளிகள் தங்களின் நகைகள் மாறியுள்ளதாகவும், அத்துடன் இதில் பல்வேறு முறைகேடுகள் நடைபெறுவதாகவும் அடுக்கடுக்கான புகார்களை வைத்துள்ளனர். மேலும் இது குறித்து பாதிக்கப்பட்ட பெண்கள் கூறியவற்றை விரிவாக பார்ப்போம்.
நகைக்கடன் தள்ளுபடி:
தமிழகத்தில் கடந்த ஆண்டு செப்டம்பர் மாதத்தில் கூட்டுறவு வங்கிகளில் 5 சவரனுக்கு உட்பட்ட நகைக்கடன் பெற்றவர்களுக்கு கடன் தள்ளுபடி செய்யப்படும் என்று தமிழக முதல்வர் அறிவித்திருந்தார். ஆனால் தள்ளுபடி வழங்குவதில் பல்வேறு முறைகேடுகள் தொடர்ந்து நடைபெறுவதாக புகார்கள் எழுந்தது. இது தொடர்பாக பல்வேறு ஆய்வுகள் நடத்தப்பட்டது. இதில் வங்கி அதிகாரி உட்பட இந்த முறைகேடுக்கு உடந்தையாக இருப்பது கண்டறியப்பட்டது. அதன்படி பெரும்பாலானோர் போலி நகைகளை அடமானம் வைத்து நகைக்கடன் பெறுவது, ஒரே நபர் ஒன்றுக்கு மேற்பட்ட வங்கிகளில் நகைக்கடன் பெறுவது உள்ளிட்ட பல்வேறு வகையான முறைகேடுகள் ஆய்வில் கண்டறியப்பட்டது.
மதுரை மக்களுக்கு ஹாப்பி நியூஸ் – மீனாட்சி அம்மன் திருக்கல்யாணம் குறித்த சூப்பர் அறிவிப்பு!
அதனால் தள்ளுபடிக்கு பல்வேறு நிபந்தனைகளை அரசு அறிவித்து இந்த நிபந்தனைக்கு உட்பட்டவர்களுக்கு தள்ளுபடி வழங்க வேண்டும் என்று அரசு உத்தரவு பிறப்பித்தது. அதன்படி தமிழகத்தில் நகைக்கடன் தள்ளுபடிக்கு 48 லட்சத்திற்கும் மேற்பட்டவர்கள் உள்ளனர். ஆனால் 14 லட்ச பேருக்கு மட்டுமே நகைக்கடன் தள்ளுபடி செய்யப்படும் என்று பட்டியல் வெளியானது. அதன்படி தற்போது பல்வேறு இடங்களில் நகைக்கடன் தள்ளுபடி வழங்கும் பணி தீவிரமாக நடைபெற்று கொண்டிருக்கிறது. அதன் தொடர்ச்சியாக சிவகங்கை மாவட்டம் மானாமதுரை அருகே கீழப்பசலை தொடக்க கூட்டுறவு கடன் சங்கத்தில் கடன் பெற்றவர்களில் தகுதியான நபர்களுக்கு தள்ளுபடி வழங்கப்பட்டு வருகிறது.
அதன்படி அவர்களுக்குரிய நகைகளும், தள்ளுபடிக்கான சான்றிதழ்களும் வழங்கப்பட்டு வருகிறது. இதில் பல்வேறு முறைகேடுகள் நடைபெறுவதாக பயனாளிகள் புகார் அளித்துள்ளனர். இதில் பாதிக்கப்பட்ட பெண்கள் கூறியதாவது, நகைக்கடன் தள்ளுபடி பெறப்பட்டதில் தங்களின் நகைக்கு பதிலாக வேறு ஒரு நகை வழங்கப்பட்டுள்ளதாக தெரிவித்துள்ளார். அத்துடன் அடமானம் வைக்கப்பட்ட நகைகளை தனியார் நிதி நிறுவனத்தில் மறுஅடகு வைத்துள்ளனர். மேலும் ஒரே நபருக்கு 4 கடன் தள்ளுபடி செய்யப்பட்டுள்ளது. இதனை தொடர்ந்து கூட்டுறவு சங்கத்தில் பணிபுரிபவர்கள் மற்றும் அரசு ஊழியர்கள் உள்ளிட்டவர்களுக்கு தள்ளுபடி வழங்கப்பட்டுள்ளது என்று அடுக்கடுக்கான புகார்கள் அளித்துள்ளனர்.