2வது நாளாக தொடரும் தூய்மை பணியாளர்களின் வேலை நிறுத்த போராட்டம் – முக்கிய கோரிக்கைகள் முன்வைப்பு!
மதுரை மாநகராட்சியில் உள்ள 100 வார்டுகளில் 10 ஆயிரத்துக்கும் மேற்பட்ட தூய்மை பணியாளர்கள் மற்றும் பொறியியல் பிரிவு பணியாளர்கள் பணியாற்றி வருகின்றனர். இந்நிலையில் அவர்கள் பலவிதமான கோரிக்கைகளை முன்வைத்து 2-வது நாளாக போராட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனர்.
வேலை நிறுத்த போராட்டம்:
மதுரை மாநகராட்சி தொழிலாளர்கள் சங்கம், தமிழ்நாடு சுகாதார பணியாளர்கள் முன்னேற்ற சங்கம், துப்புரவு தொழிலாளர்கள் மேம்பாட்டு சங்கம் சார்பில் தூய்மை பணியாளர்கள் மற்றும் பொறியியல் பிரிவு பணியாளர்கள் என 6000 க்கும் மேற்பட்டோர் பெரியார் பேருந்து நிலையம் அருகேயுள்ள மேலவாசல் பகுதியில் தொடர்ந்து 2வது நாளாக காலவரையற்ற வேலைநிறுத்தப் போராட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனர். இதனால் நகரம் முழுவதும் 2 நாட்களாக குப்பைகள் அகற்றப்படாததால், குப்பைகள் ஆங்காங்கே மலை போல குவிந்து காணப்படுகிறது.
Exams Daily Mobile App Download
தினக்கூலி தொழிலாளர்களை நிரந்தரம் செய்ய வேண்டும், நிரந்தர பணியாளர்களுக்கு 7வது ஊதியக் குழு பணப்பலன்களை வழங்க வேண்டும், கொரோனா நிவாரண தொகையாக 15,000 வழங்க வேண்டும், ஒப்பந்த பணியாளர்களுக்கு தின ஊதியம் 625 ரூபாய் வழங்க வேண்டும், தூய்மை பணியாளர்கள் 4 மணி நேரத்திற்கு ஒரு முறை வருகை பதிவேட்டில் கையெழுத்திடும் உத்தரவை கைவிட வேண்டும் உள்ளிட்ட 28 அம்ச கோரிக்கைகளை முன்வைத்து தான் இந்த காலவரையற்ற வேலை நிறுத்த போராட்டத்தில் துப்புரவு பணியாளர்கள் ஈடுபட்டுள்ளனர்.
மதுரை மாநகராட்சியை பொறுத்தவரையில் மொத்தம் 100 வார்டுகள் உள்ளது, சுமார் 17 லட்சம் மக்கள் வசிக்கக்கூடிய மதுரை மாநகராட்சியில் அவர்கள் பயன்படுத்தி கொட்டப்படும் 1700 டன் அளவிலான குப்பைகள் அகற்றப்படாமல் தேங்கி அப்படியே கிடக்கிறது. ஏற்கனவே, வேலை நிறுத்தம் நடைபெறும் என்று மாநகராட்சிக்கு நோட்டீஸ் வழங்கப்பட்ட நிலையில், இது தொடர்பாக, கடந்த 24 ஆம் தேதி தொழிலாளர் நலத்துறை ஆணையரிடம் பேச்சு வார்தையானது நடைபெற்றது. இதை அடுத்து நான்கு கட்ட பேச்சு வார்த்தையில் ஈடுபட்ட நிலையில் எந்த ஒரு முடிவும் எட்டப்படவில்லை என்பது குறிப்பிடத்தக்கது. தொழிலாளர்களின் இந்தப் போராட்டத்தினால் மதுரை மாநகரில் குடிநீர் விநியோகம், தூய்மை பணி உள்ளிட்ட பல்வேறு பணிகள் பாதிக்கும் நிலை ஏற்பட்டுள்ளதாக மக்கள் வேதனை தெரிவிக்கின்றனர்.