10 மற்றும் 12 ம் வகுப்பு பொதுத்தேர்வுகள் ரத்து – மாநில அரசு அறிவிப்பு!
மேற்கு வங்க மாநிலத்தில் 10 மற்றும் 12 ஆம் வகுப்பு தேர்வுகளை ரத்து செய்வதாக முதல்வர் மம்தா பானர்ஜி அறிவித்துள்ளார். மேலும் அம்மாணவர்களுக்கு மதிப்பெண்களை வழங்க விரைந்து நடவடிக்கை எடுக்கும்படி அதிகாரிகளுக்கு உத்தரவிடப்பட்டுள்ளது.
தேர்வுகள் ரத்து:
கொரோனா பெருந்தொற்றுக்கு மத்தியில் பொதுத்தேர்வுகளை நடத்த முடியாத சூழல் நிலவுவதால், 10 மற்றும் 12 ஆம் வகுப்பு மாணவர்களுக்கான தேர்வுகளை ரத்து செய்வதாக மேற்குவங்க முதல்வர் மம்தா பானர்ஜி அறிவித்துள்ளார். மேலும் இந்த மாணவர்களுக்கான மதிப்பீட்டு முறைகள் குறித்து கல்வி நிபுணர்கள் மற்றும் கல்வித்துறை அதிகாரிகளுடன் கலந்தாலோசித்த பின்னர் நிர்ணயிக்கப்படும் என்றும் அவர் தெரிவித்துள்ளார். தவிர மாணவர்களின் மதிப்பெண் உள்ளிட்ட முடிவுகள் குறித்து ஏழு நாட்களுக்குள் அறிவிக்கப்படும் என மேற்குவங்க அரசுத்துறை வட்டாரங்கள் தெரிவித்துள்ளது.
TN Job “FB Group” Join Now
இது குறித்து மேற்கு வங்க முதல்வர் மம்தா பானர்ஜி செய்தியாளர்களிடம் பேசுகையில், ‘கல்வி அதிகாரிகளுடன் கலந்தாலோசித்த பின்னர் 10 மற்றும் 12 ஆம் வகுப்பு பொதுத்தேர்வுகளை ரத்து செய்யும் முடிவு எடுக்கப்பட்டுள்ளது. இதற்கு முன்னதாக பொது மக்களிடம் தேர்வுகளை நடத்துவது குறித்தான கருத்துக்கள் ஆன்லைன் போல் வழியாக பெறப்பட்டது. அந்த வகையில் 34 ஆயிரம் மின்னஞ்சல்கள் அரசுக்கு கிடைத்தது. அவற்றில் 79 சதவீதம் பேர் தேர்வுகளை ரத்து செய்ய வேண்டும் என்றும் 83 சதவீதம் பேர் தேர்வுகளுக்கு எதிராகவும் கருத்து தெரிவித்திருந்தனர்’ என விளக்கம் கொடுத்துள்ளார்.
செப்.19 முதல் UAE இல் துவங்கும் ஐபிஎல் தொடர்? வெளியான தகவல்!
இதற்கு முன்னதாக ஜூன் 3 ஆம் தேதி, பொதுத்தேர்வுகளை நடத்துவதற்கான சாத்தியக்கூறுகளை கண்டறிய, மாநில குழந்தைகள் உரிமை பாதுகாப்பு குழுவின் தலைவர், மருத்துவர் மற்றும் கல்வியாளர்கள் அடங்கிய நிபுணர் குழுவை, மாநில அரசு அமைத்தது. அதன் பின்னாக முதலமைச்சர் மம்தா பானர்ஜி அறிவித்தபடி ஆகஸ்ட் இரண்டாவது வாரத்தில் பொதுத்தேர்வுகளை நடத்த திட்டமிடப்பட்டிருந்தது. இந்த நிலையில் 12 லட்சத்துக்கும் மேற்பட்ட 10 ஆம் வகுப்பு மாணவர்களும், 8.5 லட்சத்துக்கும் மேற்பட்ட 12 ஆம் வகுப்பு மாணவர்களும் கலந்து கொள்ள இருந்த பொதுத்தேர்வுகள் ரத்து செய்யப்பட்டுள்ளது குறிப்பிடத்தக்கது.