எச்சரிக்கை.. சென்னையில் குழந்தைகளுக்கு அதிகரிக்கும் நுரையீரல் பாதிப்பு – மருத்துவ நிபுணர்கள் வார்னிங்!!
சென்னையில் குழந்தைகளுக்கு நுரையீரல் பாதிப்பு ஏற்படுவது அதிகரித்த வண்ணம் உள்ளது. அதனால் பெற்றோர்கள் கவனமுடன் இருக்க வேண்டும் என்று மருத்துவ நிபுணர்கள் எச்சரித்து வருகின்றனர். மேலும் இது தொடர்பாக மருத்துவர்கள் வழங்கியுள்ள அறிவுரைகள் குறித்து பார்ப்போம்.
நுரையீரல் பாதிப்பு
பொதுவாக தமிழகத்தில் சளி மற்றும் இருமல் பாதிப்பு டிசம்பர் மாதம் 2வது வாரத்திற்கு பிறகு குறைய தொடங்கும். ஆனால் தற்போது நேர்மாறாக, பெரும்பாலான குழந்தைகளுக்கு சளி, இருமல் பாதிப்பு ஏற்படுவதுடன், நுரையீரல் பாதிப்பு மற்றும் சுவாச நோய் தொற்று இருப்பதாகவும் மருத்துவர்கள் வருத்தம் தெரிவிக்கின்றனர். மேலும் இது தொடர்பாக மருத்துவர்கள் கூறியதாவது, சென்னையில் அரசு மற்றும் தனியார் மருத்துவமனைகளில் நாள்தோறும் 60% குழந்தைகள் சளி, இருமலால் சிகிச்சைக்காக வருகின்றனர்.
தமிழகத்தில் குட்கா, பான் மசாலா, புகையிலை பொருட்களுக்கு தடை – உயர்நீதிமன்றத்தின் முக்கிய உத்தரவு!
மேலும் இவர்களில் பெரும்பாலானோருக்கு சுவாச கோளாறுகளும் நுரையீரல் தொற்றுகளும் இருப்பது கண்டறியப்பட்டுள்ளது. தற்போது குளிர்ச்சியான தட்பவெப்ப நிலை நிலவுவதால் குழந்தைகளுக்கு நோய் எதிர்ப்பு சக்தி குறைந்து கொண்டு வருகிறது. இதுவே குழந்தைகளுக்கு ஏற்படும் நுரையீரல் தொற்றிற்கு முக்கிய காரணம் என கூறியுள்ளனர். மேலும் சுவாச கோளாறுகள் கொரோனா வைரஸ் மற்றும் வேறு பிற வைரஸ்களாலும் ஏற்பட்டுள்ளதாக தெரிவித்துள்ளனர்.
அதனால் குழந்தைகளின் பெற்றோர் கவனமுடன் இருக்க வேண்டும் என்றும் சளி, காய்ச்சல், இருமல், தொண்டை வலி உள்ளிட்ட பாதிப்புகள் இருக்கும் குழந்தைகளை பள்ளிகளுக்கு அனுப்பக்கூடாது என்றும் மருத்துவர்கள் அறிவுறுத்தி வருகின்றனர். மேலும் ஐந்து வயதிற்குட்பட்ட குழந்தைகளுக்கு ஆண்டுக்கு ஒரு முறை புளு காய்ச்சல் தடுப்பூசி செலுத்துக் கொள்ள வேண்டும் என்றும் பெற்றோர்களுக்கு அறிவுரை வழங்கியுள்ளனர்.