தமிழக அரசு பள்ளி மாணவர்களுக்கான எண்ணும், எழுத்தும் கற்றல் திட்டம் – தொடங்கி வைக்கிறார் முதல்வர் !
கொரோனா பெருந்தொற்றால் அதிகம் பாதிக்கப்பட்டது பள்ளி மாணவர்கள் தான். இந்நிலையில் ,மாநிலம் முழுவதும் உள்ள பள்ளிகள் கோடை விடுமுறைக்கு பின் இன்று திறக்கப்படுகிறது. இதையடுத்து 2025 ஆம் ஆண்டுக்குள் மாணவர்கள் அடிப்படை எழுத்தறிவு மற்றும் எண்ணறிவைப் பெறவேண்டும் என்ற நோக்கத்தில் திட்டமிடப்பட்டு உள்ள ‘எண்ணும், எழுத்தும் கற்றல் திட்டத்தை’ இன்று முதல்வர் மு.க.ஸ்டாலின் தொடங்கி வைக்கிறார் என்பது குறிப்பிடத்தக்கது.
எண்ணும், எழுத்தும் கற்றல் திட்டம்:
தமிழகத்தில் கொரோனா வைரஸ் காரணமாக கடந்த 2 ஆண்டுகளாக பள்ளிகள் சரியாக திறக்கப்படவில்லை. இதனால் மாணவர்கள் இடையே அதிக கற்றல் இடைவெளி ஏற்பட்டது. மேலும் பல மாணவர்களுக்கு எழுத்துக்கள் மறந்து விட்டன. அந்த வகையில் 1,2 ஆம் வகுப்பு மாணவர்கள் படிக்காமலேயே ஆல் பாஸ் மூலம் 3 ஆம் வகுப்புக்கு சென்றுள்ளனர். இதனால் 8 வயதுக்கு உட்பட்ட அரசுப் பள்ளி மாணவர்கள் அடிப்படை கணிதத் திறனுடன், பிழையின்றி எழுத, படிப்பதை உறுதி செய்யும் விதமாக ‘எண்ணும், எழுத்தும்’ திட்டத்தை செயல்படுத்த பள்ளிக்கல்வித்துறை திட்டமிட்டுள்ளது.
TN Job “FB Group” Join Now
இதன் அடிப்படையில், தமிழகத்தில் உள்ள அனைத்து அரசு மற்றும் அரசு உதவி பெறும் தொடக்க மற்றும் நடுநிலைப் பள்ளிகளில் 1, 2, 3ஆம் வகுப்புகளுக்கு 2022-23 ஆம் ஆண்டில் இருந்து எண்ணும் எழுத்தும் என்ற திட்டம் நடைமுறைப்படுத்தப்பட்டு உள்ளது. இந்த திட்டத்திற்கு மாநில அளவிலான பயிற்சி நடைபெற்றது. இதற்காக அரசு மற்றும் நிதியுதவி பெறும் பள்ளிகளில் 1 முதல் 5-ம் வகுப்பு வரைபாடம் கற்பிக்கும் ஆசிரியர்களுக்கு ஏற்கனவே உயர் தொழில்நுட்ப ஆய்வகம் உள்ள உயர்நிலை, மேல்நிலை பள்ளிகளில் பயிற்சி வழங்கப்பட்டது.
இந்நிலையில் இன்று கோடை விடுமுறை முடிந்து 1 முதல் 10ம் வகுப்பு வரையான மாணவர்களுக்கு பள்ளிகள் மீண்டும் திறக்கப்பட உள்ளன. மேலும் இந்த கல்வியாண்டில் இருந்து கொரோனா கால அட்டவணை போல அல்லாமல், வழக்கம் போல் பள்ளிகள் செயல்படத் தொடங்கும் என்று பள்ளிக்கல்வித்துறை சார்பில் தெரிவிக்கப்பட்டு உள்ளது. பள்ளி திறக்கப்படும் முதல் நாளான இன்று எண்ணும், எழுத்தும் திட்டத்தையும் அமல்படுத்த முடிவாகியுள்ளது. இந்த திட்டத்தை முதல்வர் மு.க.ஸ்டாலின் திருவள்ளூர் மாவட்டம் புழல் ஒன்றியம் அழிஞ்சியம்பாக்கம் ஊராட்சி ஒன்றிய நடுநிலைப் பள்ளியில் தொடங்கி வைக்கிறார். இந்நிகழ்வில் பள்ளிக்கல்வித்துறை அமைச்சர் அன்பில் மகேஷ் பொய்யாமொழி, பால்வளத்துறை அமைச்சர் சா.மு.நாசர் மற்றும் கல்வித் துறை அதிகாரிகள் பங்கேற்கின்றனர்.