தமிழகத்தில் பிப்.1 முதல் கல்லூரிகள் திறப்பு – ஆன்லைனில் செமஸ்டர் தேர்வுகள்! அமைச்சர் அறிவிப்பு!
தமிழகத்தில் பிப்ரவரி 1ம் தேதி முதல் பள்ளிகள் மற்றும் கல்லூரிகளில் நேரடி வகுப்புகள் துவங்கும் என்று அறிவிக்கப்பட்டுள்ள நிலையில்,கல்லூரி மாணவர்களுக்கு திட்டமிட்டபடி தேர்வுகள் ஆன்லைன் மூலம் நடத்தப்படும் என்று அமைச்சர் பொன்முடி தகவல் அளித்துள்ளார்.
கல்லூரிகள் திறப்பு
தமிழகம் முழுவதும் தற்போது ஊரடங்கில் இருந்து தளர்வுகளை அளித்துள்ள அரசாங்கம், பள்ளிகள் மற்றும் கல்லூரிகளை பிப்ரவரி 1ம் தேதி முதல் மீண்டும் திறக்க அனுமதி அளித்துள்ளது. இதற்கு முன்னதாக தமிழகத்தில் கடந்த 6ம் தேதி முதல் அமல்படுத்தப்பட்டிருந்த இரவு நேர ஊரடங்கு மற்றும் வார இறுதி முழு முடக்கம் ஆகிய கட்டுப்பாடுகளை தொடர்ந்து பள்ளிகள் மற்றும் கல்லூரிகள் அனைத்தும் முழுமையாக மூடப்பட்டது. பள்ளி மாணவர்களுக்கு வழக்கம் போல ஆன்லைன் மூலம் வகுப்புகள் நடத்தப்பட்டு வந்தது.
அதே நேரத்தில் கல்லூரிகளுக்கு ஜனவரி 31ம் தேதி வரை முழுமையான விடுமுறையை அறிவித்த அரசாங்கம், மாணவர்கள் தேர்வுக்கு தயாராகும் படி அறிவுறுத்தியிருந்தது. இதற்கிடையில் கல்லூரி மாணவர்ளுக்கான செமஸ்டர் தேர்வுகளை ஆன்லைனில் நடத்த அரசு முடிவு செய்தது. இதற்கிடையில் தற்போது தமிழகம் முழுவதும் ஊரடங்கு கட்டுப்பாடுகளில் இருந்து தளர்வுகளை அளித்துள்ள அரசாங்கம், பிப்ரவரி 1ம் தேதி முதல் பள்ளி, கல்லூரிகளை மீண்டுமாக திறக்க அனுமதி அளித்துள்ளது.
திருப்பதி தரிசனம் செல்ல திட்டமிடுவோருக்கு முக்கிய அறிவிப்பு – பிப்ரவரி மாத டிக்கெட்! இன்று வெளியீடு!
இந்நிலையில் பிப்ரவரி 1 முதல் கல்லூரிகள் திறக்கப்பட்டாலும், ஏற்கனவே அறிவித்ததை போல செமஸ்டர் தேர்வுகள் ஆன்லைனில் நடத்தப்படும் என்று உயர்கல்வித்துறை அமைச்சர் பொன்முடி தெரிவித்துள்ளார். இது குறித்து செய்தியாளர்களை சந்தித்த அமைச்சர் பொன்முடி கூறுகையில், ‘தமிழகத்தில் கல்லூரிகள் அனைத்தும் பிப்ரவரி 1 முதல் மீண்டுமாக திறக்கப்பட்டாலும், செமஸ்டர் தேர்வுகள் ஆன்லைன் மூலம் நடத்தப்படும். இதனால் தேர்வு குறித்த குழப்பங்கள் எதுவும் தேவையில்லை.
ஏற்கனவே அறிவிக்கப்பட்டது போல, 1,3 மற்றும் 5வது செமஸ்டர் தேர்வுகள் ஆன்லைனில் நடத்தப்படும். என்றாலும் செய்முறை தேர்வுகளை கவனத்தில் கொண்டு பிப்ரவரி 1 முதல் கல்லூரிகள் திறக்கப்பட உள்ளன. அதனால் தேர்வு இல்லாத சமயங்களில் மாணவர்கள் செய்முறை தேர்வுக்காக கல்லூரிக்கு வருகை தரலாம்’ என்று குறிப்பிட்டுள்ளார். அந்த வகையில் மாணவர்களுக்கான செமஸ்டர் தேர்வுகள் பிப்ரவரி 1 முதல் 20 வரையும் ஆன்லைன் மூலம் நடத்தப்பட உள்ளது.
ஆனால் இறுதியாண்டு மாணவர்களுக்கான இறுதி செமஸ்டர் தேர்வுகள் மட்டும் நேரடி முறையில் நடத்தப்பட இருக்கிறது. இப்போது தமிழகத்தில் கொரோனா பாதுகாப்பு மையங்களாக செயல்படும் பள்ளி, கல்லூரிகளை தவிர்த்து மற்ற அனைத்து அரசு மற்றும் தனியார் பல்கலைக்கழகங்கள், கல்லூரிகள், தொழில் பயிற்சி மற்றும் பயிற்சி நிலையங்கள் நிலையான வழிகாட்டு நெறிமுறைகளை பின்பற்றி பிப்ரவரி 1ம் தேதி முதல் திறக்கப்படும் என்று அறிவிக்கப்பட்டுள்ளது குறிப்பிடத்தக்கது.